எல்லைப்புற கிராமங்களின் வளர்ச்சிக்கு, குறிப்பாக பாதுகாப்பு நோக்கிலிருந்து, இந்திய அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. நாட்டின் மீது அக்கறை கொண்ட தேசபற்றுடைய குடிமக்கள் வசித்தால்தான் எல்லைப்புற கிராமங்களை முழுமையாக பாதுகாக்க முடியுமென்று டிசம்பர் 29ஆம் தேதியன்று சொன்னார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. எல்லைப்புற கிராமங்களில் வளர்ச்சியையும் தகவல் தொடர்புகளையும் மேம்படுத்த 2022ன் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த துடிப்பான கிராமத் திட்டத்தை திறம்பட பயன்படுத்த வேண்டுமென்று எல்லைப் பாதுகாப்பு படையை திரு. ஷா கேட்டுக் கொண்டார். இந்த திட்டம் “குறைந்த மக்கள் தொகை கொண்ட, அதிக இணைப்புகளும் கட்டமைப்புகளும் இல்லாத, வளர்ச்சியால் கிடைக்கும் ஆதாயங்களிலிருந்து பெரும்பாலும் விடுபடும் எல்லைப்புற கிராமங்களை” மேம்படுத்துவதற்கான திட்டம் என்று தனது 2022ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்த கிராமங்களில் அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசின் “முழுமையான அணுகுமுறையை” இந்த திட்டம் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோதி சொல்லியிருந்தார். தற்போதுள்ள திட்டங்களை புதிய திட்டமாக ஒன்றிணைப்பதற்கான யோசனை இருப்பதாக மார்ச் 29, 2022ல் நாடாளுமன்றத்தில் சொன்னது உள்துறை அமைச்சகம். அதற்கான செயலாக்க கட்டமைப்பு, நிதி தேவைகள் மற்றும் பிற வழிமுறைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சொன்னது. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் எல்லை வளர்ச்சித் திட்டம் எல்லை பிராந்தியங்களின் வளர்ச்சியை முழுமையாக உள்ளடக்கியிருக்கிறது. அதிலிருந்து துடிப்பான கிராமத் திட்டம் எப்படி வேறுபடும் என்று தெளிவில்லை. அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில், துடிப்பான கிராமத் திட்டத்தின் விவரங்கள் குறித்தும் பெரிய தெளிவில்லை. குறிப்பாக, எல்லா எல்லைப் பகுதிகளுக்குமான திட்டமா அல்லது நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல சீனாவுடனான வட எல்லைப் பகுதிக்கான திட்டம் மட்டுமா என்பது தெரியவில்லை. ஊரக உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, சுற்றுலா மையங்கள், சாலை இணைப்பு, பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்குதல், தூர்தர்ஷன் மற்றும் கல்வி சேனல்களை நேரடியாக
இல்லத்துக்கு வழங்குதல் மற்றும் வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கான ஆதரவு ஆகியவை துடிப்பான கிராமத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் ஆகியவற்றில், சீன எல்லையில் உள்ள கிராமங்களை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கவும் திட்டங்கள் இருந்தன. இந்த திட்டத்திற்கான நிதிநிலை ஒதுக்கீடு, செலவின நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் சமீபத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்தது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே எல்லைப் பகுதிகளை வைத்திருப்பது மாறிக்கொண்டேயிருக்கக்கூடிய ஒரு சவால். அதற்கு நுண்ணுணர்வு கொண்ட ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது. வியூகம் வகுப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் நாடுகளுக்கிடையிலான போட்டிகளால் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதில்லை. பொதுவான இன மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்ட அந்த மக்களை எல்லைகள்தான் பிரித்து வைக்கின்றன. தேசப்பற்றின் முன்னணி படையினராக இருக்க வேண்டிய சவாலை அவர்கள் எதிர்கொள்ள கூடாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE