நிதீஷ் குமாரின் குட்டிக்கரணம்

நேச சக்திகளை அடையாளம் காண்பதைவிட வாக்காளர்களை சமாதானப்படுத்துவதுதான் நிதீஷ் குமாருக்கு பெரிய சவாலாக இருக்கும். 

August 11, 2022 10:35 am | Updated August 15, 2022 11:08 am IST

நிதீஷ் குமார் மீண்டும் ஒரு முறை அரசியல் ரீதியாக குட்டிக்கரணம் அடித்திருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் தற்போது பிஹாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்  ஐக்கிய ஜனதா கட்சித் தலைவர் நிதீஷ் குமாரை  'பல்டு சாச்சா – குட்டிக்கரண அங்கிள்' என்றே அழைப்பார். நிதீஷின் சமீபத்திய அதிரடி என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் பிரிந்துவந்த தேஜஸ்வியுடன் மறுபடியும் சேர்ந்திருக்கிறார். அதன் மூலம் பா.ஜ.கவின் நிலைமையை  சிக்கலாக்கியிருக்கிறார். கூட்டணியின் உள்ளிருந்தபடியே ஐக்கிய ஜனதா தள கட்சியை உடைத்து நிதீஷ் குமாரின் அரசுக்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் திட்டம் என்கிறது நிதீஷ் குமார் தரப்பு.  ஆனால் பா.ஜ.க இந்த குற்றசாட்டை மறுத்திருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைத்தாலும் அதனால் ஆட்சி அமைத்திருக்க முடியாது என்று அந்த கட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது.  பா.ஜ.கவுடனான இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றிருக்கிறார் நிதீஷ் குமார். பா.ஜ.கவின் எதிர் முகாமிலிருந்தும் பாராட்டை பெற்றிருக்கிறார்.

ஆனால், அவரது புத்திசாலித்தனமும்  சூழ்ச்சிகளும் தொடர்ச்சியாக அவரது அரசியல் சர்க்கஸைப் பார்த்துவரும் பிஹார் மக்களிடம் பாராட்டை பெறுவது சந்தேகம்தான். பா.ஜ.கவுடன் வெகு காலம் இருந்த பிறகு 2015 சட்டமன்ற தேர்தல்களை அவர் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து எதிர்கொண்டார். இதற்குப் பின்னர் 2017ல் அந்த கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு மீண்டும் பா.ஜ.க. அணிக்குத் திரும்பினார்.  அரசியல் மிக விசித்திரமான ஜோடிகளை உருவாக்கும் என்பது உண்மைதான். ஆனால்   கொள்கைரீதியாக ஆட்களை மாற்றிக்கொள்வதற்கு ஒரு எல்லை உண்டு. அதனை நிதீஷ் குமார் தாண்டிவிட்டார். 2017ல் ராஷ்டிரிய ஜனதா தளத்தைவிட்டு பிரிந்ததற்கான காரணமாக ஊழலை முன்வைத்தார். 2020 தேர்தலில் தான் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட பா.ஜ.கவிலிருந்து இப்போது விலகியிருப்பதற்கு அவர் சொல்லும் விளக்கத்தை மக்கள் நம்புவது கடினம்தான்.

ஐந்தாண்டுகளில் இரு முறை தனது கூட்டணியினரை மாற்றியிருக்கிறார் நிதீஷ்குமார். இந்த இரு முறையும் பிஹார் மக்கள் அவருக்களித்த தீர்ப்பை மதிக்காமல் இடம் மாறியிருக்கிறார். எதிர்முகாமல் இருப்பவர்கள் இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தை 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலில் புறப்பட்டிருக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றாகப் பார்க்கிறார்கள். இந்த தருணத்தில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரசும் இடது சாரி கட்சிகளும் இணைந்து சாதிக்கக்கூடியதெல்லாம் தற்போதைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதுதான். இங்கிருந்து 2024 ஆண்டு தேர்தலும் அதற்கு பிறகான பாதையும் மிக நீளமானது. வழியில் நிதீஷ் குமார் என்ன செய்வார் என்பதை கணிப்பது கொஞ்சம் கடினம்.

இந்த திடீர்  மாற்றத்துக்கு கூட்டணியிலுள்ள இதர அங்கத்தினரின் ஆதரவாளர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதும் கீழிருந்து வரும் சமிக்ஞைகளுக்கு ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதும் பல விசயங்களை முடிவு செய்யும். பா.ஜ.கவுக்கு இது ஒரு பின்னடைவுதான் என்றாலும் அதற்கு ஒரு புதிய ஜன்னல் திறந்திருக்கிறது. ஆட்சிக்கு எதிரான வாக்குகளுக்கு அந்த கட்சி மொத்தமாக உரிமை கோரலாம். புதிய ஆட்சியை அமைத்திருக்கும் கூட்டணியிலுள்ள முக்கிய நபர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதன் எதிரிகளிடமும் கூட்டணியினரிடமும் இன்னும் மரியாதையுடன் நடப்பதே பா.ஜ.கவுக்கு சரியான விஷயமாக இருக்கும். 

எதிரியாக உள்ள பா.ஜ.கவைவிட நண்பனாக உள்ள பா.ஜ.க இன்னும் ஆபத்தானது என்பதற்கு சிவசேனையும் ஐக்கிய ஜனதா தளமும்  கட்டியம் கூறுவார்கள். நண்பர்கள், எதிரிகள் எல்லோரையும் வீழ்த்தி தனது  தளத்தை விரிவுசெய்ய வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. நீண்ட கால வியூகமாக இது நல்லது என்றாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அதிகார  சமன்பாடுகளையும் கூட்டணி ஆட்சிக்களையும்  அது பலவீனப்படுத்தக்கூடும். பிறகு வாழ்க்கையின் பிற அம்சங்களைப் போலவே அரசியலில் ஒருவரால் குறுகிய காலத்தில் தாக்குபிடிக்க முடியாவிட்டால் அவருக்கு நீண்ட  எதிர்காலமும் இருக்காது.

This editorial in Tamil has been translated from English which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.