இலக்கிய எல்லைகள் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பல வருடங்களாக 24 இந்திய மொழி எழுத்தாளர்களை கௌரவிக்கும் சாகித்ய அகாடமி விருதுகளை அந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். இந்த வருடம் டோக்ரி, குஜராத்தி, காஷ்மீரி, மணிப்பூரி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சிந்தி, அசாமி, போடோ, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சந்தாலி மற்றும் பிற மொழிகளில் ஒன்பது கவிதைகள், ஆறு நாவல்கள், ஐந்து சிறுகதைகள், மூன்று கட்டுரைகள் மற்றும் ஒரு இலக்கிய ஆய்வு ஆகியவற்றை அகாடமி தேர்வு செய்திருக்கிறது. ஒவ்வொரு சில சதுர கிலோமீட்டருக்கும் பேச்சுவழக்கில் மாற்றம் ஏற்படும் ஒரு நாட்டில், அழிவை எதிர்நோக்கும் விளிம்புநிலை சமூகங்கள் அல்லது மொழிகளுக்கு பஞ்சமில்லாத ஒரு நிலையில் அது ஏற்றுக் கொள்ளும் மொழிசார்ந்த பன்முகத்தன்மைக்காகவே இந்த விருது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. சாத்தியக்கூறுகள் மிக அதிகம்; விளம்பர வெறியைத் தூண்டும் திறன் அனைவருக்கும் இல்லாத ஒரு நாட்டில், சாகித்ய அகாடமி விருது என்பது கலை தொடர ஊக்கமளிக்கிறது; எழுத்தாளர்கள் விற்பனை அதிகரிப்பைக் காண்பதையும் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தங்களது படைப்புகள் கற்பிக்கப்படுவதையும் எதிர்பார்க்கலாம்; மற்றும் வாசகர்கள் சில அரிய படைப்புகளை கண்டடைவார்கள் என்றும் நம்பலாம். எழுத்தாளர்கள் பிற பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பையும் இது தருகிறது. 2018ல் தி இந்து புனைகதை பரிசை வென்ற தனது ஆங்கில நாவலான ரெக்கீம் இன் ஜாங்கிக்காக இந்த வருடம் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் நீலம் சரண் கவுர், தனது கதை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால், 1955ல் முதன்முதலாக வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகள், புக்கர் பரிசு, புலிட்சர் போன்ற உடனடியாக நினைவுக்கு வரும் விருதுகளாக இல்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். 1954ல் நிறுவப்பட்ட நேஷனல் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் அமைப்பின் குறிப்பிடப்பட்ட குறிக்கோளாக “நாட்டில் இலக்கிய உரையாடல், வெளியீடு மற்றும் மேம்பாட்டிற்கான மைய நிறுவனமாகவும், ஆங்கிலம் உட்பட 24 இந்திய மொழிகளில் இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரே நிறுவனமாகவும்” இருக்கிறது. அதன் பொருட்டு, சாகித்ய அகாடமி அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய விரிவுரைகள், வாசிப்புகள், விவாதங்கள், பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளை நடத்துகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அது பற்றிய செய்திகள் மிக மோசமாகவே பரவலாக்கப்படும் நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே அவை நடப்பது தெரியும். சாகித்ய அகாடமி விருதுதான் உயர்ந்தபட்ச விருதென்றாலும் பால சாகித்ய விருது, யுவ புரஸ்கார் மற்றும் மொழிபெயர்ப்புக்கான பாஷா சம்மான் போன்ற பிற விருதுகளும் இருக்கின்றன. ஆனால் அதன் செயல்பாடுகளை ஊக்குவிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அகாடமியின் இணையதளம் புதுப்பிக்கப்படாமலும், இலக்கணப் பிழைகளோடும் இருக்கிறது. அதன் சமூக ஊடக இருப்பு மிக மோசமாக இருக்கிறது. அகாடமி ஆயிரக்கணக்கான புத்தகங்களை
கொண்டு வந்திருந்தாலும் அவை மலிவு விலையில் இருந்தாலும் கிடைப்பது மிக அரிது. குறிப்பாக குழந்தைகள் திரைகளில் ஒட்டிக்கொண்டு வாசிப்புப் பழக்கத்தை இழந்து வரும் இந்த காலகட்டத்தில், சாகித்ய அகாடமி தனது விரிவான அமைப்பைக் கொண்டு இந்தியாவின் வளமான இலக்கிய பாரம்பரியம் குறித்த செய்தியைப் பரப்ப இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்.