ADVERTISEMENT

முக்கியமான தலையீடு

October 24, 2022 11:16 am | Updated 11:16 am IST

வெறுப்பு பிரச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும்

முறையான புகாருக்காக காத்திருக்காமல் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வெறுப்பு பேச்சைக் கையாள்வதில் காவல்துறை செயலூக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. அதற்கு இணங்குவதில் காவல்துறை ஏதும் தயக்கம் காட்டினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. தில்லி, உத்திர பிரதேசம் மற்றும் உத்திராகாண்டில் உள்ள காவல்துறையினரை நோக்கி விடுக்கப்பட்ட இந்த உத்தரவு, நீதிமன்றத்தின் முன்பிருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த “முடிவில்லாமல் பாய்ந்து கொண்டிருக்கும் வெறுப்பு பேச்சிற்கான’ எதிர்வினை. பெருகி வரும் “வெறுப்பு சூழலைப்” பற்றி குறிப்பிட்ட நீதிமன்றம், அதை கையாள்வதற்கான விதிகளைக் கொண்ட சட்டம் இருந்த போதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காவல்துறை செயல்படவில்லை என்பதை குறிப்பிட்டுக் காட்டியது. மத்தியில் உள்ள அரசும், ஒத்த கருத்து கொண்ட சில மாநில அரசுகளும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதி பற்றிய நீதிமன்றத்தின் கவலைகளை பகிர்ந்துக் கொள்ளவில்லை என்பது தெளிவு. சொல்லப்போனால், அவற்றுள் சில, திட்டமிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாலோ அல்லது பெரும்பான்மை குழுக்கள் நடத்தும் மத கூட்டங்களில் வன்முறையை தூண்டும் பேச்சுகளை அனுமதித்தன் மூலம் இணக்கமான வகையில் செயல்பட்டதாலோ சூழல் இன்னும் மோசமாககூட உதவியிருக்கலாம். ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் கருத்துகளை வெளிப்படுத்திய பின்னரும், சில கருத்துகள் இனப்படுகொலைக்கான குரலாக இருந்த பின்னரும் கூட, சில சர்ச்சைக்குரிய மதத் தலைவர்கள் எந்தவிதமான நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு தவிர்க்கமுடியாததாகிப் போனது. இந்த பின்னணியில்தான் அனைத்து மதங்கள் மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையில் மதசார்பற்றதன்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற அரசியலமைப்பு விழுமியங்களின் முக்கியத்துவத்தை நீதிமன்றம் எடுத்து வைத்திருக்கிறது.

கடந்த வருடம் ஹரித்துவாரில் நடந்த ஒரு மத ரீதியான மாநாட்டில்தான் தற்போது விசாரணைக்குள்ளாகியிருக்கும் ‘வெறுப்புப் பேச்சு’ வழக்குக்கான தொனியை உருவாக்கியது. அப்போதும் கூட நீதிமன்றம் அதை சரி செய்யும் முயற்சிகள் வேண்டும் என்றதை தொடர்ந்து உத்திரகாண்டில் உள்ள ரூர்கீயில் நடக்கவிருந்த இன்னொரு மாநாடு உள்ளூர் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் நீதிமன்ற தலையீடு காரணமாக சில கூட்டங்கள் நடக்காமல் போயிருக்கலாம், ஆனால் அத்துமீறல்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்று சொல்ல முடியாது. மத ஊர்வலங்கள் நடத்துவதற்கான வாய்ப்புகளாக இந்து பண்டிகைகள் இருப்பதும் அந்த ஊர்வலங்கள், வன்முறையை தூண்டும் நடத்தையின் மூலம் கலவரங்களில் முடிவதும் அச்சுறுத்தும் ஒரு பாணியாகியிருக்கிறது. அந்த கலவரங்களை அல்லது பிரச்னைகளை கையாள்வது என்கிற பெயரில், சட்ட முறைகளை பின்பற்றாமல் அதிகாரிகள் கலவரங்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுபவர்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது மாதிரியான போக்குகள், கூட்டு பிரார்த்தனைகளின் போது தேவையற்ற காவல் விசாரணை போன்ற சிறுபான்மையினர் மீது புதிய கட்டுபாடுகளை விதிப்பதற்கும், இந்து நிகழ்வுகளில் ஊடுருவதற்கென சதிகளைச் செய்வதாக புதிய குற்றசாட்டுகளை சுமத்துவதற்கும் வழி வகுக்கிறது. சில தொலைக்காட்சி சேனல்கள் அவற்றின் செயல்பாட்டின் மூலம் மதவெறியை அதிகரிக்கவே உதவுகின்றன. ஒரு பக்கம் நிர்வாகரீதியிலான பாகுபாடு, மறுபுறம் சமூக பாரபட்சங்களின் பரவல் ஆகியவை தேசிய மனநிலையில் ஒரு நச்சுத்தன்மையை கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. இறுதியில், வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளை தூண்டுவதற்கு சாத்தியமான அனைத்தையும் நீதிமன்றம் செய்ய வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT