கட்டுப்படுத்துதல்

அதீதமான விலைவாசி நுகர்வை குறைத்துவரும் நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும்

October 03, 2022 12:46 pm | Updated December 30, 2022 04:57 am IST

வட்டி விகிதத்தை உயர்த்துவது என வெள்ளிக்கிழமையன்று ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது. வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை ஏற்றுவதைத் தவிர நிதிக் கொள்கையை வகுப்பவர்களுக்கு வேறு வழியில்லை. சர்வதேச நிதிச் சந்தைகளில்  நிலவிய மிக மோசமான நிலையற்றதன்மையும் உள்ளூரில் தொடர்ச்சியாகவும் மிக அதிகமாகவும் இருந்த சில்லறை வணிக பணவீக்கமும் இணைந்து இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பொருளாதாரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே கொள்ளை நோயும் யுக்ரைன் மீதான போரும் உலகப் பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், மேம்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் மத்திய வங்கிகள் எடுத்த “தீவிரமான நிதி கொள்கைகளும் அவற்றிடமிருந்து வந்த மிகத் தீவிரமான சமிக்ஞைகளுமே” இந்த நடவடிக்கையை எடுப்பதற்கான மூன்றாவது  அதிர்ச்சியாக அமைந்தது என்றார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ். ‘சர்வதேச பொருளாதாரத்தில் தற்போது உருவாகியிருக்கும் புயலின் மையத்தில் இவையே இருப்பதாக” அவர் சொன்னார். இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் சந்திக்கும் வெளிப்புற சவால்களைப் பற்றி விவரித்த திரு. தாஸ், “குறிப்பாக வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்கள், மந்தமாகி வரும் சர்வதேச வளர்ச்சி, அதிகரித்திருக்கும் உணவு மற்றும் எரிவாயு விலைகள், மேம்பட்ட பொருளாதாரங்களின் கொள்கைகளை நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படும் விளைவுகள் மற்றும்  கூர்மையான நாணய மதிப்பு வீழ்ச்சி போன்ற சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதாகவும்“ சொன்னார். தற்போதைய நிதியாண்டு தொடக்கமான ஏப்ரலிலிருந்து டாலருக்கு நிகராக 7 சதவிகிதத்திற்கும் மேலாக ரூபாய் மதிப்பிழந்து வருகிறது. ஆகவே, ரூபாயும் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, இறக்குமதியால் ஏற்படும் பணவீக்கம் ஏற்பட்டு, விலைவாசி நிலையாக இருக்க முடியாத அளவுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ‘சர்வதேச அளவில் மெதுவான வளர்ச்சி மற்றும் அதிக பணவீக்கம் காரணமாக எட்டு காலாண்டுகள் தாண்டியும் உள்நாட்டுப் பணவீக்கத்தை அதிக நிலையிலேயே வைத்திருக்கிறது. ஆகவே, பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகளை  எதிர்கொள்ள நிதி ரீதியான சரியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்” என ரிசர்வ் வங்கியின் செப்டம்பர் மாத நிதி கொள்கை அறிக்கை இதனைச் சுட்டிக்காட்டுகிறது.

ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் சில்லறை வணிக பணவீக்கம் அதன் உச்சபட்ச  வரம்பான 6 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் என்று ரிசர்வ் வங்கியின் கணிப்புகள்கூட எதிர்பார்க்கவில்லை. தவிர திரு. தாஸ் சரியாக சுட்டிக்காட்டியதைப்போல, ரிசர்வ் வங்கியின் பணவீக்க கண்ணோட்டத்தை பல காரணிகள் கடுமையாக பாதிக்கக்கூடும். தேவைகள் அதிகரிப்பதால் சேவைகளை அளிப்பவர்களின் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து, அதனால் விலைகள் அதிகரிப்பது, சம்பா பருவத்தில் நெல், பருப்பு போன்றவை குறைவாக உற்பத்தியாகியிருப்பதால்  உணவு விலைகள் அதிகரிக்கும் அபாயம், சில பகுதிகளில் எதிர்பாராத அதிக மழை காரணமாக அதிகரித்திருக்கும் காய்கறி விலைகள் ஆகியவையும் இதில் அடக்கம். வரும் மாதங்களில் அரசின் கூடுதலான செலவு காரணமாக, வங்கிகளில் அதிக அளவில் ரொக்கம் இருப்பதும் விலைவாசி நிலையாக இருப்பதை அபாயத்திற்குள்ளாக்கும். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மிகுந்த மெனக்கெடலுடன் விளக்கியது போல அதை  திருத்தமாக ‘கட்டுக்குள் கொண்டுவருவது’ (withdrawal of accommodation) முக்கியம். ரெபோ சதவிகிதம் மே மாதம் தொடங்கி 190 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டிருந்தாலும் பணவீக்கத்துக்காக சரி செய்யப்பட்ட இந்த வட்டி விகிதம் 2019 அளவுகளிலேயே இருப்பதை அவர் குறிப்பாக சுட்டிக் காட்டினார். பணவீக்கம் பற்றிய குடும்பங்களின் எதிர்பார்ப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கை பற்றிய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வும், விலைவாசி உயர்வு என்பது நுகர்வை தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்று அறியத் தருகிறது. இந்த நிலையில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.