அலட்சியத்தால் ஏற்படும் மரணங்களுக்காக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அளித்த உத்தரவாதத்துக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது. அமித் ஷா முதலில் சொன்னது: “மருத்துவர்களின் மருத்துவ கவனக்குறைவால் ஒருவர் இறந்தால் கொலையாகக் கருதப்படாமல் மரணம் விளைவிக்கும் குற்றமாக கருதப்பட்டு வந்தது. நான் இன்று ஒரு திருத்தத்தைக் கொண்டு வருகிறேன். [இந்த பிரிவின் கீழ்] மருத்துவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) எங்களிடம் (விலக்கு) கோரியது.” திருத்தப்பட்ட பாரதீய நியாய (இரண்டாவது) சன்ஹிதா மசோதா, 2023 நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதில் மருத்துவர்களுக்கு அந்த முழுமையான விலக்கு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட பிரிவு 106 (1)ல், பதிவு செய்யப்பட்ட மருத்துவருக்கு (ஆர்.எம்.பி) இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. அதாவது நடைமுறையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 (ஏ) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர்களுக்கான தண்டனையை அந்த சட்டத்துக்கு மாற்றாக வரும் பி.என்.எஸ்.எஸ் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலைமை தொடர்ந்தாலும் ஐ.எம்.ஏ அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறது. ஆனால் பின்னணிக் காட்சிகளை பார்க்கும்போது இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதா, உண்மையில் ஆர்.எம்.பி. விஷயத்தில் கவனக்குறைவால் நோயாளிகள் இறந்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க பரிந்துரைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது. நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான உறவில் குற்றத்துக்கான நோக்கம் எதுவும் இல்லை என்றும், எனவே கூடுதலான தண்டனை நியாயமானதல்ல என்றும் ஐ.எம்.ஏ. பின்னர் நிலைக்குழுவிடம் சமர்ப்பித்தது. பின்னர் குழு அந்த தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து, இறுதியாக சட்டம் நிறைவேற்றப்பட்ட போது 2 ஆண்டுகளாக இருந்தது. மருத்துவ அலட்சியம் தொடர்பான வழிகாட்டுதல்களை வரையறுத்த ஜேக்கப் மேத்யூ எதிர் பஞ்சாப் மாநிலம் & ஏ.என்.ஆர். (2005) என்ற முக்கியமான வழக்கைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். அலட்சியம் ‘மோசமானதாக’ இருக்க வேண்டும், கணிசமாக அதிக அளவில் இருக்க வேண்டும், இதன் விளைவாக, மருத்துவரின் செயல் கவனக் குறைவாகவோ அல்லது பொறுப்பற்றதாகவோ இருந்து மரணம் ஏற்பட்டது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் பொறுப்பு வரும் என்று நீதிமன்றம் கூறியது. வழக்கு விசாரணையின்போதுகூட, பல்வேறு நிலைகளில், மருத்துவரின் கவனக்குறைவு மரணத்திற்கு வழிவகுத்ததா என்பது குறித்து இதே போன்ற தகுதிவாய்ந்த நிபுணரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இப்படி மருத்துவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சட்டத்தின் கீழ் போதுமான பாதுகாப்பை பெறுகிறார்கள் என்று வாதிடப்பட்டாலும், உண்மையில் மருத்துவ வல்லுநர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதுதான் உண்மை. மருத்துவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது தாக்குதல் பயத்திலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும், எடுக்கப்படும் எந்த முடிவும் அத்தகைய பயத்தின் தாக்கத்தைக்
கொண்டிருப்பதையோ பாதிக்கப்படுவதையோ தவிர்ப்பதை உறுதி செய்வதும் முக்கியம். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றாலும் ஏற்படும் மரணங்களுக்கு மருத்துவர்களை பொறுப்பாக்கி மோசமாக சித்தரிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த கவனிப்பை வழங்குவதில் இருந்து அவர்கள் பின்வாங்குவதற்கு வழிவகுக்கக்கூடும். அது, எந்தச் சூழ்நிலையிலும் ஏற்புடையது அல்ல.