கடந்த வாரம் இரண்டு வர்த்தக தினங்களில் ஏற்பட்டிருக்கும் பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள் இந்தியாவின் முறைப்படுத்தும் சூழல் மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கின்றன. இந்த ஏற்ற இறக்கங்கள் பெரும்பாலும் கட்டமைப்பு மற்றும் பொருட்கள் சார்ந்த முன்னணி நிறுவனமான அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சியாலேயே ஏற்பட்டிருக்கிறது. ‘பங்கு மோசடி மற்றும் கேள்விக்குரிய கணக்கியல் நடைமுறைகள்’ என்று அமெரிக்காவிருந்து இயங்கும் ஒரு பங்கு விற்பனை நிறுவனத்தின் அறிக்கையை அடுத்து, அதானி குழுமத்தில் ஏற்பட்ட சந்தை ரீதியான சிக்கல்கள், இந்திய ஸ்டேட் வங்கி மற்றும் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி பங்குகளையும் வெள்ளிக்கிழமையன்று கணிசமாக சரிய வைத்தன. இது நிதித்துறையின் பரவலான ஸ்திரத்தன்மை குறித்த முதலீட்டாளர்களின் கவலையை அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் குறித்த ஆய்வை முடுக்கிவிட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு ஊடக அறிக்கை தெரிவித்தாலும், சந்தை கட்டுப்பாட்டாளரிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. பங்கு விற்பனை நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை, மதிப்பில்லாதவை, குழுவின் நற்பெயரை களங்கப்படுத்தும் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை” என்று அந்தக் குழுமம் மறுத்துள்ளது. சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதாகவும் சொல்லியிருக்கிறது. பங்கு விற்பனை நிறுவனத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்னைகளையும் குழுமத்தின் பங்குகள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்கத் தொடங்கிவிட்ட உள்ளூர் முதலீட்டாளர்களின் கவலைகளையும் அதானி குழுமம் எப்படி கையாளப்போகிறது என்பது ஒரு புறம் இருக்க, செபி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட இந்தியாவின் முறைப்படுத்தும் அமைப்புகளுக்கு இதன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இல்லை, இல்லை.. ஒரு கடமை இருக்கிறது. இது இன்னும் தீவிரமாகப் பரவக் கூடும் என்கிற அச்சங்களை போக்குவதன் மூலம் நிலையை
சீராக்குவதுதான் அந்தக் கடமை. முக்கிய அளவுகோல்களாக இருக்கும் பங்குச் சந்தை குறியீடுகளில் இந்தக் குழுமத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், தனியார் பங்கு ஆராய்ச்சி அறிக்கைகள் வங்கித் துறையின் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறித்த கவலைகளை குறைத்து மதிப்பிட முயன்றாலும், முக்கிய பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி.யும் நாட்டின் நிதி அமைப்பின் முக்கிய தூண்கள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்கப் போவதில்லை. சேமிப்பாளர்களின் வைப்புத் தொகைகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் வடிவத்தில் இந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவையும், பொதுத்துறை கடன் வழங்குநர்களை போதுமான மூலதனமாக வைத்திருக்க முதலீடு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் வளங்களையும் வைத்துப் பார்க்கும் போது, நிதி முதலீட்டு கட்டுப்பாட்டாளர்கள் நம்பிக்கையளிக்கும் செய்திகளை முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலம் பரந்த பொது நலனுக்கு உதவியாக இருப்பார்கள். தேவைகளை வெறுமனே பட்டியலிடாமல் அவற்றை உறுதி செய்வதன் மூலமோ, சட்டங்கள் மீறப்பட்டால் நடவடிக்கைகளை அமலாக்குவதன் மூலமோ, ஒரு முதலீட்டுத் தளமாக இந்தியா மீதான நம்பகத்தன்மையை இந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிகரிக்க முடியும். 1990களின் பிற்பகுதியில் ஆசிய நிதி நெருக்கடி மற்றும் 2007-08 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியை அடுத்து அவ்வப்போது எழுந்துள்ள கடன் மதிப்பீடுகளின் நம்பகத்தன்மை குறித்த உலகளாவிய சர்வதேச விவாதத்திலும் இந்தியாவின் கட்டுப்பாட்டாளர்கள் மீண்டும் ஈடுபட வேண்டிய ஒரு நேரமிது. இந்தியா ஜி-20 தலைவர் பதவியை வகிக்கும் இந்த நேரத்தில், ஒழுங்குமுறை கட்டமைப்பு மிக சிறப்பாக இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.