அரசியல் சாசனம் முன்வைக்கும் விழுமியங்களை கடைப்பிடிப்பதாக சொல்லிக்கொள்ளும், இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு உதவும் வகையில் சமூக மற்றும் சட்டரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக தன்னை சொல்லிக்கொள்ளும் அதே நேரம், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை பிரிவினைவாத மற்றும் மதவாத அரசியலை பரப்பும் ஒரு தீவிர இஸ்லாமிய அமைப்பு என்று சொன்னால் அதன் பொருட்டு சர்ச்சை எழுவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. கேரளா மற்றும் குறிப்பாக கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் பிஎஃப்ஐ தொண்டர்களின் நடவடிக்கைகள், மத மற்றும் அரசியல் ரீதியான வன்முறைக்கு இட்டுச் சென்றதோடு, மத உணர்வுகளை புண்படுத்துதல் என்கிற பெயரில் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் இருந்தன. 2006ல் அது தொடங்கப்பட்ட காலகட்டத்திலிருந்து பிஎஃப்ஐ ஒரு அமைப்பாக வளர்ந்திருந்தாலும் – இந்தியாவின் அரசியல் மேலாதிக்கத்தை நோக்கி இந்துத்வ சக்திகள் எழுச்சியடைந்த அதே காலகட்டத்தில் நடந்தாலும் அரசியல் மற்றும் சமூக தளங்களில் அதன் உறுதியான நடவடிக்கைகள் வாயிலாகவே இது நடந்தது – அதன் அரசியல் மற்றும் தேர்தல் பிரிவான சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுக்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. சிறுபான்மை வாக்காளர்கள் ஒன்று மதசார்பற்ற கட்சிகளுக்கு அல்லது மிதமான மதவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தார்கள். பிஎஃப்ஐ மதவாத அரசியலின் இஸ்லாமிய வடிவம். இன்று இந்தியாவின் பல பகுதிகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் பெரும்பான்மை மதவாதத்தின் கண்ணாடி பிரதிபலிப்பு. வன்முறை, கண்காணிப்பு மற்றும் சட்டமீறல் நடவடிக்கைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதன் உறுப்பினர்கள் சட்டரீதியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆனால் சுதந்திரமாக செயல்படுவதாக சொல்லிக் கொள்ளும் எஸ்டிபிஐ நீங்கலாக பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் மீதான உள்துறை அமைச்சகத்தின் முழுமையான தடை, இந்த சம்மட்டி அடி அணுகுமுறைதான் சரியான பாதையா என்கிற கேள்வியை எழுப்புகிறது. செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சரவையின் அறிவிக்கை, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை “சமூகத்தின் ஒரு பிரிவினரை தீவிரமயமாக்கும், ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் ஒரு ரகசிய செயல்திட்டத்தை” அமல்படுத்திக்கொண்டிருக்கும் “சட்டவிரோத அமைப்பாக” அறிவித்தது. பலகட்ட சோதனைகள் மற்றும் கைதுகளுக்குப் பிறகு ஐந்து வருட தடையுத்தரவையும் பிறப்பித்தது. குற்றம்சாட்டப்பட்ட தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் சட்டத்துக்கு முன் நிறுத்தும், வழக்குகளை முன்வைத்த நீதிமன்ற செயல்பாடாக இல்லாமல் பிஎஃப்ஐக்குத் தடை விதிப்பது, வரைமுறையில்லாத கைதுகளில் ஈடுபடுவது போன்ற இந்த அணுகுமுறை, நாட்டில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் பற்றிய அச்சவுணர்வை வலுப்படுத்தவே செய்யும். கூடவே அதிருப்தியில் இருக்கும் பிரிவினரை இன்னும் தீவிரமாக்குவதில் முடியும். தீவிரமானவர்களை மிதவாதிகளாக மாற்றும் முயற்சி, சட்ட அமலாக்க துறைகள் மட்டும் செய்ய வேண்டிய முயற்சி அல்ல. அரசியல்
சாசனம் முன்னிறுத்தும் மதசார்பற்ற விழுமியங்களை கடைபிடிக்கும் ஒரு நிர்வாகத்தின் விளைவாகவும் இருக்க வேண்டும். ஆனால் சமீப வருடங்களில் அது பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. தடை அறிவிப்புக்கு பின்னர் தங்கள் அமைப்பு கலைக்கப்படுவதாகச் சொல்லி எதிர்வினை ஆற்றியிருக்கிறது பிஎஃப்ஐ. இந்த தடையுத்தரவு இஸ்லாமியர்களை, குறிப்பாக குடியுரிமை சட்ட திருத்தம் போன்ற பாகுபாடான சட்டங்களுக்கு எதிராக நியாயமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல், ஜனநாயக செயற்பாட்டாளர்களை, குறிவைக்க பயன்படுத்தக்கூடாது.
This editorial has been translated from English, which can be read here.
Published - September 30, 2022 10:59 am IST