2070ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய நிதிநிலை அறிக்கை குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல, அதன் கணிசமான, வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது சர்வதேச காலநிலை மாற்ற இலக்குகளை அடைவதற்கான வழி இந்தியாவிடமே இருக்கிறது. நாட்டின் மக்கள் தொகை இந்த ஆண்டு சீனாவை தாண்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எரிசக்தியின் தேவை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கும். எனவே புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து சூழலை மாசுபடுத்தாத எரிபொருட்களுக்கு மாறுவது ஒரு அவசரமான தேவையாகிறது. அதை பயன்படுத்தி புதிய தொழில்களை ஊக்குவிக்கவும், கணிசமான அளவில் வேலைகளை உருவாக்கவும், அதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பசுமை தொழில்துறைக்கும் அதற்கு ஏதுவாக பொருளாதார மாற்றத்துக்கும் நியாயமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய மின் வாகன மாதிரிகளை வெளியிட்டு வரும் நிலையில், மின் வாகன புரட்சி உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். இதன் பொருட்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகள் கிடைப்பது அவசியமாகிறது. குறிப்பாக மின் வாகனங்களின் விலைகளை குறைக்க இது தேவைப்படுகிறது. மின் வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் செல்கள் தயாரிக்கத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு அளிக்க நிதிநிலை அறிக்கை முன்மொழிந்திருப்பது வரவேற்புக்குரியது. மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் உள்ளூர் நிறுவனங்களுக்கு இது ஒரு ஊக்கத்தை அளிக்கும்.
4000 மெகாவாட் சேமிப்பு திறன்கொண்ட மின்கல சேமிப்பு முறைகளை உருவாக்க ஆதரவாக, தேவைப்படும் நிதி அமைப்பை உருவாக்குவது, இன்னொரு முக்கியமான முன்மொழிவு. சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை உள்ளிட்ட மாற்று மின் உற்பத்தி ஆதாரங்களை இந்தியா சார்ந்திருப்பதை அதிகரிப்பதால், மின் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதில் மின்சாரத்தை சேமிக்கும் முறைகள் முக்கியமானவையாகவும் அவசியமானதாகவும் இருக்கும். காற்றாலைகளிலிருந்தும் சூரிய ஒளியிலிருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் ஏற்றத்தாழ்வு கொண்டதாக இருக்கும். ஆகவே, காற்றாலைகளும் சூரிய ஒளி தகடுகளும் உச்சகட்டத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சேமித்து, பின்னர் வீடு அல்லது தொழில்துறை நுகர்வோருக்கு தேவைக்கு ஏற்றவாறு வழங்குவதை இந்த மின்சார சேமிப்பு முறைகள் உறுதி செய்கின்றன. லடாக்கில் இருந்து 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பிற இடங்களுக்குக் கொண்டுசெல்லவும் மின்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதற்கும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பை உருவாக்குவதற்காக ரூ. 20,700 கோடி திட்டத்திற்கு திருமிகு. சீதாராமன் ரூ. 8,300 கோடியை ஒதுக்கியிருக்கிறார். பரந்த தரிசு நிலங்களும் நாட்டின் மிக உயர்ந்த அளவிலான சூரிய ஒளி கிடைக்கும் தன்மையும் கொண்ட லடாக், சூரிய சக்தியின் கணிசமான திறனை உற்பத்தி செய்வதற்கான மின்தகடு வரிசைகளை அமைக்க ஒரு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பிரதான மின் கட்டமைப்புகளில் இருந்து இந்த இடம் தொலைதூரத்தில் இருப்பதால், இந்தப் பிராந்தியத்தில் சூரிய ஒளி மின் திட்டங்களை அமைப்பதில் இதுவரை இருந்த தடையை நிவர்த்தி செய்ய இந்த மின் தொடரமைப்பு உதவும்.
This editorial has been translated from English, which can be read here.