கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் கிழக்கு லடாக்கில் இருந்த ஐந்தாவது பிரச்னைக்குரிய புள்ளியிலிருந்து தத்தம் படைகளை விலக்கிக் கொள்வதை செப்டம்பர் 13ஆம் தேதி இந்தியாவும் சீனாவும் உறுதிப்படுத்தின. மிக சமீபத்தில் கோக்ரா-ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ்ஸில் இருந்த ரோந்துப் புள்ளி (Patrolling Point) 15லிருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு கல்வன் பள்ளத்தாக்கு, பங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தென் பகுதி, கோக்ராவிலுள்ள ரோந்துப் புள்ளி 17ஏ உள்ளிட்ட ஐந்து இடங்களில் இரண்டு தரப்புகளும் இடைப்பட்ட மண்டலங்களை அமைத்திருக்கின்றன. ஏற்கனவே அமைக்கப்பட்ட நான்கு இடைப்பட்ட மண்டல பகுதிகள் கடந்த இரண்டு வருடங்களாக அமைதியை நிலைநாட்ட உதவியிருக்கின்றன. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் பகுதியில் அமைந்திருக்கும் இடைப்பட்ட மண்டல பகுதிகளில் எந்த தரப்பும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கும் உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கெடுக்கச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு படைகள் விலக்கப்பட்டிருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளை பார்க்கும்போது, இரு தலைவர்களும் இரண்டரை வருடங்களாக நேரடியாக பேசிக் கொள்ளவில்லை. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளுக்கு இது மிக அசாதாரணமான சூழல். ஷாங்காய் உச்சி மாநாட்டில் அவர்கள் ஒரு சந்திப்பை மேற்கொண்டால் - செப்டம்பர் 14 ஆம் தேதி நிலவரப்படி இரு தரப்புமே ஒரு சந்திப்பு நடக்கும் வாய்ப்பை மறுக்கவும் இல்லை; உறுதி செய்யவும் இல்லை – அல்லது இந்தோனேஷியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் சந்தித்தால், சீனாவுடனான அதி உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடரும் சூழல் உருவாகலாம். அப்போது இந்தியா அதனை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். மீண்டும் பிரச்னைகள் உருவாவதை தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக இடைப்பட்ட மண்டல பகுதிகள் இருந்தாலும், இந்த ஏற்பாடு இந்தியா மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. சீனாவின் படைகளுக்கு நிகரான திறனை வெளிப்படுத்தியதன் மூலம், தனது நிலையில் உறுதியாக இருந்ததன் மூலம் இந்திய ராணுவம் 2020 ஏப்ரலில் ஐந்து பகுதிகளில் நடந்த சீனாவின் பல கட்ட நுழைவுகளில் இருந்து பின்வாங்க வைக்க முடிந்திருக்கிறது. இதற்கு விலையாக, அதற்கு முன்னர் இந்தியாவால் அணுக முடிந்திருந்த ரோந்துப் புள்ளிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. சில ராணுவ நோக்கர்களின் கருத்துப்படி இது சீனாவின் நீண்ட காலத் திட்டமாக இருக்கலாம். விரைவாக படைகளை அணிவகுக்க ஏதுவாக செயல்திட்டங்களும் நிலப்பரப்பும் சீனாவுக்கு ஆதரவாக இருந்தது காரணமாக இருக்கலாம். தவிர, டெம்சாக் மற்றும் டெப்சாங்கில் உள்ள பிரச்னைகளை தீர்க்க சீனா ஒப்புக்கொள்ளவில்லை. அவை இப்போதைய பதற்றங்களுக்கு முந்தையது என்று சொல்கிறது சீனா. பதற்றங்களை குறைக்கும் எந்த நோக்கமும் சீனாவுக்கு இல்லை. பதிலாக, கட்டுப்பாட்டுக்
கோட்டுக்கு அருகில் அதிகமான படைகளை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் உள்கட்டமைப்புகளை கட்டுவதை தொடர்கிறது. சொல்லப்போனால், இரு தரப்புகளுமே எல்லைகளைப் பற்றிய மிக நீண்ட நிச்சயமற்ற நிலையில்தான் காத்திருக்கின்றன. முந்தைய எல்லை ஒப்பந்தங்களை மீறி ஏப்ரல் 2020ல் ஆயிரக்கணக்கிலான படைகளை திரட்டும் முடிவை சீனா எடுத்ததுதான் இதற்கு காரணம். சீனா கட்டுப்பாட்டுக் கோட்டை ராணுவமயப்படுத்தும் தனது சமீபத்திய, இன்னும் விளக்கமளிக்காத நடவடிக்கையின் காரணமாக 40 ஆண்டுகளாக அமைதியை நிலைநாட்ட உதவிய பல கவனமான ஏற்பாடுகள் கலைந்துவிட்டன. இந்த நடவடிக்கையை சீனா திரும்பப் பெறாவிட்டால் 2020க்கு முன்பிருந்த உறவுக்கு திரும்ப இந்தியாவுக்கு போதிய அளவிலான ஊக்கம் இருக்காது. கட்டுப்பாட்டுக் கோடுகளுக்கு அருகில் படைகளை விலகிக்கொள்வது என்ற மிக சமீபத்திய முடிவு நிச்சயமாக வரவேற்கத் தகுந்த முடிவு என்றாலும், எந்த வகையிலும் இது எல்லைப் பிரச்னைக்கான தீர்வு என்பது பொருளில்லை.
This editorial has been translated from English, which can be read here.