கொள்ளை நோய்களின் வரலாறு என்பது அறிவியலிலும் மருத்துவத்திலும் தொடர்ச்சியாக நடக்கும் முன்னேற்றங்களையும் உள்ளடக்கியதுதான். நுண்மங்களை வளர்க்கும் திட்டங்கள் உயிர்களைக் காப்பதற்கும் நோயின் வேகத்தை குறைப்பதற்கும் என்கிற நம்பிக்கையில் நிதியும், தொழில்நுட்பமும் ஆய்வு உழைப்பும் ஆய்வகங்களில் செலுத்தப்பட்டன. உயிரை பாதுகாப்பது, மருத்துவமனைகளை தவிர்ப்பது மற்றும் நோயின் தீவிரத்தன்மையை குறைப்பது போன்றவற்றுக்கு பல தடுப்பு மருந்துகள் உதவினாலும், மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து மட்டுமே நோய்க்கிருமியை உடலில் அதன் நுழைவு இடத்திலேயே எதிர்கொண்டு மேலும் பரவுவதை தடுக்கும் என்கிற உறுதியை தருகிறது. அந்த வகையில் பார்த்தால், 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மூக்கு வழி தடுப்பு மருந்தை முதன்மையான நோய்தடுப்பு மருந்தாக அவசர பயன்பட்டுக்கு அனுமதி தரப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
சரியாக செயல்பட்டால், மூக்கு வழி செலுத்தப்படும் மருந்துதான் இப்போதைக்கு கோவிட்-19ஐ கையாள மிக மேம்படுத்தபட்ட ஒரு சாதனமாக இருக்கும். தவிர மூக்கு மூலமோ, வாய் மூலமோ மருந்தை அளிப்பதென்பது வலிக்கும் ஊசியை செலுத்திக் கொள்வதைவிட அதிகம் தேர்வுக்குள்ளாகும். குறிப்பாக ஊசியை செலுத்திக் கொள்வது குறித்த மிகையான அச்சவுணர்வு காரணமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் சிறுவர்களிடத்திலும் பெரியவர்களிடத்திலும் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து இன்னும் வரவேற்பை பெறும். மூக்கு வழி செலுத்தப்படும் நோய் மருந்து நோய்க் கிருமிகளை உடலில் இருக்கும் கிருமிகளோடு கலப்பதை நுழைவிடத்திலேயே தடுக்கும் என்பது பொதுவாக மூக்கு வழி தடுப்பு மருந்துப் பற்றிய கருத்தாக்கமாக இருந்தாலும் கோவிட்-19ஐப் பொறுத்தவரையில் அது போலவே மனிதர்களிடத்தில் செயல்படுமா என்பது குறித்து பெரிய அளவில் ஆதாரம் இல்லை.
ஃபுளூ காய்ச்சலில் அது வேலை செய்வதாக சொல்லப்பட்டாலும், உலகின் வேறு பல பகுதிகளில் பயன்படுத்தவதற்காக மூன்று மூக்கு வழி தடுப்பு மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து மிக குறைவான தரவுகளே இருக்கின்றன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழி தடுப்பு மருந்துக்காக பாரத் பயோடெக் நடத்திய சோதனைகளின்போது “இந்தத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட பிறகு ஏற்படும் மோசமான விளைவுகளைப் பொறுத்தவரை, கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி வெளியிடப்பட்ட தரவுகளோடு ஒப்பிடும்வகையில்தான் இருக்கின்றன”. தடுப்பூசி எடுக்காத 3100 நபர்களிடத்தில் இரண்டு முறை மூக்கு வழி தடுப்பு மருந்து செலுத்தி அந்த நிறுவனம் மூன்றாம் கட்ட சோதனை நடத்தியதாகவும், 875 மக்களிடத்தில் மூக்கு வழி தடுப்பு மருந்தை பல்லின பூஸ்டராக செலுத்தி, பூஸ்டர் சோதனைகளை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. சோதனைகளின் தரவுகளை விரைவில் பொதுத் தளத்தில் வைப்பதாக நிறுவனம் உறுதியளித்திருக்கிறது.
தொற்று எண்ணிக்கைகள் குறைந்திருப்பது உலகை கொஞ்சம் நிதானிக்க வைத்திருந்தாலும், நோய்க்கு எதிரான முயற்சிகளை தொடர வேண்டும். ஆனால் தற்போது எண்ணிக்கை குறைந்திருப்பது ஒரு சின்ன ஆசுவாசத்துக்கான இடத்தை அளிக்கவே செய்கிறது: சமூகத்தில் மருந்துகள் அல்லது தடுப்பு மருந்துகளின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதி பரிசீலிக்கப்படும் அதே நேரம் இப்போது சோதனைகளின் முடிவுகளும் தரவுகளும் பொதுத்தளத்தில் வைக்கப்பட வேண்டும். நோயின் எல்லா அம்சங்களுடனும் போரிடுவதற்கு அதன் வெவ்வேறு துறைகளின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் இப்போதும் எதிர்காலத்திலும் அரசு வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதன் மீது அழுத்தம் செலுத்த வேண்டும், அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே, பொது மக்களுக்கு தடுப்பு மருந்தை எடுத்த செல்வதும் குறிப்பாக இரண்டு பிரதான தடுப்பூசிகளை பெறாத மக்களிடத்தில் எடுத்து செல்வதும், பூஸ்டர்களை தருவதும், அரசு செயல்திட்டத்தின் முதன்மையான கவனமாக இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.