இந்த வாரம் நான்கு வெவ்வேறான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் மூலமாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம், சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி விவகாரங்கள் இரண்டிலும் வரி ஏய்ப்பவர்களுக்கான அமலாக்க நடைமுறைகளை மாற்றியமைத்திருக்கிறது. முதலாவதாக சுங்கவரி சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டுவதற்கும் கைது செய்வதற்குமான பண வரம்பை குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருக்கிறது. தனியாக, ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கோ அழைப்பாணை அனுப்பவதற்கோ ஜி.எஸ்.டி அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களையும் விரிவாக வெளியிட்டிருக்கிறது. தற்போது ஜி.எஸ்.டி சட்டத்தில் உட்படுத்தப்பட்டிருக்கும் மத்திய கலால் வரி போன்று நீண்ட காலமாக அமலில் உள்ள சட்டங்களுக்கு இது போன்ற வழிகாட்டுதல்கள் இருந்தாலும், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் இந்தப் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டிய தேவை இருந்ததாக நினைத்தது.
அழைப்பாணைக்கான சரிபார்ப்பு பட்டியலில் ஏற்கனவே ஜி.எஸ்.டி இணையத்தளத்தில் உள்ள ஆவணங்களை கொண்டு வருவதற்குகூட அந்தந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டி, முதல் வாய்ப்பிலேயே செயல் இயக்குனர்களும், தலைமை அனுபவ அதிகாரிகளும் அழைக்கப்படகூடாது என்கிறது. வரி ஏய்ப்பில் அவர்களது பங்களிப்பு தெளிவான பிறகே அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல் சொல்கிறது. அதிகாரம் சரியான முறையிலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிசெய்ய அழைப்பாணை அனுப்புவதற்கான காரணங்களை அதிகாரிகள் ஆவணப்படுத்துவதற்கான ஒரு ஒப்புதல் முறையை கொண்டு வரலாம் என்கிற கருத்தையும் அது முன் வைத்திருக்கிறது. வெறும் கடிதங்கள் போதுமா என்பதைப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஜி.எஸ்.டி குற்றங்களுக்கான கைது மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டிருந்தாலும் அந்த வழிகாட்டும் நெறிமுறைகள், ‘வழக்கமான இயந்திரத்தனமான கைதுகளை’ தவிர்க்கும் வகையில் விரிவாகவே இருக்கிறது. கைதுக்கான முன் நிபந்தனைகளில் குற்றம் செய்யப்பட்டதற்கு நம்பும்படியான ஆதாரம் இருக்க வேண்டும் என்று ஒரு வழிகாட்டுதல் இருக்கிறது. வரி ஏய்க்கும் நோக்கம் அல்லது வரி சலுகைகளை தவறாக அனுபவிக்கும் எண்ணம் தெளிவாக இருப்பதை பொறுத்துத்தான் கைதுக்கான அனுமதி வழங்குவது இருக்கும். தவிர குற்றம் செய்யும் நோக்கம் அல்லது குற்றவுணர்வுள்ள மனம் தெளிவாக இருக்கிறதா என்பதை பொறுத்தும் இந்த அனுமதி வழங்கப்படும்.
வரி விதிப்பு பற்றிய கருத்து வேறுபாடுகள் கைது நடவடிக்கையில் முடிய கூடாது என்று வாரியம் சொல்லியிருக்கிறது. தனி நபர் உரிமை சார்ந்து இருப்பதால் கைது செய்வதற்கான அதிகாரத்தை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதை வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. ஒருவரைக் கைது செய்ய முடியும் என்பதாலேயே கைதுசெய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்துக்கு எதிர்வினை ஆற்ற வாரியம் ஒரு வருடம் எடுத்துக்கொண்டாலும், அதன் சமீபத்திய உத்திரவுகள், புதிய வகையான வரி குறித்த பயங்களை கொண்ட, ஜி.எஸ்.டி வரி செலுத்துபவரின் அச்ச உணர்வுகளை ஆற்றுப்படுத்தும்.
வரி விலக்குகள் அளிப்பதிலும், முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருளைவிட, இடு பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதிலும் செய்ய வேண்டிய சரிசெய்யும் பணிகளை ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும், இன்னும் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த வரி முறையில் வருவாயை அதிகமாக்கும் எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட பன்மடங்கு வரி விகிதங்களில் உள்ள சிக்கல்களையும் சரிசெய்யவேண்டும். மேலும், இந்தச் சட்டத்துக்கு உடன்படுவதில் உள்ள பிரச்னைகளை எளிமைப்படுத்துவதும் முக்கியம். எது பிரச்னைக்குரியது என்பதில் வரி கட்டுபவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போதும் முரண்கள் இருக்கலாம். வரி தாக்கல் செய்வதில் தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் நிகழலாம். ஆனால் அவை தவறான நோக்கத்தில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டியதில்லை. சில வரி செலுத்துபவர்கள் உண்மையிலேயே வரி செலுத்தாமல் இருக்க செய்யும் திட்டங்களிலிருந்து இதை வேறுப்படுத்தி பார்க்க வேண்டியதும், திட்டமிட்டே தவறு செய்பவர்களை ஒரு சரியான முறை மூலம் சட்டத்தின் முன் நிறுத்துவதும், ஜி.எஸ்.டியை கவலைப்பட வேண்டிய ஒரு புதிய பிரச்னையாக இல்லாமல் உண்மையிலேயே தொழில்களுக்கான நல்ல மற்றும் எளிமையான வரியாக மாற்றி விடும்.
This editorial in Tamil has been translated from English which can be read here.