ஜனவரி 6ஆம் தேதி நடந்த யூ.எஸ் கேப்பிடல் மீதான தாக்குதலை விசாரித்து வரும் நாடாளுமன்றக் குழுவின் ஒருமித்த முடிவின்படி, நான்கு கிரிமினல் குற்றசாட்டுகளின் பொருட்டு டொனால்ட் டிரம்பை நீதித்துறைக்கு அனுப்பவிருக்கிறது. 2024ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் முன்னாள் அதிபருக்கு இது பின்னடைவுதான். அமெரிக்க அரசியலை இது இன்னும் கொந்தளிப்பாக மாற்றும். பதவியிலிருந்து வெளியேறிய ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஏழு பேரும் குடியரசுக் கட்சியை சேர்ந்த இரண்டு பேரும் இடம்பெற்றிருந்தார்கள். 2020ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் பற்றி திரு.டிரம்ப் தவறான குற்றசாட்டுகளை பரப்பியதாகவும் தனது ஆதரவாளர்களை வன்முறையில் ஈடுபட தூண்டியதாகவும் இந்தக் குழு குற்றம் சாட்டுகிறது. கிளர்ச்சியை தூண்டியதற்காக, நாட்டை ஏமாற்ற சதி செய்ததற்காக, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைக்கு (அதிகாரத்தை ஒப்படைப்பது) இடையூறாக இருந்ததற்காக மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட சதி செய்ததற்காக திரு.டிரம்ப் மீது வழக்குத் தொடர அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது. திரு.டிரம்பின் பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில், அவரது குடும்ப நிறுவனமான டிரம்ப் ஆர்கனைசேஷன் குற்றவியல் வரி மோசடி காரணமாக தண்டனைக்குள்ளாக்கப்பட்டது. ரகசிய ஆவணங்களை திரு.டிரம்ப் கையாண்ட விதம் குறித்து எஃப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தார்கள் என்று சொல்லப்படும் குற்றசாட்டில் திரு.டிரம்பும் அவரது சகாக்களும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். தவிர, ஜனவரி 6ஆம் தேதி கலவரங்கள் பற்றியும் அதில் திரு.டிரம்பின் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றியும் விசாரிக்க நீதித்துறை ஜாக் ஸ்மித் என்கிற சிறப்பு வழக்கறிஞரை நியமித்திருக்கிறது. நீதித்துறையின் முடிவுகளில் நாடாளுமன்றம் தலையிட முடியாது என்பதால் நாடாளுமன்றக் குழுவின் குற்றவியல் பரிந்துரைக்கு எந்தவிதமான சட்டரீதியான முக்கியத்துவமும் இல்லை. பரிந்துரை
பற்றியும் குழுவின் அறிக்கையில் உள்ள ஆதாரங்கள் பற்றியும் அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் சுயாதீனமாக மதிப்பீடு செய்து, பிறகு ஒரு முடிவை எடுக்கலாம். ஜனவரி 6 கலவரங்களுக்கு திரு.டிரம்பின் எதிர்வினை அவர் வகித்த பதவிக்கு முற்றிலும் பொருத்தமற்றது என்பதோடு கடுமையான பொறுப்பற்றதனம் கொண்டது என்பதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லை. வெள்ளை மாளிகையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அலுவலகமான ஓவல் ஆஃபீஸில் இருந்தபடி தொலைகாட்சியில் அவர் கலவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் தனது ஆதரவாளர்களை கலைந்து போகச்சொல்லி அறிக்கைவிட மறுத்துவிட்டார் என்றும் குழு கண்டறிந்திருக்கிறது. இந்த நடத்தையும் தேர்தல் முடிவுகளை உடனடியாக ஏற்றுக்கொள்ள மறுத்ததும் அவரை இன்னொரு முறை அதிபர் பதவியை வகிக்க தார்மீக ரீதியில் தகுதியற்றவராக்குகிறது. ஆனால், திரு.டிரம்ப் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க திரு.கார்லண்டிடம் போதுமான ஆதாரம் இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. இன்னொரு புறம், இன்னும் பல விசுவாசிகளைக் கொண்டிருக்கும் முன்னாள் அதிபர், ஜனநாயகக் கட்சியினர் அதிகம் இருந்த குழுவின் குற்றவியல் பரிந்துரையை பாரபட்சமான “வேட்டையாக” சித்தரிப்பார். இதனால் அமெரிக்க சமூகத்தில் உள்ள அரசியல்ரீதியான பிளவு இன்னும் ஆழமாகும். (அனேகமாக பதவியில் இப்போது இருப்பவரோடு) மீண்டும் போட்டியிடும் ஒரு முன்னாள் அதிபரை குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்துவது ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு முன்னுதாரணமாகிவிடும். தண்டனையை பெறுவதற்கு ஒருமித்த நடுவர் குழு தேவைப்படும் என்பதால், போதுமான ஆதாரம் இல்லாமல் திரு.டிரம்ப் மீது குற்றம் சாட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எதிர்விளைவையே ஏற்படுத்தும். அதனால்தான் இந்த பரிந்துரை இருமுனை கத்தியாக இருக்கிறது. டிரம்ப் பிரச்னையை எப்படி கையாள்வது என்பதில் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு திரு.கார்லண்ட், ஜனவரி 6 குறித்த நீதித்துறையின் விசாரணைக்கு காத்திருக்கலாம்.
This editorial has been translated from English, which can be read here.