திங்கள் அன்று குஜராத்தின் முதல்வராக இரண்டாம் முறை பதவியேற்றுக் கொண்ட பூபேந்திர படேல், நரேந்திர மோதிக்கு பிறகு பதவிக்கு வரும் மூன்றாவது நபர். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு உதவியது திரு.மோதியின் செல்வாக்குதான். திரு.படேல் திரு.மோதியின் முழுமையாக நம்பிக்கையை பெற்றிருக்கிறார். பரப்புரையில் திரு.படேலின் பங்கு குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் தன்னளவில் ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்கிற அழுத்தம் அவர் மீது இருக்கிறது. மாநிலத்தின் பல சமூகங்களையும் பிராந்தியங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களை கொண்டிருக்கிறது புதிய அமைச்சரவை. பதிதார் சமூகத்திலிருந்து மூன்று பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஐந்து பேர், கோலி சமூகத்தில் இரண்டு பேர், பிராமணர், ஜெயின் மற்றும் ராஜ்புத் சமூகங்களைச் சேர்ந்த தலா ஒருவர், பழங்குடி சமூகங்களிலிருந்து இருவர் மற்றும் பட்டியலின சாதியை சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். அமைச்சர்களில் ஆறு பேர் சௌராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். தெற்கிலிருந்து நான்கு பேர், மத்திய மற்றும் வட பிராந்தியங்களிலிருந்து தலா மூன்று பேர் இருக்கிறார்கள். காங்கிரஸிலிருந்து விலகியவர்களில் குறைந்தது நான்கு பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஊழல், பண வீக்கம் போன்றவற்றை பற்றி தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பதிவு செய்திருந்த பொதுமக்களின் அதிருப்தியை பா.ஜ.கவின் மிகப்பெரிய வெற்றி மறைத்திருக்கிறது, ஆனால் முற்றிலும் அழித்துவிட்டதாக சொல்ல முடியாது. மாநிலத்திலிருந்து இரு பெரும் தலைவர்களின் – திரு. மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா - கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசின் முனைப்பு மிகுந்த உதவியோடு குஜராத் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. ஆனால் அது மட்டும் போதாது. புதிய அரசுக்கு ஏற்கனவே நிறைய பணிகள் காத்திருக்கின்றன.
வேலையின்மை விகிதங்களை சரி செய்வது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணி. குறிப்பாக மாநிலத்தின் ஊரக பகுதிகளிலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் இதை செய்ய வேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது புதிய அரசின் உடனடியான சவால். ஒப்பந்த வேலைவாய்ப்பு காரணமாக மாநிலத்தின் திறன் பலவீனமடைவதால் சமீப காலங்களில் நிர்வாகம் மோசமாகி வருகிறது. சமூக அளவில், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டசத்துக்கான செலவினங்களும் அதன் விளைவுகளும் மாநிலத்தின் செழிப்பு நிலை அந்தஸ்துக்கு ஏற்ப இல்லை. குஜராத்தின் புகழ் பெற்ற வளர்ச்சி மாடலிலிருந்து மக்கள் மிகவும் விலகியிருந்த பழங்குடிப் பகுதிகளில் இதன் காரணமாகவே ஆம் ஆத்மி நுழைந்திருக்கக் கூடும். பா.ஜ.க ஆட்சியின் கீழ் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தாலும் அதன் நற்பலன்களை பெரும்பாலும் சமூகத்தின் உயர்த்தட்டு பிரிவினர் - அதிலும் குறிப்பாக ஆதிக்கச் சாதிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் சில சக்திவாய்ந்தவர்கள் – மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரையில், குஜராத் நன்றாக செயல்படும் மாநிலங்களில் ஒன்று. ஆறாவது இடத்தில் (2020-21) மாநிலம் இருக்கிறது. ஆனால் வளர்ச்சிக் குறைவு (2019-20) மற்றும் வேறு பல அளவுகோல்களில் மாநிலம் 30 மாநிலங்களுக்கிடையில் 26வது இடத்தில் இருப்பது, தொடர்ச்சியான பின்தங்கிய வளர்ச்சியையே சுட்டுகிறது. இந்த புதிய மக்கள் தீர்ப்பைப் பயன்படுத்தி பரிவுணர்வு மிக்க நிர்வாக மாதிரியாக குஜராத்தை திரு.படேல் வளர்த்தெடுக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.