1959ல் ஐக்கிய நாடுகள் பொது சபை, குழந்தை உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது. 18 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமைகளை உறுதி செய்த இந்த முதல் சாசனம், இந்த வார்த்தைகளை கொண்டிருந்தது: “மனித இனம், குழந்தைக்குக் கொடுக்க கூடிய மிகச் சிறந்தவற்றை தர கடமைப்பட்டிருக்கிறது.” ஆனால், குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படக் கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய பாதுகாப்புக்கு யார் பொறுப்பானவர்களோ அவர்கள் செய்யும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள் என்பது அறியப்பட்ட ஒரு விஷயம். டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள், பிறப்புகளை பதிவு செய்வது, சட்டப்பூர்வமான அடையாளத்தை உருவாக்குவது, சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல தளங்களில் உதவிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அதன் முன்னோக்கிய பயணத்தில் ஒரு குழந்தையின் இணக்கமான வளர்ப்புக்கு முக்கியமாக தேவைப்படும் உரிமைகளை அது நசுக்க கூடாது. ஒரு குழந்தையின் தனிநபர் உரிமையின் பொருட்டு, நம்பிக்கை துரோகத்தை நிறுவுவதற்கான குறுக்குவழியாக சண்டையிடும் பெற்றோருக்கு இடையிலான ஒவ்வொரு வழக்கிலும் குழந்தைகளை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்த முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது இரண்டாவது குழந்தையின் தந்தை யார் என்கிற கேள்வியுடன் ஒரு நபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியம் மற்றும் பி.வி.நாகரத்னா, மரபணு தகவல்கள் ஒரு நபரின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதாகவும், அவர் யார் என்பதன் மையத்துக்கு இட்டுச் செல்வதாகவும் சொன்னார்கள். “இந்த அந்தரங்கமான, தனிப்பட்ட தகவல்’ ஒரு குழந்தையின் அடிப்படை உரிமையின் ஒரு பகுதி என்று நீதிமன்றம் சொன்னது. நீதிமன்றத்தின் முன் அவர்களின் சட்டப்பூர்வத்தன்மை அற்பத்தனமாக கேள்விக்குட்படாமல் இருக்கும் உரிமை குழந்தைகளுக்கு இருப்பதை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
குழந்தைகளை வெறும் பொருட்களாக கருதப்படக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி நாகரத்னா, தடயவியல் அல்லது டி.என்.ஏ சோதனையை கடைசி வாய்ப்பாக அதுவும் விவாகரத்து வழக்குகளில் தொடர்பு இல்லாத
நிலையிலேயே பயன்படுத்த வேண்டும் என்றார். தம்பதிகளுக்கு இடையிலான சண்டையில் குழந்தைகள் மையப்புள்ளியாக மாறிவிட கூடாது என்பது முக்கியம் என்றார் அவர். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையைப் படித்தால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் “சிறப்பு கவனிப்பு மற்றும் உதவி” உத்தரவாதம் அளிக்கப்படுவதற்கு இன்னும் பல மைல் தூரம் கடக்க வேண்டியிருக்கிறது என்பதும் தெளிவு. பல குழந்தை பருவங்கள் குறுக்கப்படுகின்றன. “ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு உரிமையும் உண்டு” என்கிற பொன்மொழி பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறது. 1992 ஆம் வருடத்தில் இந்தியா இந்த உடன்படிக்கையை அங்கீகரித்தது. பல வருடங்களாக குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் அவை அமலாக்கப்படும் விதம் பிரச்னைக்குரியதாக இருக்கிறது. துஷ்பிரயோகம், வன்முறை, சுரண்டல் அல்லது புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. யாருடைய பாதுகாப்பில் குழந்தை வளர்வது என்கிற பிரச்னையில் மட்டுமல்லாமல் குழந்தையின் சிறந்த நலன் என்ற கொள்கை சமூக நடத்தையின் ஒவ்வொரு அம்சத்தின் மையமாகவும் இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.