முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிதற்கு முன்னால் அந்த ஆய்வறிக்கைகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் வெளியிட வேண்டும் என்கிற கட்டாயத் தேவையை நீக்கியிருக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவு, தரமற்ற, கொள்ளையடிக்கிற இதழ்களில் பணம் கொடுத்து போதுமான மதிப்பாய்வு இல்லாமல் தங்களது ஆய்வுகளை வெளியிடும் ஆரோக்கியமற்ற போக்கை தடுக்கும் ஒரு முயற்சி. இந்தியாவின் முனைவர் ஆய்வுக் கல்வியின் தரத்தை இந்த போக்கு பலவீனப்படுத்தியிருந்தது. இந்த நோக்கிலிருந்து பார்க்கும் போது, மானியக்குழுவின் முடிவு சரியானதே. பெரும்பாலான முனைவர் பட்ட மாணவர்கள் புகழ்பெற்ற இதழ்களுக்கு தங்களது வரைவுகளை அனுப்பும் நேரம் எடுக்கும் முறையை தேர்ந்தெடுக்காமல், அப்படி அனுப்பிவிட்டு அதன் மீதான மதிப்புரை மற்றும் மறுபரீசிலனைக்கெல்லாம் காத்திருக்காமல் இது போன்ற இதழ்களில் வெளியிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதவித்தொகைகள் மற்றும் ஊதியங்கள் போன்றவை போதுமான அளவில் இல்லாத நிலையில், பல மாணவர்கள் தரமான ஆராய்ச்சிக்கு தேவைப்படும் நேரத்தை எடுத்துக்கொள்வதை விட அவசரகதியில் தங்களது முனைவர் பட்ட படிப்பை முடிக்கவே விரும்புகிறார்கள். கட்டாயத் தேவையை நீக்கியிருப்பது கூட சர்வதேச ஒழுங்குமுறை தர நிலைகளுக்கு ஏற்பவே உள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஆய்வறிக்கைகளை வெளியிடுவது கட்டாயமில்லை. ஆனால், எந்தவொரு உயர்மட்ட ஆய்வாளருக்கும் அது அவசியமாகிறது. அவர்களுடைய பல ஆய்வுகளை ஆய்வறிக்கைகள் முழுமையாக கொண்டுள்ளன. முனைவர் பட்ட மாணவர்கள் அவர்களின் சொந்த நலன்களின் பொருட்டு நல்ல தரமான இதழ்களில் தங்களது கட்டுரைகளை வெளியிடுவது நல்லது என்றும் மானியக்குழு அறிவுறுத்தியிருக்கிறது. காரணம், முதுநிலை முனைவர் ஆய்வுக்கான வாய்ப்புகளுக்கு அத்தகைய முனைவர் பட்டம் மதிப்பு சேர்க்கும். ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கான கட்டாய தேவையை நீக்கியிருப்பதன் மூலம் மாணவர்களும் பல்கலைகழகங்களும் சுயமாக உந்தப்பட்டு ஆய்வு செய்யும் சூழல் உருவாகும் என மானியக்குழு நம்புகிறது. இது போன்ற ஒரு கட்டாயம் இல்லாத ஐ.ஐ.டி நிறுவனங்களில் தற்போது அப்படியொரு சூழல்தான் நிலவுகிறது.
இந்த கட்டாய தேவையின் நீக்கமும் கல்வித்துறைகளில் உள்ள பன்முகத்தன்மைக்கான அங்கீகாரம் கூட. மானுடவியலின் சில கிளைகளில் இதழ்களில் வெளியிடுவதை விட தனிக்கட்டுரைகளாக வெளியிடுவது கல்வி சார்ந்த சக அறிஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான கூடுதலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முறையாக இருக்கிறது. கணிணி அறிவியல் ஆய்வாளர்கள் இதழ்களில் வெளியிடுவதை விட மாநாடுகளில் ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படுவதை இன்னும் அதிக மதிப்பு வாய்ந்ததாக கருதுகிறார்கள். சில துறைகளில் காப்புரிமை பெறுவது கூட ஆய்வின் தரத்துக்கான ஒரு குறியீடாக இருக்கிறது. அதனால் கட்டாயத் தேவையை நீக்கியிருப்பது இன்னும் புதுமையான வழிகளை கண்டடைவதற்கு உதவலாம். ஆனால் கட்டாயத் தேவையை நீக்கியிருப்பதன் மூலம் தரம் இன்னமும் குறையலாம் என்பது போன்ற கவலைகளும் இருக்கின்றன. காரணம், ஒரு ஆய்வாளரின், பல்கலைகழகத்தின் மதிப்பு என்பது வெளியிடப்பட்டிருக்கும், மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அறிக்கைகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. அது போன்ற அளவுகோல்களின் அடிப்படையில்தான் நிதி வழங்கலும் இயங்குகிறது. கட்டாய தேவை இல்லாத நிலையில் கூட புகழ்பெற்ற இதழ்களில் தங்களது ஆய்வறிக்கைகளை வெளியிட மாணவர்களை ஊக்குவிப்பது தற்போது பல்கலைக்கழக ஆய்வு ஆலோசனை குழுகளின் கைகளில்தான் இருக்கிறது. முனைவர் பட்ட மேற்பார்வையாளர்களும் இப்போது கூடுதல் பங்காற்ற வேண்டும். நிதி நெருக்கடிகள் காரணமாக விரைவாக முனைவர் பட்ட படிப்பை முடிக்க வேண்டும் என்பதாலேயே மாணவர்கள் அவசரகதியில் தங்களது ஆய்வுகளை வெளியிட முனைகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, பல்கலைகழக மானியக் குழுவின் முடிவு பின்னடைவை சந்திக்காமல் இருப்பதன் பொருட்டு அதிக அளவிலான நிதியும் அவசரமாக தேவைப்படுகிறது.
This editorial has been translated from English, which can be read here.