லஷ்கர் - இ - தொய்பாவின் தளபதிகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் வைத்த முன்மொழிவுகளை தடுக்கும் சீனாவின் முடிவு, மிகவும் வழக்கமாகிப்போன ஒரு வடிவத்தின் பகுதி. ஜூன் மாதத்திலிருந்து இந்தியாவும் அமெரிக்காவும் ஐந்து முன்மொழிவுகளை வைத்திருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் சீனா தடையை ஏற்படுத்தி வந்திருக்கிறது. ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ரவூப் அஸ்கர் மற்றும் லஷ்கர் - இ - தொய்பா தலைவர்கள் அப்துர் ரஹ்மான் மக்கி (ஹபீஸ் சயீத்தின் மைத்துனர்), 26/11 தாக்குதலை கையாண்ட சஜித் மிர் மற்றும் மிக சமீபத்தில் அந்த தீவிரவாத அமைப்பின் ஆட்சேர்க்கைக்கும் நிதிச் சேர்க்கைக்கும் பொறுப்பான தல்ஹா சயீத் (ஹபீஸ் சயீத்தின் மகன்) மற்றும் ஷாஹித் மெஹ்மூத் ஆகியோரை பட்டியலில் சேர்க்க கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. இவர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் பயங்கரவாத பட்டியலின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அல்லது அமெரிக்க கருவூலப் பட்டியல்களிலும் இடம் பெற்றிருப்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நாவால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெயிஷ்-இ-முகமது நடத்திய தாக்குதல்களில் தொடர்பு இருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள். தவிர இந்தியாவில் ஐசி - 814 விமானக் கடத்தல், நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பையின் நவம்பர் 26 தாக்குதல் தொடங்கி பதான்கோட், யுரி மற்றும் புல்வாமா வரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் பொறுப்பானவர்கள். இந்த நிலையிலும் பட்டியலில் இணைக்க வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு சீனா தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து, கோரிக்கைகளின் மீது தடை வைத்து வருகிறது. சர்வதேச பயங்கரவாத -எதிர்ப்பு சூழலில் அது எப்படிப்பட்ட பிம்பமாய் வெளிப்படும் என்பது பற்றிய அக்கறையின்றி, இந்தியாவின் வலுவான விமர்சனம் சொல்வதுபோல பாகிஸ்தான் மீது தனக்கு இருக்கும் ‘அரசியல் சாய்வின்’ காரணமாக இம்மாதிரி நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் இந்தியாவுக்கு மூன்று தெளிவான வாய்ப்புகள் இருக்கின்றன: சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கு இணங்கும் வரையில் அரசு தனது முயற்சியை கைவிடலாம். அல்லது சீனா தடுக்கும் என்று தெரிந்தும் பயங்கரவாத பட்டியலுக்கான கோரிக்கைகளை ஐ.நா. முன்பு தொடர்ந்து வைப்பதன் மூலம், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்ற முறையில் சீனா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை காட்டலாம். ஆனால், இந்த இரண்டு வாய்ப்புகளும், பயங்கரவாதக் குழுக்களின் எஞ்சிய தலைமைகளை பட்டியலுக்குள் கொண்டு வரும் இந்தியாவின் இலக்கை உறுதி செய்யாது. இருதரப்புக்கும் இடையில் உள்ள பிற பிரச்னைகளை தள்ளி வைத்துவிட்டு, பயங்கரவாத பிரச்னையில் சர்வதேச ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் வகையில் சீனாவுடன் ஒரு ராஜதந்திர தொடர்பை ஏற்படுத்தி, தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய சீனாவை தூண்டுவது இன்னொரு வாய்ப்பு. இந்த வாய்ப்பு கடினமானதாகவோ கிட்டத்தட்ட நிறைவேற்ற முடியாததாகவோ தோன்றலாம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 2012ல் தொடங்கி 2015 வரையிலும் பின்னர் 2018ல் தொடங்கி தற்போது வரையிலும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) “சாம்பல் பட்டியலில்” பாகிஸ்தானை வைக்க சீனா நிர்பந்திக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று நிதி நடவடிக்கை பணிக் குழுவின் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவுடன் தனக்கு இருக்கும் எல்லா வாய்ப்புகளையும் இந்தியா பரிசீலிக்க வேண்டும். அதன் மூலம் இந்தியாவின் மீது ஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.