பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் புகார் அளிக்கப்படும் வன்முறை என்பது பிரச்னையின் நுனி மட்டுமே: இதில் வெளிப்படுத்துவதைவிட மறைந்திருப்பது அதிகம். ஆனால் அது வெளிப்படும் அம்சங்களே சில நேரங்களில் தேசத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கிவிடும் – குறிப்பாக பட்டப்பகலில் ஒரு இளம் பெண் மீது நடத்தப்படும் தாக்குதல் போலவொரு கொடுமையான குற்றம். கடந்த வாரம் சென்னையில் கல்லூரி மாணவி சத்யப்ரியாவை காதல் என்கிற பெயரில் வன்தொடர்ந்து வந்த இளைஞர், ஓடும் ரயிலின் முன் தள்ளிவிட்டு கொன்ற சம்பவம், பொது மக்களின் மனதை உலுக்கியிருக்கிறது. சென்னையில் ரயில் நிலையங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி இருக்கின்றன. 2016ல் இளம் தொழில்நுட்ப வல்லுனரான சுவாதி இப்படிதான் ரயில் நிலையத்தில் வைத்து பட்டப்பகலில் அவரை வன்தொடர்ந்த ஒரு நபரால் கொல்லப்பட்டார். 2021ல் சுவேதா என்ற ஒரு இளம் கல்லூரி மாணவியை ஒரு புறநகர் ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்தார் அவரோடு ‘சிக்கலான உறவில்’ இருந்த நபர். இந்த ஒவ்வொரு வழக்கிலும் ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத வன்தொடர்பவரின் இயலாமையே நேரடியாக வன்முறைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் தில்லியில் ஒரு எட்டு வயது சிறுமி கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். செப்டம்பரில் உத்திர பிரதேசத்தில் உள்ள லகிம்புர் கேரியில் இரண்டு பதின்பருவ வயது பெண்கள் சடலங்களாக கிடைத்திருக்கிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் துணியால் கழுத்து நெறிக்கப்பட்டு மரத்தில் அவர்கள் தொங்கவிடப்பட்டிருந்ததாக காவல்துறை சொன்னது. ஒரு சில வழக்குகள் மட்டுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றன அல்லது சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான வழக்குகள் புகாரளிக்கப்படாத நிலையேதான் இருக்கிறது – பிரச்னையின் கண்ணுக்குப் புலப்படாத ஆனால் மிகப் பெரிய பகுதி இது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பல வகையான குற்றங்களை
கையாள்வதில் ஏற்ற இறக்கங்களைக் கொண்ட வரலாற்றில், 2012ல் நடந்த கொடூரமான நிர்பயா பாலியல் வன்முறை வழக்கு ஒரு முக்கியமான மைல் கல். அது தேசத்தை மிகப் பலமாக உலுக்கியது. அதன் காரணமாக சட்டமியற்றுபவர்கள் அவசர அவசரமாக சட்டங்களை இன்னும் வலிமைப்படுத்தவும் இதுபோன்ற மோசமான குற்றங்கள் இனி எப்போதும் நடக்காத வகையில் முறைகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கவும் செய்தார்கள். ஆனாலும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி 2021ல் பெண்களுக்கு எதிராக 4,28,278 லட்சம் குற்றங்கள் நடந்திருக்கின்றன. பாலியல் வல்லுறவு, பாலியல் வல்லுறவு மற்றும் கொலை, வரதட்சணை கொடுமை, கடத்தல், கட்டாய திருமணம், சுரண்டலின் பொருட்டு ஆட்கடத்தல் மற்றும் கணிணியில் நடக்கும் துன்புறுத்தல் ஆகியவை இவற்றுள் அடங்கும். நிர்பயா நிதி உருவாக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த உத்திகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு விட்டதா என்று அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டியது முக்கியம். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளால் நிறைந்திருக்கும் நீதிமன்றங்களில் விரைவான விசாரணை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரை தண்டனைக்குட்படுத்தும் தீர்வு என்பது பாதிப்புக்குள்ளாகிறது. பாதுகாப்பான, மீள்தன்மையுடைய, அனைவருக்குமான நகரங்களை பாலினப் பார்வையிலிருந்து கட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை நீடித்த வளர்ச்சிக்கான குறிக்கோள்கள் வலியுறுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று வரும்போது அதிகாரிகளின் தரப்பில் எந்தவொரு தளர்வும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த வன்முறையை முற்றிலும் சகித்துக்கொள்ளாத அணுகுமுறை ஒன்றே ஏற்றுக்கொள்ளத்தக்கது.
This editorial has been translated from English, which can be read here.