இங்கிலாந்துக்கும் அதன் முன்னாள் குடியேற்ற நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாகவே இருக்கின்றன என்பதைப் பறைசாற்றுவதற்காக நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டுகளில், எதற்காக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்ற பாரம்பரியம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாம். தவிர, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளாத நிலையில், காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுகளை விட சற்று குறைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், கண்டங்களால் பிரிந்திருந்தாலும் ஆங்கிலேய முடியாட்சியுடன் தங்களுக்கு இருந்த தொடர்பின் மூலம் ஒருங்கிணையும் பல நாடுகள் பங்கேற்று, நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டு போட்டிகள் என்பதால் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் புகழ்பெற அது இன்னொரு வாய்ப்பை தருகிறது. ரசிகர்கள் கூடுதல் உத்வேகத்துடன் விளையாட்டுகளை முயற்சி செய்ய அது ஊக்கமளிக்கிறது.
திங்கள் கிழமை அன்று பிர்மிங்ஹாமில் முடிவுற்ற சமீபத்திய காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 22 தங்கம் உள்பட 62 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா, போட்டியை நடத்திய இங்கிலாந்து, கனடா ஆகியவை முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றன. துப்பாக்கி சுடுதல் போட்டி காமன்வெல்த் போட்டிகளில் நீக்கப்பட்ட நிலையில், கூடுதல் பதக்கங்களை இந்தியா வெல்ல முடியாமல் போனது. பல இந்தியப் பதக்கங்களுக்குப் பின்னால், நம்பிக்கை, கடும் உழைப்பு, விடா முயற்சியால் எழுதப்பட்ட கதைகள் இருந்தன. 40 வயதிலும் டேபிள் டென்னிஸில் ஷரத் கமல் பெற்ற வெற்றிகள், இறுதிக் கட்டத்திலும்கூட விளையாட்டு வீரர்கள் போரிடலாம் என்பதை சுட்டிக்காட்டியது. 55 கிலோ பிரிவில் பளு தூக்கும் வீரர் சங்கேத் சர்கார் பெற்ற வெள்ளிப் பதக்கம், ஒரு கவனம் சிதறாத வீரனை பொருளாதார நெருக்கடிகள் வீழ்த்திவிடாது என்பதை உணர்த்தியது. நான்கு வருடங்களுக்கு முன்பு சங்கேத் மகராஷ்டிராவில் உள்ள சங்கிலியில் ஒரு சின்ன கடையில் பீடா விற்றுக் கொண்டிருந்தார். அவரது கதை போற்றப்பட வேண்டியது.
73 கிலோ பிரிவில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீரர் அசிந்தா ஷியுலிக்கும் இப்படி ஒரு தனிப்பட்ட கதை இருக்கிறது. அவரது சகோதரர் அலோக்கும் அம்மாவும் எம்பிராயட்ர்ரி செய்பவர்கள். மீட்சியையும் நம்பிக்கையும் தரும் கதை அசிந்தாவினுடையது. புதிய வீரர்கள் கடினமான சூழல்களை தாண்டி வெற்றி பெற்றதன் மூலம் கவனத்தை கவர்ந்தார்கள் என்றால் புகழ்பெற்ற வீரர்களும் தங்களது திறமைகளை மீண்டும் வலுவாக வெளிப்படுத்தினார்கள். இப்போது இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக கருதப்படும் பி.வி. சிந்து, மகளிர் ஒற்றையருக்கான பேட்மிண்டனில் தங்கம் வென்றார் என்றால் அவரது ஆண் சகா லக்ஷய சென் தனது சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டினார்.
இந்திய வீரர்கள் புதிய களங்களையும் வசப்படுத்திக் காட்டினார்கள். ஆப்பிரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீப்பள்சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் அவினாஷ் சேபிள். பாக்ஸர் நிகத் ஜரீன் பெண்களின் வலிமையை மீண்டுமொரு முறை பறைசாற்றினார். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னால் லொவினா போர்கெயினுக்கும் அவரது கோச்சுக்கும் இடையிலான மோதல், லொவினாவின் தோல்வி போன்றவை பிரச்னைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. ஹாக்கியிலும் பெண்கள் கிரிக்கெட்டிலும் கூட இந்தியர்கள் பதக்கங்களை வென்றார்கள். ஆனால் அவை தங்கம் இல்லை. ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை நீரஜ் சோப்ரா மனம் திறந்து பாராட்டிய போது, விளையாட்டுப் போட்டிகள் என்பவை, துப்பாக்கி சூடு இல்லாத போராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவானது. அடுத்த வருடம் சீனாவில் நடை பெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு வீரர்கள் தயாராகும் நிலையில் காமன்வெல்த் விளையாட்டுகளில் கிடைத்த வெற்றி அவர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடும்.
This editorial in Tamil has been translated from English which can be read here.