முன்மொழியப்பட்ட டிஜிட்டல் இந்தியா சட்டம், 2023ன் சாராம்சத்தை முறையாக எடுத்து வைத்த தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இப்போது ஓரளவு காலாவதியாகிவிட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ஐ வலுவாக மாற்ற வேண்டும் என்று வாதத்தை முன்வைத்தார். அரசு தற்போது மீள் பரிசீலனை செய்ய விரும்பும் ஒரு கேள்வியை அவர் அச்சுறுத்தும் வகையில் எழுப்பினார்: “எல்லாவிதமான இடைத் தரகர்களுக்கும் (மூன்றாம் தரப்பினர் இணையத்தில் பதிவுசெய்யும் உள்ளடக்கத்துக்கு இடைத்தரகர்கள் பொறுப்பில்லை என்கிற) சட்டப் பாதுகாப்பு தேவையா? என்ற கேள்விதான் அது. குறிப்பாக, 2021ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் அதன் பிந்தைய திருத்தங்களில் இணைய இடைத்தரகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய சுமையை அதிகரிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வரும் நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விதிகளேகூட அன்றைய அரசுக்குச் சாதகமான விதிமுறைகளுடன் தங்கள் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைப் பற்றி தீர்ப்பு கூறும் பொறுப்பை சமூக ஊடக தளங்களின் மீது சுமத்தியிருந்தன. மேலும் விதிகளின் சட்டப்பூர்வத்தன்மையை டிஜிட்டல் ஊடகத் தளங்கள் உள்ளிட்டவை கேள்விக்குட்படுத்தியதால் சட்டரீதியான மேல்முறையீடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கிடையில், அக்டோபர் 2022ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம் இந்தத் தளங்கள், உள்ளடக்கம் குறித்த முடிவுகளுக்கு எதிராக ஒரு தனிப்பட்ட பயனரின் மேல்முறையீடுகள் மீது தீர்ப்பளிக்க அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கும் வழிவகுத்தது. ஜனவரி 2023ல், பத்திரிகை தகவல் அலுவலகம் அல்லது வேறு எந்த அரசாங்க நிறுவனத்தாலும் “போலி” அல்லது “தவறானது” என்று குறிக்கப்பட்ட சமூக ஊடக பதிவையோ, செய்திகளையோ நீக்குவதற்கான திருத்தத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்மொழிந்தது. மொத்தத்தில், இவை ஏற்கனவே இணைய இடைத்தரகர்களுக்கான சட்டரீதியான பாதுகாப்புகளை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கின்றன. இணையத்தில் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களைக்
கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்று. தவிர டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இடைத்தரகர்கள் அதில் பொறுப்புக்குள்ளாக்கப்படும் வகையில் பங்குவகிக்கின்றன. உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு முன்பு அல்லது பயன்பாட்டு வசதியை முடக்குவதற்கு முன்பு பயனர்களுக்கு முன் அறிவிப்பு வழங்குவது மற்றும் இடைத்தரகர்கள் அவ்வப்போது எப்படி விதிகளை ஏற்கிறார்கள் என்பது பற்றிய அறிக்கைகளை கொண்டு வருவது குறித்த தகவல் தொழில்நுட்ப விதிகளின் விவரக்குறிப்புகள் முக்கியமானவை. சமூக ஊடக தளங்கள் பொது ஒழுங்கிற்காகவும் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகவும் தவிர, வேறு காரணங்களுக்காக பயனர்களின் பதிவுகளையோ, தகவல் தொடர்புகளையோ முடக்கக்கூடாது. அதே நேரம், இடைத் தரகர்கள் செய்ய வேண்டிய பணிகள் தேவையில்லாமல் கடுமையாகவும் தண்டனைக்குரியதாகவும் மாறிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், அதுவும் சட்டப்பூர்வமான பாதுகாப்பு என்கிற கோட்பாட்டை குலைத்துவிடும். வெறுப்பு பேச்சு அல்லது தவறான தகவல்கள் பரவுகிறதா என்பதைவிட சமூக ஊடகங்களிலோ செய்தித் தளங்களிலோ விமர்சன ரீதியான கருத்தோ மாற்றுக் கருத்துகளோ இருந்தால், அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும் அகற்றுவதிலும்தான் அரசு ஆர்வமாக இருக்கிறது என்பது நியாயமான கவலை. பல நேரங்களில் இது போன்ற கருத்துகள் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தே வந்திருக்கின்றன. சட்டப் பாதுகாப்பு விதிகள், குறிப்பாக யு.எஸ் தகவல்தொடர்பு நாகரிகச் சட்டம், 1996ன் பிரிவு 230, பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் தொடர்பாக ஆன்லைன் சேவைகளுக்கு வெளிப்படையாக விலக்கு அளித்தது இணையப் பயன்பாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பெரிய அளவில் உதவியது. தவறான தகவல்கள், சிக்கலான உள்ளடக்கம் மற்றும் இணையத்தின் புதிய வடிவத்தின் பக்க விளைவுகள் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்க நவீன விதிமுறைகள் அவசியம்தான். ஆனால் அவை சட்டப் பாதுகாப்பின் அடிப்படை கொள்கைகளின் மையத்தை சிதைக்காமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - March 13, 2023 11:29 am IST