கடந்த வாரம் துபாயில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலம், இந்த விளையாட்டு பிராண்டின் நீடித்த மதிப்பையும் நிதி வலிமையையும் மீண்டும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு ராகுல் டிராவிட் ‘சர்வதேச சுவை கொண்ட உள்நாட்டு போட்டி’ என்று பிரபலமாகச் சொன்ன டி - 20 லீக், 2008ஆம் ஆண்டில் பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒரு பிரகாசமான ஏப்ரல் இரவில் தொடங்கப்பட்ட தருணத்திலிருந்து, நீண்ட தொலைவை கடந்திருக்கிறது. சூதாட்டம் மற்றும் பிக்ஸிங் ஊழல், அணி இடைநீக்கம் மற்றும் உரிமையாளர் சிக்கல்களில் இருந்து மீண்டு, தொடர்ந்து நீடிக்கும் இந்த போட்டி, இந்தியாவில் கோடைக் காலங்களின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது. வருடாந்திர கிரிக்கெட் காலண்டரில் அதிகம் பார்க்கப்படும் போட்டியாகவும் இருக்கிறது. உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், இந்த ஏலத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் தாக்கம் செலுத்தியது தெளிவு. ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை எட்டப்படாத ரூ. 20 கோடி உச்சத்தை முதல் இரண்டு வீரர்களும் எட்டினார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கம்மின்ஸை ரூ. 20.50 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தன. கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில், கிளப் போட்டிகள் முக்கியமா, நாட்டுக்காக விளையாடுவது முக்கியமா என்ற விவாதங்களில் ஒரு வீரர் தனது நாட்டிற்காக செய்த சாதனைகள்தான் அவரது நற்சான்றிதழ்களுக்கு மகத்தான மதிப்பை சேர்க்கின்றன. அதன் தொடர்ச்சியாக, இது அந்த நட்சத்திர விளையாட்டு வீரரை வைத்துக்கொள்ள விரும்பும் கிளப்களுக்கு மேம்பட்ட நிதி கிடைப்பதைக் குறிக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் இதன் பலனை அறுவடை செய்தனர். அவர்கள் தவிர இன்னும் பலருக்கும் அங்கீகாரம் கிடைத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்ததால் பரபரப்புக்கு பஞ்சமில்லை. பின்னர் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பொருள் ஐ.பி.எல். கேப்டன் என்ற வகையில் ரோஹித் சர்மாவின் ஏற்ற இறக்கமான வரலாறு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்பதுதான். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவின் புதிரான சமூக ஊடக பதிவுகளின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஊகங்கள் அதிகரித்தன. அதுவும் ஐ.பி.எல். போட்டிகள், டி-20யில் இந்திய அணியின் வாய்ப்புகளுக்கான கண்ணாடியாக பார்க்கப்படுவதால் பாண்டியா குறுகிய வடிவத்தில் இந்தியாவை தொடர்ந்து வழிநடத்துவார் என்று ஊகிக்கலாம். மேற்கிந்திய தீவுகளும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு ஐசிசி டி - 20 உலகக் கோப்பையை நடத்தும் நிலையில், சமீபத்திய ஏலம் மற்றும் 2024ஆம் ஆண்டில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் நிறைய உள்ளர்த்தங்களைக் கொண்டிருக்கும். இந்த பின்னணியில் பார்க்கும்போது, உள்ளூர் கிரிக்கெட்டில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் அதிகம் அறியப்படாத இந்திய வீரர்கள், பல்வேறு உரிமையாளர்களால் தேர்வு செய்யப்படும் நிலையில், எதிர்காலத்தில் எப்போதாவது இந்திய அணியில் சேர்க்கப்படும் வாய்ப்புகளை இது பிரதிபலிக்கிறது. சமீர் ரிஸ்வி, குமார் குஷாக்ரா, சுபம் துபே, ஸ்வஸ்திக் சிக்காரா, ராமன் தீப் சிங் போன்ற வீரர்கள் ஆர்வத்துடன் ஏலம் எடுக்கப்பட்டார்கள். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம், புவிசார் அரசியல் பதற்றங்களில் இருந்து விளையாட்டு விலகி இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.