ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலேனா பேர்போக்கின் இந்தியப் பயணமும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான பேச்சுவார்த்தையும் ஒரு மேம்பட்ட இருதரப்பு உறவுக்கான களத்தை அமைத்திருக்கின்றன. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பயணங்களை ஊக்குவிக்கும் இயக்கம் மற்றும் இடம் பெயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சந்திப்புக்கு முன்பாக ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஜெர்மனி நிதியளிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 2022ஆம் வருடத்தைப் பொறுத்தவரையில் இரு நாடுகளுக்குமிடையில் தீவிர உயர்மட்ட ஆலோசனைகள் நடந்த வருடமாக இருந்தது. ஜெர்மனிக்கு பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை பயணம் மேற்கொண்டார். ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடனான இந்திய-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆலோசனைகளுக்காக ஒரு முறை பெர்லினுக்கும் இன்னொரு முறை ஜி-7 உச்சி மாநாட்டுக்கு பவேரியாவுக்கும் பயணம் மேற்கொண்டார். பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டிலும் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தார்கள். 2023ன் வசந்த காலத்தின் போது திரு.ஷோல்ஸ் தில்லிக்கு வருவார் என்றும் மீண்டும் செப்டம்பரில் இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பலதரப்பட்ட மேடையில் ‘ஜெர்மனிய கூட்டணி 90/பசுமைக் கட்சி’யின் தலைவரான திருமிகு.பேர்போக், காலநிலை மாற்றம் என்னும் முக்கியப் பிரச்னையை எதிர்கொள்வதில் இந்தியாவும் ஜெர்மனியும் இந்தியாவின் ஜி-20 தலைமையின் காலகட்டத்தில் ஒன்றாக இயங்கலாம் என்றார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்துவதைப் பற்றி திரு.ஜெய்சங்கர் பேசினார். அதில் 2005 தொடங்கி இந்தியாவும் ஜெர்மனியின் ஜி-4 குழுவின் ஒரு அங்கமாக இருக்கின்றன. ‘காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க ஐக்கிய நாடுகள்’ பாதை வேண்டும் என்கிற தனது முந்தைய சர்ச்சைக்குரிய கருத்தை திருமிகு.பேர்போக் திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்க்க வேண்டிய ‘இருதரப்புப் பிரச்னையாக’ காஷ்மீரைப் பார்ப்பதாக அவர் தனது வருகைக்கு முன்பு தி இந்துவிடம் தெரிவித்தார். யுக்ரைன் போர் பற்றிய கருத்து வேறுபாடுகள் தொடரும் நிலையில் அது இந்த உறவின் சாராம்சத்தை சோதிக்கக் கூடும். ரஷ்யாவிலிருந்து இந்தியா செய்யும் எண்ணை இறக்குமதி ஒரு தேசிய நலனுக்கான தேவை என்றும் ஐரோப்பா அங்கிருந்து தொடர்ந்து வாங்கி வரும் புதைபடிவ
எரிபொருட்களில் ஒரு சிறிய பகுதி அளவிற்கே இந்தியா அங்கிருந்து இறக்குமதி செய்வதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார் திரு.ஜெய்சங்கர். இது சரியாக இருந்தாலும், மாஸ்கோவுடனான அனைத்து தொடர்புகளையும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் துண்டித்துவிட்டன என்பதும் உண்மை. டிசம்பர் 5 ஆம் தேதி கடல்வழி இறக்குமதிகளுக்கான ‘எண்ணை விலை உச்சவரம்பு’ அறிமுகப்படுத்தப்பட்டவுடன் எரிபொருள் இறக்குமதி மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு புறம், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 21 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய வினியோகஸ்தகராக ரஷ்யா உருவாகியிருக்கிறது. Foreign Affairs Journalல் எழுதிய அதிபர் ஷோல்ஸ், யுக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு பிந்தைய புவிசார் அரசியல் மாற்றத்தை விவரிக்க Zeitenwende அல்லது திருப்புமுனை என்கிற வார்த்தையை பயன்படுத்தி, உலகம் ஒரு ‘மகத்தான, மிகப்பெரிய’ மாற்றத்தை எதிர்கொண்டதாகச் சொன்னார். சர்வதேச அமைதியையும் கட்டமைப்பையும் ‘உடைத்துவிட்டதாக’ ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதின் மீது குற்றசாட்டையும் வைத்தார். ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியா அனைத்து மேற்குலக கூட்டணியினரையும் ஒன்றாகக் கொண்டு வர ஜெர்மனியுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது. ரஷ்யாவை பற்றிய ஆழமான வேறுபாடுகள் காரணமாக, காலநிலை மாற்றம், சமத்துவமின்மை, வறுமை மற்றும் டிஜிட்டல் பிளவு போன்ற முக்கியமான பிரச்னைகளில் ஒருமித்தக் கருத்து எட்டப்படாமல் இருக்கும் நிலையும் ஏற்பட்டுவிட கூடாது.
This editorial has been translated from English, which can be read here.