மாவோயிஸ்ட் சதி என்று சொல்லப்பட்ட வழக்கிலிருந்து ஜி.என்.சாய்பாபாவையும் மற்றவர்களையும் விடுவித்த பாம்பாய் உயர்நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த விதம் மிகவும் அசாதாரணமானது மட்டுமல்ல, முக்கியமான சில கேள்விகளையும் எழுப்புகிறது. பேராசிரியர் சாய்பாபாவுக்கும் இன்னும் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் மேலும் 10 ஆண்டுகள் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை தகுதிகளின் அடிப்படையில் அல்லாமல் தொழில்நுட்ப ரீதியான காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் நிறுத்தி வைப்பதிருப்பது உண்மை. அதனால் அரசு வருத்தமடைந்திருக்கலாம். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்கும்போது உச்ச நீதிமன்றம் இன்னும் நிதானத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற மகராஷ்டிர அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நீதிமன்றம் அசாதாரணமான ஒரு ஆர்வத்தைக் காட்டியது. மேல்முறையீட்டு மனுவை சனிக்கிழமையன்று விசாரிக்க நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பேலா திரிவேதி ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்பு அமர்வு உருவாக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகளை பரிசீலித்துப் பாருங்கள்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள், பேராசிரியர் சாய்பாபா மாற்றுத் திறனாளி, வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, ஒரு வேளை மேல்முறையீடு இருந்தால் அதன் மீதான மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய விரிவான காரணங்களை அளித்திருக்கும் ஒரு தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கு நீதிமன்றம் அவ்வளவு வேகத்தை காட்டியிருக்க வேண்டுமா என்கிற சந்தேகம் இருக்கவே செய்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கு எதிரான மேல்முறையீடுகள் வழக்கமான ஒன்றுதான்.
ஐந்து பேர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் (அதில் ஒருவர் சிறையில் இறந்துவிட்டார்) சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குத் தொடர்வது செல்லாது என்பதுதான் உயர் நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம். தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் அனுமதியை வழங்கும் அதிகாரி முன்பு அதற்கான தரவுகள் வைக்கப்பட்ட அதே நாளில் அனுமதியும் கிடைத்தது என்பதும், அனுமதி வழங்குவதற்கு உதவியாக ஒரு சுயாதீன ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட ஆதாரங்களின் பகுப்பாய்வுக்கான சுருக்கம் எதுவும் இல்லை என்பதும்தான். பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கைப் பொறுத்தவரையில் அனுமதி வழங்கப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு சாட்சி கூட விசாரிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த நடவடிக்கையும் தேவையற்றதாக ஆனது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 465வது பிரிவின்படி, அனுமதி வழங்கும் விஷயத்தில் ஏதேனும் பிழையோ, தவறோ, ஒழுங்கீனமோ இருந்தாலும், அதன் விளைவாக நீதி தோற்றுப் போகும் நிலை ஏற்பட்டால் தவிர, விசாரணையைக் குலைக்க முடியாது என்பது அரசின் வாதமாக இருக்கலாம். நீதி தோற்றுப்போவது கூட சரிசெய்ய கூடிய பிரச்னைதான். ஆனால் இந்த எல்லா பிரச்னைகளையும் உயர் நீதிமன்றம் விரிவாகவே கையாண்டிருக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களை கையாளும் போது சட்டமன்றங்களால் வழங்கப்படும் எந்தவொரு பாதுகாப்பும் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் தீவிரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமர்வு சொல்லியிருக்கிறது. 1976ஆம் ஆண்டின் தீர்ப்பு ஒன்று விடுதலை உத்தரவை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு தந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கொள்கை அளவில், விடுவிப்பு அல்லது விடுதலையின் பயனை முழு விசாரணையின்றி ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை செய்யக் கூடாது.
This editorial was translated from English, which can be read here.