வழிபாட்டுத் தலங்களின் நிலையை மாற்றுவதற்கான தொடர்ச்சியான, மதவாத உள்நோக்கம் கொண்ட முயற்சிகளை நீதித்துறை சட்டப்பூர்வமாக்குவதாக ஒரு தோற்றம் உருவாகக் கூடாது. மசூதியை மறைமுகமாக கோவிலாக மாற்றும் திட்டத்தை விரைவுபடுத்தும் மற்றொரு உத்தரவில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் இடத்தின் ஒரு பகுதி விஸ்வேஸ்வரரின் சொத்தாக அறிவிக்க 1991ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தொகுப்பு சட்டத்தால் தடை செய்யப்படவில்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தால் அதற்கு முந்தைய வழக்குகள் தடை செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. ஒரு வழிபாட்டுத்தலம் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இருந்த நிலையை மாற்றுவதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்கிறது இந்தச் சட்டம். கட்டமைப்பின் “மத ரீதியான தன்மை” இன்னும் தீர்மானிக்கப்படாததால் இந்த சட்டம் பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது, மேலோட்டமாகப் பார்த்தால் தெளிவானதுபோல தோன்றுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மோசமான இந்த வழக்கின் பகுதியை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவதற்கு பதிலாக ஞான்வாபி வளாகத்தில் உள்ள கட்டமைப்பு ஒரு மசூதியா அல்லது கோயிலா என்பதை தீர்மானிக்க முழு சிவில் விசாரணையை நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. தவிர, ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நிலை தீர்மானிக்கப்படாவிட்டால், அதை ஒரு கோயில் அல்லது மசூதி என்று அழைக்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறது. இத்தகைய அணுகுமுறை நவீன சமூகத்தை இடைக்கால கொள்ளைகளுக்குப் பழிவாங்க முற்படும் ஒரு ஆக்ரமிப்பு மனப்பான்மைக்கு இட்டுச்செல்ல மட்டுமே முடியும்.
2022ல் பெண் வழிபாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கில், இந்த நடவடிக்கைகள் மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களை வழிபடுவதற்கான உரிமையை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கோவிலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், 1991ஆம் ஆண்டின் வழக்குகள், அந்தத் தலத்தின் முக்கிய பகுதி ஒரு மசூதி என்று வெளிப்படையாக அறிவிக்கக் கோருவதோடு மசூதி நிர்வாகிகள் தங்கள் மத சொத்துகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றும் கோருகின்றன. இப்படி வெளிப்படையான நிவாரணம் கோரப்பட்ட போதிலும், நீதிமன்றம் இதை வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தால் தடைசெய்யப்படாத, நடத்தக்கூடிய வழக்காகக் கருத முடிவு செய்திருக்கிறது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ) வளாகத்தை ஆய்வு செய்வதற்கான உத்தரவையும் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. ஆனால் 1991ஆம் ஆண்டின் வழக்குகளை தீர்மானிக்கும் நோக்கத்திற்காக 2022ஆம் ஆண்டின் வழக்குகளின் அடிப்படையில் ஏ.எஸ்.ஐ ஆய்வுசெய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. தேவைப்பட்டால் மேலும் ஆய்வு செய்யவும் அனுமதித்திருக்கிறது. இந்த வழக்கில் எழுப்பப்பட்ட சர்ச்சை “முக்கியமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்று உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான வழக்குகளைத் தீர்ப்பளிக்கும்போது ஒரு நீதித்துறை அமைப்பு இப்படியொரு கூற்றை முன்வைப்பது ஆச்சரியமானது. மதச்சார்பின்மை என்கிற அரசியலமைப்பு பார்வையைப் பற்றி நீதித்துறை உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதோடு வழிபாட்டுத் தலங்களின் அந்தஸ்தை மாற்றுவதற்கு அல்லது முந்தைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு சட்டரீதியான தடையை அமல்படுத்த வேண்டும்.