சாதாரணமாகப் பார்த்தால், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வருவாய் மற்றும் பொருளாதார அடிப்படையில் புதுவகையான இடஒதுக்கீட்டை அளிப்பதற்கு அரசியல் சாஸன ரீதியாகவே பல தடைகள் வரவேண்டும். ஆனால், பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டைப் பெறாத, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு ஒரு சிறப்பு ஏற்பாடு, அரசியல் சாஸனத்தில் செய்யப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய இட ஒதுக்கீடு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மீறுகிறது என்று நிரூபித்தால், இந்த இட ஒதுக்கீடே போய்விடும் என்பதுதான் இந்தத் திருத்தத்திற்குக் காரணம். இந்த சட்டத் திருத்தமானது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை என இரண்டுக்கு மூன்று என்ற பெரும்பான்மை விகிதத்தில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அப்படிச் செய்யும்போது, எது அதிகாரமளிக்கும் அல்லது வாய்ப்பளிக்கும் நடவடிக்கை என்பதை விளக்குவதில் நீதிமன்றம் தனது முந்தைய நிலைப்பாட்டிலிரு்நது ஒரு பெரிய விலகலை சந்தித்திருக்கிறது. முதல்முறையாக, மூன்று பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீட்டைப் பெற்றுவருபவர்களை ஒதுக்கிவிட்டு, வருவாய் அடிப்படையில் வழங்கும் ஒரு இடஒதுக்கீட்டை உயர்த்திப் பிடித்திருக்கிறது. 1992ஆம் ஆண்டின் இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது. ஆனால், வசதியான நிலையில் இருப்போருக்கு இந்த இட ஒதுக்கீட்டைத் தரக்கூடாது என்று சொன்னதன் மூலம், முதல் முறையாக பொருளாதாரத்தை ஒரு அளவுகோலாக முன்வைத்தது. இருந்தாலும், இதன் மூலம் தனிநபர்கள் விலக்கப்பட்டார்களே தவிர, அந்தக் குழுவானது இட ஒதுக்கீட்டைப் பெற தகுதியானதாகவே இருந்தது. அதே நேரம், காங்கிரஸ் அரசு பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கு என அறிமுகப்படுத்திய 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. வெறும் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று கூறியது.
ஜாதி அடிப்படையிலான பாரபட்சத்தால் ஒதுக்கப்பட்டு, முன்னேறுவதற்கான பிரதான வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் அதே நேரத்தில், அதே ஜாதி குழுவைச் சேர்ந்த, ஓரளவுக்கு முன்னேறியவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மேலும் பயனடையக் கூடாது என்பதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2019ஆம் ஆண்டில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினரைத் தவிர்த்த பிறருக்கு வெறும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியது. வாய்ப்புகளை எல்லோருக்கும் சமமாக அளிப்பது என்ற பார்வையில் பார்க்கும்போது, வருவாய் அல்லது பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து பயனாளர்களைத் தேர்வுசெய்வது சரியானதல்ல. பொருளாதார அடிப்படையை அறிமுகம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகாது என ஐந்து நீதிபதிகளுமே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏற்கனவே இட ஒதுக்கீட்டைப் பெற்றுவருபவர்களை இந்தப் புதிய இட ஒதுக்கீட்டு நடவடிக்கையிலிருந்து விலக்கிவைப்பது எல்லோரையும் சமமாகப் பார்ப்பது என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு விரோதமானது என தலைமை நீதிபதி யு.யு. லலித்தும் நீதிபதி எஸ். ரவீந்திர பட்டும் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.
இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக மிகக் குறைந்தவர்களே வாக்களித்தார்கள் என்பதால், அரசியல்ரீதியாக இதற்கு ஒரு ஏற்புடமை இருக்கிறது. அவ்வளவு எளிதாக அதனை நீதிமன்றத்தால் புறம்தள்ள முடியாது. வாய்ப்பளிப்பதற்காக ஒரு புதிய வகைமையை உருவாக்குவதில் நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பெரும்பாலான நீதிபதிகள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டு
விதிமுறைகளின் கீழ் பயனடைந்து வருவோரை இதிலிருந்து விலக்கிவைப்பதை பெரும்பான்மை நீதிபதிகள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை மேம்படுத்த, இத்தகைய விலக்கல் அவசியம் என்பதையும், ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறுபவர்களையும் சேர்த்துக்கொண்டால் இந்த இட ஒதுக்கீடு அளிப்பதன் நோக்கமே அடிபட்டுவிடும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது. காரணம், இதன் மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் என்ற புதிய இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டு அதிலிருந்து பெரும்பான்மையானவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். ஒரு வறுமை மீட்பு நடவடிக்கையாக இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தக்கூடாது என்ற வாதத்தில் ஓரளவுக்கு நியாயம் இருக்கிறது. வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு அளிக்கப்படும் ஒரு கூட்டு நிவாரணத்தை, வருவாய் குறைந்த பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சில பயன்களை அளிக்கும் ஒரு திட்டமாக மாற்றக்கூடாது. வருடத்திற்கு எட்டு லட்ச ரூபாய் வருவாய் என்ற பொருளாதார அளவுகோலின் மூலம், சமூக ரீதியில் ஏற்கனவே மேம்பட்ட நிலையில் இருப்பவர்களும் பயனடைவார்கள் என்பதால், இதனை ஏற்கனவே ஒரு வழக்கில் நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. இரண்டரை லட்ச ரூபாய்க்குக் கீழே வருவாய் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், 8 லட்ச ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது ஏற்புடையதல்ல. அதேபோல, ஐம்பது சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்பது ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்; பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாது என்று பெரும்பான்மை நீதிபதிகள் கருதுவது, அரசியல் சாஸன ரீதியில் ஏற்கத்தக்கதல்ல. ஏனென்றால், எல்லோருக்குமான பொதுப் போட்டிப் பிரிவிலிருந்துதான் இந்தப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாக வைப்பது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டால், பயனடைவோர் அதிகபட்ச அளவில் இருக்கும்வகையில்தான் அதனை வடிவமைக்க வேண்டும். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் தந்திருந்தால், பெருளாதார ரீதியில் மேம்படுத்துவது என்ற நோக்கம் இன்னும் சிறப்பாக நிறைவேறியிருக்கும். இட ஒதுக்கீட்டின் மூலம் ஒரு பிரிவினர் மட்டும் அதிக அளவில் பயனடையக்கூடும் என்ற அச்சம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், வசதி படைத்தோரை விலக்கி வைப்பதன் மூலம் ஓரளவுக்கு நீக்கப்பட்டது. அப்படியான சூழலில், வசதிபடைத்த பிற்படுத்தப்பட்டோர் பொதுப் பிரிவில்தான் போட்டியிட வேண்டும். பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோரை விலக்கிவைப்பதன் மூலம், பொதுப் பிரிவில் உள்ள வாய்ப்புகளுக்கு போட்டியிடுவதற்கான தகுதியில் ஒரு சமமற்ற தன்மை உருவாக்கப்படுகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை எல்லோருக்கும் அளிப்பதையும் வசதியானோரை அடையாளம் காண்பதற்கான பொருளாதார உச்சவரம்பை, வருமான வரித் துறை நிர்ணயித்திருக்கும் அளவுக்குக் குறைப்பதையும் அரசு பரிசீலிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிலிருந்தும் சில பலன்களைப் பெற முடியும்.
This editorial has been translated from English, which can be read here.