பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு டிவிட்டர் வாயிலாக திங்கள் அன்று பிரதமர் நரேந்திர மோதி விடுத்த இரங்கல் செய்தி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அண்டை நாட்டில் நடந்திருக்க கூடிய மிக மோசமான இயற்கை பேரிடருக்கு பிறகு, பல வார மௌனத்தை கலைத்து இந்த செய்தி வந்திருக்கிறது. 1,100 பேருக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்; 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; நாட்டில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியிருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். வீடுகள், சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளின் சேதாரம், பத்து பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பயிர்களையும் வெள்ளம் பாதித்திருக்கிறது. தண்ணீர் வடியும்போது, நோய்களும் உணவுப் பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்கிற அச்சமும் நிலவுகிறது. கூடுதலாக, இந்த மோசமான வெள்ளம் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது என்பது ஒட்டுமொத்த தெற்காசியாவும் கவலைப் பட வேண்டிய விஷயம். உலக வெப்பமயமாதலால் அதிக பாதிப்புக்குளாக்கும் பிரதேசமாக தெற்காசியா இருக்கும். செவ்வாய் கிழமை அன்று ஐ.நா சபையின் பொது செயலர் அண்டானியோ குட்டரெஸ் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இயல்பாக இல்லாத பருவநிலைக் காரணிகளால் இந்த மழை ஏற்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில், பாகிஸ்தான் “ஸ்டீராயிட்ஸ் எடுத்துக்கொள்ளும் ஒரு பருவமழையால்” தாக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஐக்கிய அமீரகம், கத்தார், துருக்கி போன்ற நாடுகள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு நிவாரணங்களை அனுப்பியிருக்கின்றன. இன்னும் நிறைய நாடுகள் உதவுவதாக உறுதியளித்திருக்கின்றன. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதியம், செவ்வாய் கிழமையன்று 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானை மீட்பதற்கான ஒரு பகுதி உதவியாக அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி இன்னும் அதிகமாகதான் ஆகும் என்பதை உணர்ந்துள்ளதால், 2019ல் ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்புக்கு பிறகு இந்திய காய்கறிகளையும் அடிப்படை பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக தடையை நீக்கக்கூடும் என பாகிஸ்தானின் நிதி அமைச்சர் மிஃப்தாஹ் இஸ்மாயில் திங்கள் அன்று சொல்லியிருக்கிறார். கோவிட்-19 காலகட்டத்தில் மருத்துவரீதியான இறக்குமதிகளுக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய மனித நேய அடிப்படையிலான உதவிக்கும் மட்டுமே இதுவரையில் பாகிஸ்தான் விலக்களித்திருந்தது.
இந்திய-பாகிஸ்தான் உறவு மிக மோசமான நிலையில் இருந்தாலும், இரு நாடுகளும் தத்தம் உள்ளூர் கருத்துகளை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்போருக்கு முடிந்தவரை உதவுவதற்காக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியிலேயே நடக்கும் மக்களின் துயரைப் பற்றி பாராமுகமாக இருந்தால், நேபாளம், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஆஃப்கானிஸ்தானின் விவகாரங்களில் பெருமைப்பட்டுக் கொள்வதுபோல அண்டை நடக்கும் விவகாரங்களுக்கு முதலில் எதிர்வினையை ஆற்றும் நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. இந்தியாவுடனான வர்த்தக தடையை நீக்கும் வாய்ப்பை புறக்கணித்தால், பாகிஸ்தானும் கடுமையான, குறுகிய நோக்கம் கொண்ட ஒரு நாடாகவே காட்சியளிக்கும். மேலும் அப்படியொரு வாய்ப்பை நிராகரிப்பது பாகிஸ்தானின் நலன்களையே பாதிக்கும். இது மாதிரியான ஒரு இயற்கை பேரிடர் சூழலில் குறைந்த விலையில் பொருட்களைப் பெறக்கூடிய ஒரு வாய்ப்பை அது இழக்கும். நிதி போன்ற விஷயங்களை கருத்தில்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை அனுமதிக்கும் அரசுகள், இது மாதிரியான ஒரு காலகட்டத்தில் இரண்டு நாடுகளுக்குமான பகையுணர்வு காரணமாக ஒன்றாக பணியாற்ற முடியாமல் போனால் அது பெருந்துயரமாக மட்டுமல்ல அபத்தமானதாகவும் இருக்கும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃபும் செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் செய்யவிருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையில் தீவிரவாத பிரச்னையால் பத்து வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஆழமான உரையாடலுக்கு பெரிதாக சாத்தியமில்லை என்றாலும், இப்போதிருக்கும் பேரழிவின் தாக்கத்தை குறைப்பதற்கான வழிகளை பற்றி பேசுவதற்கு இரு தலைவர்களும் நேரம் ஒதுக்க வேண்டும்.
This editorial has been translated from English which can be read here.