Main text: மிகச் சிறந்த விளையாட்டு வீரர் பீலேவால் ‘அழகான விளையாட்டு’ என்று குறிப்பிடப்பட்ட கால்பந்துக்கும் மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவுக்கும் இடையில் ஒரு சிக்கலான உறவே இருக்கிறது. ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா கால்பந்து ஆடிய ஒரு காலம் இருந்திருக்கிறது. தற்போது, ஐரோப்பிய லீக் ஆட்டங்கள் தொலைகாட்சியில் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. இருந்தாலும் ஃபிபாவின் புள்ளிவிவர அட்டவணைப்படி இந்தியா 104வது இடத்தில் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய அன்று அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டு அவமானத்துக்குள்ளானது. இந்த தண்டனைக்கு “மூன்றாம் தரப்பின் தலையீடு” தான் காரணம் என்று ஃபிபா சொன்னது. மூன்றாம் தரப்பு என்று ஃபிபா சொன்னது, உச்ச நீதிமன்றம் அமைத்த நிர்வாகிகள் குழுவைத்தான். அரசியல்வாதியாகவும் இருந்த அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் முந்தைய தலைவர் பிரஃபுல் பட்டேல் தலைமையிலான நிர்வாகம், தேசிய விளையாட்டு வளர்ச்சி விதிகள் வரையறுத்திருந்த 12 வருட பதவிக் காலத்தையும் தாண்டி பதவியிலிருந்த நிலையில், சிக்கல்களை சரிசெய்ய உச்ச நீதிமன்றம் ஒரு நிர்வாகிகள் குழுவை நியமித்தது. அக்டோபரில் நடக்கவிருக்கும் 17 வயதுக்கும் குறைவான பெண்களுக்கான உலக கால்பந்து கோப்பையை நடத்தும் உரிமையை இந்தியா தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் உடனடி கவலையாக இருந்தது. விளையாட்டுத் துறை அமைச்சகமும் நீதிமன்றமும் பங்கெடுத்த அடுத்தடுத்த கட்ட நகர்வுகளில், நீதிமன்றம் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தற்காலிக பொது செயலாளர் சுனந்தோ தர் மற்றும் அவரது குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைத்து தற்போது காலாவதியாகிவிட்ட நிர்வாகிகள் குழு பற்றிய ஃபிபாவின் சந்தேகங்களை போக்கியது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று சர்வதேச கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிபா அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடையை விலக்கியதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் எல்லாம் நல்லபடியாக முடிந்ததாகவும் சொல்ல முடியாது.
கால்பந்து உலகில் இந்தியாவின் 11 நாள் ஊடாட்டம் முடிவுக்கு வந்துவிட்டாலும், கோகுலம் கேரளா கால்பந்து குழு உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்களுக்கான கோப்பை போட்டியில் பங்கு பெற முடியாதது போன்ற மோசமான விளைவுகள் ஏற்பட்டது. தடைக்கான எச்சரிக்கை வந்தபோதே அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு, நிர்வாகிகள் குழு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவையின் மெத்தன போக்கும் எதிர்வினையும் அவர்களது மோசமான செயல்பாடுகளையே காட்டுகிறது. ஃபிபா தடையை அமல்படுத்தியவுடனேதான் அரசும் நீதிமன்றங்களும் துரிதமாக செயல்பட்டன. இந்த மோசமான நகர்வுகள் இந்திய விளையாட்டில் நிலவும் இரட்டைத் தன்மையை காட்டுகின்றன. கிரிக்கெட் போல வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற விளையாட்டுகளுக்கும், ஆதரவு தேவைப்படும் பிற துறைகளுக்குமான வேறுபாட்டை காட்டுகிறது. ஒரு பக்கம் விளையாட்டு வீரர்கள் அவர்களது தாங்குதிறனையும் மீறி போராடுகிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் நிர்வாகங்கள் எதிர்ப்புகளிலும் சட்டரீதியான போராட்டங்களிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இனம் இனத்தை சேரும் என்பது போல கட்சிகளை தாண்டி விளையாட்டு அரசியல்வாதிகளை இணைக்கவும் செய்கிறது. ஆரம்ப காலங்களில் அரசு நிர்வாகம் சார்ந்த கடுமைகளை தவிர்ப்பதற்காக அரசியல்வாதிகளை உள்ளே கொண்டு வந்தன விளையாட்டு நிர்வாகங்கள். இதற்கிடையில் விளையாட்டில் உள்ள மென் அதிகாரத்தை விரும்பத் தொடங்கிய அரசியல்வாதிகள் தங்களது பதவிக் காலங்களை நீட்டித்துக் கொண்டார்கள். நிர்வாகிகளாக மாறும் விளையாட்டு வீரர்களில் எல்லோருமே விளையாட்டை தங்களை விட முக்கியமாக நினைப்பதில்லை என்பது இன்னொரு பிரச்னை. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர்கள், நட்சத்திர வீரர்களின் ரசிகர்களாக மாறிவிட்டதுடன், சம்பளத்தை வழங்கும்போது கடுமை காட்டவும் செய்தார்கள் என்பது இன்னொன்றையும் தெளிவுப்படுத்தியது – வலிக்கு மட்டும் சிகிச்சை கொடுப்பது எப்போதும் உதவுவதில்லை. அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கும் அதன் தேர்தல் அதற்கான புதிய பாதையை வெளிப்படுத்த வேண்டும்.
This editorial has been translated from English which can be read here.