2006ல் தங்கள் முன்னோடிகளான எம்.சி. மேரி கோம், சரிதா தேவி, கே.சி.லேகா மற்றும் ஆர்.எல்.ஜென்னி ஆகியோர் செய்ததுபோல இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் தில்லி உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இதன் மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியான ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக ஒரு அழுத்தமான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். பதினேழு வருடங்களுக்கு முன்பு இந்தியா நான்கு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலங்களுடன் ஒரு பிரமாதமான ஆட்டத்தைப் பதிவு செய்தபோது, இந்த விளையாட்டு நமக்கு பழக்கப்படாத ஒன்றாகதான் இருந்தது. அதற்கு ஆறு வருடங்கள் கழித்துதான் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை அறிமுகமானது. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக இப்போதிருக்கும் நிலையில், 65 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. யுக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்ய மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் தங்கள் கொடிகளின் கீழ் பங்கேற்றதால் சில முக்கிய நாடுகள் இந்தப் போட்டிகளைப் புறக்கணித்த போதிலும் இந்தியா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. காரணம், மூன்றாவது முறையாக போட்டியை நடத்தும் நாட்டை இது உச்சிக்குக் கொண்டு வந்திருக்கிறது. தங்கப் பெண்களான நீது கங்காஸ் (48 கிலோ), நிகாத் ஜரீன் (50 கிலோ), லவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ), சவீதி பூரா (81 கிலோ) ஆகியோர் வெவ்வேறு சாதனைகளுக்கு சொந்தகாரர்களாக இருந்தாலும் தங்களை மீண்டும் நிரூபிக்க வேண்டியிருந்தது. காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீது, எலைட் தளத்தில் முத்திரை பதிக்க ஆர்வமாக இருந்தார். 52 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியனான நிகாத், எடை குறைந்து, தரவரிசையில் இல்லாத நிலையில், ஆறு கடுமையான எதிரிகளை எதிர்கொண்டு, மேரிக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட உலக பட்டங்களை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்று புதிய வகுப்பில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இரண்டு முறை உலக வெண்கலப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் வெற்றியாளரான லவ்லினா, புதிய ஒலிம்பிக் எடைக்கான போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முப்பது வயதான சவீதி, தானும் சளைத்தவர் அல்ல என்பதை காட்ட விரும்பினார். 19 வயதான ப்ரீத்தி சாய் பவார் (54 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (60 கிலோ) உள்ளிட்ட சில அற்புதமான திறமைகளைக் கொண்டவர்கள் அனைவரையும் கவர்ந்தார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் பல குத்துச்சண்டை வீரர்கள் போட்டியிடுவதால், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறுவதில் பயிற்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் ‘நல்ல சிக்கல்’தான்.
மகளிர் குத்துச்சண்டையின் போட்டித்தன்மையையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு, பல்வேறு பிரச்சினைகளுக்காக ஒலிம்பிக்கில் இருந்து விலக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு (ஐபிஏ) ஒரு ஊக்கமாக வேண்டும். சுயாதீனமான மெக்லாரன் குழுவால் தளத்திலேயே கண்காணிக்கப்பட்ட ஐபிஏ, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்தவும் முயற்சித்தது .நியாயமற்ற முறையில் ஆதாயத்தை அனுபவித்து வந்த சுமாரான விளையாட்டு அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஒவ்வொரு வெற்றியாளருக்கும் $100,000 பரிசு மற்றும் பங்கேற்பை அதிகரிப்பதற்கான ஊக்கமாக குத்துச்சண்டை வீரர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல வேலைகளை செய்தது. ஒரு சின்னத் தடங்கலை தவிர, இந்த நிகழ்வு வெற்றிகரமாகவே நடந்திருப்பதன் காரணமாக, இந்தியாவை குத்துச்சண்டைக்கான ஒரு சந்தையாக பார்ப்பதற்கு ஐபிஏவை ஊக்குவித்திருக்கிறது. ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில், அதிக உயரடுக்கு போட்டிகளை நடத்த வேண்டும் என்ற இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் விருப்பம் குத்துச்சண்டை சமூகத்தை மேலும் ஊக்குவிக்கும்.
This editorial has been translated from English, which can be read here.