டிசம்பர் 21ஆம் தேதியன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட 18 நாள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு புதிய வீழ்ச்சியைக் குறிக்கிறது. பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளுடன் உரையாட மறுத்து, நிர்வாக பொறுப்புக்கூறலைத் தவிர்த்து, நாட்டிற்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் பல மசோதாக்களை நிறைவேற்றியது. டிசம்பர் 13ஆம் தேதி போராட்டக்காரர்கள் மக்களவைக்குள் நுழைந்தது தொடர்பான பாதுகாப்பு மீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூச்சலிட்டதால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 46 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவையின் 100 உறுப்பினர்கள் என மொத்தம் 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கத்தை அரசின் “முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட ஒன்று” என்று சொல்லி இந்திய துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில் பிரச்னை தொடர்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் மக்களவையில் அப்போது இல்லாத ஒரு உறுப்பினரும் அடக்கம் என்பதை திரு. கார்கே சுட்டிக் காட்டியிருந்தார். எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் இடைநீக்கங்கள் நடந்திருப்பது தெளிவு. கூட்டத் தொடர் சுமூகமாக நடப்பதை இரு அவைத் தலைவர்களும் உறுதிசெய்ய முடியவில்லை. திரு. தங்கர் மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரின் முயற்சிகளில் தேவையான, அதிகாரப்பூர்வமான பாரபட்சமின்மை இல்லை.
பெரும்பான்மையான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில்தான் நாட்டின் குற்றவியல் சட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டம், இந்திய தேர்தல் ஆணையர்களின் நியமனம் ஆகியவற்றை மாற்றி எழுதும் புதிய சட்டங்களை அரசு நிறைவேற்றியது. நிர்வாகத்தின் அதிகாரம் முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிகரிப்பதுதான் இந்த சட்டங்களின் பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த நிலையில், அவை முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட அர்த்தமுள்ள நாடாளுமன்ற விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது தற்செயலானது அல்ல. பாதுகாப்பு மீறல் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைக்கூட அரசு நிராகரித்தது. இது எண்ணிக்கை பெரும்பான்மையை தர்க்கரீதியான மற்றும் தார்மீக பிழையற்ற தன்மையுடன் சமப்படுத்துவதில் அதன் பிடிவாதத்தைக் காட்டுகிறது. இடைநீக்கத்துக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. சபாநாயகரும் அவைத் தலைவரும் இந்த கருத்தை எதிரொலிக்கிறார்கள். திரு. தங்கரை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மிமிக்ரி செய்ததாகக் கூறப்படும் வழக்கு, ஆளுங்கட்சிக்கு வசதியான ஒரு திசைதிருப்பலாக இருந்தது. இந்த மிமிக்ரி தனது சமூகத்தை அவமதிக்கும் செயல் என்று மாநிலங்களைவையில் திரு. தங்கர் சொன்னார். அவரைப் போன்ற ஒரு சட்ட மேதையைத் தாண்டி யாரொருவரும் செய்ய முடியாத திகைப்பூட்டும் விஷயமாக அது இருந்தது. வழிதவறிய சில இளைஞர்களின் பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் இவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் செலவழித்திருக்க வேண்டுமா என்பது வேறு விஷயம். நோக்கம் இதுவில்லை என்றாலும் அதன் விளைவு நாடாளுமன்ற செயல்பாட்டைத் தடம்புரளச் செய்வதும், நிறைவேற்று அதிகாரத்திற்கு இலவச பாஸ் பெறுவதுமாக மாறிவிட்டது.