சட்டரீதியான தன்மைக்கும் அரசியல் முறைமைக்கும் இடையிலான இடைவெளி கணிசமான ஒன்றாக இருக்கலாம். ஜம்மு-காஷ்மீருக்கான எல்லை நிர்ணய ஆணையம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த எல்லை மறுவரையறை நடவடிக்கையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையில் சட்டத்திற்கு உட்பட்டதுதான். குறிப்பாக புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள மாநிலங்களை மாற்றுவதற்கும், அவற்றின் நிலை மற்றும் எல்லைகளை மாற்றுவதற்கும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு விதிகள், அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 ஆகியவற்றுக்கு உட்பட்டதுதான். ஆனால், யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்வதன் அரசியல் முக்கியத்துவத்துக்கு அது நீதித்துறை அங்கீகாரத்தை வழங்குவதாக பார்ப்பது தவறு. ஆகஸ்ட் 2019ல் யூனியன் பிரதேச அந்தஸ்துக்கு குறைக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஜம்மு பிரிவில் ஆறு இடங்களையும், காஷ்மீர் பிரிவில் ஒரு இடத்தையும் கூட்டி, மொத்த இடங்களின் எண்ணிக்கையை 90ஆக உயர்த்திய ஆணையத்தின் அறிக்கையை எதிர்த்துள்ளன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அரசியல் மற்றும் தேர்தல் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்துவதற்கும், ஜம்முவில் ஒரு தளத்தைக் கொண்ட கட்சிகளின் வாய்ப்புகளை அதிகரிப்பதற்குமான முயற்சியாக இந்த நடவடிக்கைகளை கட்சிகள் பார்க்கின்றன. ஜம்மு - காஷ்மீரின் அந்தஸ்தையும் சலுகைகளையும் பறித்து, அதன் அரசியலை ஆளும் கட்சிக்கு சாதகமாக மாற்றும் திட்டத்தின் நீட்சியாக கட்சிகள் இதை பார்க்கின்றன. இதன் முறைமை பற்றிய கேள்வி பிராந்திய சட்டமன்றத்துக்கு ஒரு தேர்தல் எப்போது நடை பெறுகிறதோ அப்போது அதன் மூலம் பதிலளிக்கப்படலாம். ஆனால் எல்லைகளின் மறு சீரமைப்பேகூட இந்த செயல்முறையில் ஒரு பின்னடவை ஏற்படுத்தக்கூடும்.
எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு காலதாமதமான ஒன்றுதான். காரணம், குழு தனது வரைவு உத்தரவை வெளியிட்ட பின்னரே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புவரை, நாடு முழுவதும் எல்லைகளை மறுவரையறை செய்வது முடக்கப்பட்டுள்ளது என்ற அதன் முக்கியமான வாதத்தை நிராகரித்த நீதிமன்றம். இது தொடர்பான பிரிவு 170 மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டது. ஜம்மு - காஷ்மீர் அதன் சொந்த மறுசீரமைப்பு சட்டத்தால் நிர்வகிக்கப்படும் என்றும் அதனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லைகளின் மறுவரையறைக்கு அடிப்படையாக இருக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதாவது, 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்யும் நாட்டின் பிற பகுதிகளைப் போல இல்லை என்று நீதிமன்றம் சொன்னது. மறுசீரமைப்புச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்போடு ஒத்துப்போகவில்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட வாதங்களையும் நீதிமன்றம் நிராகரித்தது. குறிப்பிட்ட வகையில் இந்த விதிகளை எதிர்த்து எந்த வாதமும் வைக்கப்படவில்லை என்று அது சொன்னது. எல்லை நிர்ணயக் குழு அமைப்பது, அதற்கு வழங்கப்பட்ட நீட்டிப்புகள் மற்றும் தற்போது செல்லுபடியாகும் என்று கருதப்படும் சட்டங்களின் அடிப்படையில் அதன் முடிவு ஆகியவற்றை நீதிமன்றம் உறுதி செய்தது சரியானதாக இருக்கலாம். ஆனால் 2019ஆம் ஆண்டில் அதன் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் முடிவின் செல்லுபடித்தன்மை குறித்த முக்கியமான கேள்விக்கு விடை தெரியாத வரை, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் அரசியல் நிலை தொடர்பான விஷயங்களில் ஒரு மோசமான வாய்ப்பே வழங்கப்படுகிறது என்ற தோற்றம் தவிர்க்க முடியாதது.
This editorial has been translated from English, which can be read here.