ரஷ்ய பெருநிலப்பரப்பை கிரீமிய தீபகற்பத்துடன் இணைக்கும் கெர்ச் நீரிணை பாலத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து யுக்ரைன் முழுவதிலும் உள்ள நகரங்கள் மீது நடந்த ரஷ்ய குண்டுவீச்சுக்கள், யுக்ரைன் போர் ஒரு அபாயகரமான, இன்னும் மோசமாகும் சுழலில் சிக்கியிருப்பதையே காட்டுகிறது. இப்போதைக்கு இதிலிருந்து மீளும் வழியெதுவும் தென்படவுமில்லை. ரஷ்யா கட்டிய பாலத்தின் மீது சனிக்கிழமையன்று நடந்த தாக்குதல், யுக்ரைனில் உள்ள பலரையும் உற்சாகப்படுத்தியது. ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைகைலோ பொடொலக் அதை “வெறும் ஆரம்பம்“ என்றார். ஆனால், ஃபிப்ரவரி 24ல் போர் தொடங்கியதிலிருந்து இல்லாதவகையில், யுக்ரைன் மீது மிகப் பரந்த அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி ரஷ்யா அடுத்த நாளே பதிலடி தந்தது. இந்தத் தாக்குதலில் ராணுவ கட்டமைப்புகளும் பொது மக்களின் குடியிருப்புகளும் இலக்காகின. போர் தொடங்கி எட்டு மாதங்களுக்கு பிறகு நடந்த இந்த ஏவுகணை தாக்குதல் ரஷ்யாவின் ராணுவத் திறனுக்கு ஒரு சாட்சியாக இருந்ததோடு, குடிமக்களின் உயிர் மற்றும் உடைமைகள் பற்றி அதற்கு எந்த கவலையும் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியது. சமீப வாரங்களில் தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்த ரஷ்யாவின் விரக்தியையும் அது வெளிப்படுத்தியது. ஆனால் யுக்ரைனின் மக்களைத் தண்டிக்கும் வலிமையைக் வெளிக்காட்டுவதைத் தவிர, இந்தத் தாக்குதல் எந்தவொரு வியூக மதிப்பையும் கொண்டிருக்கவில்லை. ரஷ்யாவின் போர்க்கள நிலைமைகளை அது மேம்படுத்தவில்லை. ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்கிற யுக்ரைன் மற்றும் அதன் கூட்டணிகளின் உறுதியையும் அது பலவீனப்படுத்தவில்லை. மாறாக, தொழில்மயமான ஏழு நாடுகளின் குழு யுக்ரைனுக்கு ‘எவ்வளவு காலம் வேண்டுமோ அவ்வளவு காலம்’ தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கு உறுதி கொண்டுள்ளன. பொதுவாக, போர்கள் ஒரு தரப்பினரின் முழுமையான வெற்றியின் காரணமாகவோ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதன் மூலமாகவோ முடிவுக்கு வருகின்றன. ஆனால் யுக்ரைன் போரைப் பொறுத்தவரையில் இந்த இரண்டும் இப்போது சாத்தியமில்லாத கட்டத்தில் இருக்கிறது. யுக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறது ரஷ்யா. பிராந்திய ரீதியாக ரஷ்யா சில ஆதாயங்களைப் பெற்றிருந்தாலும், நேட்டோவின் ஆதரவுடன் யுக்ரைனின் படைகள் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. கிரீமியா உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் ரஷ்யப் படைகளை வெளியேற்ற விரும்புகிறது யுக்ரைன். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று தோன்றுகிறது. தவிர யுக்ரைனின் நான்கு மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் ரஷ்ய அதிபர் புதினின் ஒருதலைபட்சமான முடிவு, சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதுடன், சமாதானத்துக்கான வாய்ப்புகளை மிகவும் கடினமாக்கியிருக்கிறது. ஆனால், பேச்சு வார்த்தைகளுக்கான மாற்று என்பது மோதலின் தொடர்ச்சிதான். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் நிலப் பகுதியில் நடக்கும் மிக ஆபத்தான போர் இது. மனித, பொருளாதார செலவுகள் தவிர அணு ஆயுதத் தாக்குதல் பற்றிய அதிகரிக்கும் அச்சங்கள் ஆகியவற்றையும் இந்த மோதல் உள்ளடக்கியிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் இந்த உலகத்துக்கு தேவையாயிருக்கும் கடைசி விஷயம் இது. 1962லேயேகூட சோவியத் அணு ஆயுத ஏவுகணைகள் கியூபாவில் இருந்தபோதும், அமெரிக்கப் போர்க் கப்பல்கள் கரீபியன் கடலைத் தனிமைப்படுத்தியபோதும்கூட, கென்னடியும் குருஷேவும் பேச்சுவார்த்தை நடத்தி, கடிதங்களைப் பரிமாறிக்கொண்டு, உலகை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குத் தள்ளிய ஏவுகணை நெருக்கடிக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்கள். தனது அதிகபட்ச அச்சுறுத்தல்களிலிருந்து பின் வாங்கி, திரு.புதின் பேச்சுவார்த்தைக்கான சில உறுதியான முன்மொழிவுகளை தர வேண்டும். ஏற்கனவே பேரழிவுக்கு இட்டுச் சென்றுவிட்ட இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் நிலைமைகளை உருவாக்குவதற்கு அவரது மேற்கத்திய போட்டியாளர்களும் பணியாற்ற வேண்டும்.
This editorial was translated from English, which can be read here.