ADVERTISEMENT

முடிவற்ற சோதனை

March 01, 2023 11:26 am | Updated 11:26 am IST

ஜனநாயக செயல்முறைகள் மூலமாகவே மதரீதியான பிளவுப்படுத்துதலை மாற்றியமைக்க முடியும்.

புல்வாமாவில் பயங்கரவாதிகளால் வங்கி பாதுகாவலரும் காஷ்மீர் பண்டிட்டுமான சஞ்சய் சர்மா கொல்லப்பட்ட நிகழ்வு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை சமூகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒரு பகுதிதான். 1990ல் புல்வாமா பகுதியில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த நேரத்தில் ஜானகி நாத் இறந்த பிறகு, அங்கு பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளான இரண்டாவது பண்டிட் சஞ்சய் சர்மா. இந்தக் கொலை அப்பகுதியில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கலாம். என்றாலும், அப்பகுதியில் வாழும் அப்பாவி மக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதில் பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடைந்துவிட்டதையும் இது சுட்டிக்காட்டுகிறது. பொதுமக்களை குறிவைக்கும் தீவிரவாத சக்திகளின் செயல்பாட்டு முறை எப்போதும் தெளிவாகவே இருக்கிறது. அதாவது, இந்த தாக்குதல்களின் வழியாக அரசின் பதிலடியையும் ஒடுக்குமுறையையும் கோருவது. பின்னர், அதை வைத்து அதிருப்தியையும் பகையுணர்வையும் தூண்டி அவர்களின் நோக்கத்துக்கு உதவ நபர்களை திரட்டுவது. செவ்வாய்க்கிழமையன்று, இதன் தொடர் நடவடிக்கைகளில் ஒரு ராணுவ வீரரும் இரண்டு பயங்கரவாதிகளும் இறந்த பிறகு ஷர்மாவை கொன்றவர் கொல்லப்பட்டுவிட்டதாக பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், பள்ளத்தாக்கு மற்றும் புல்வாமாவில் உள்ள பண்டிட்டுகளை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்க இது சிறிய அளவில்கூட உதவாது. கடந்த வருடம், பயங்கரவாத தாக்குதல்களில் மூன்று உள்ளூர் பண்டிட்கள், மூன்று பிற இந்துக்கள் மற்றும் எட்டு உள்ளூர் அல்லாத தொழிலாளர்கள் உட்பட 29 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். தவிர, பள்ளத்தாக்கில் இருந்து 5,500 பண்டிட் இன பணியாளர்கள் இடம் பெயர்ந்தார்கள்.

ஹுரியத் மாநாடு போன்ற பிரிவினைவாதிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும் இத்தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.   ஆனால் இந்தக் கொலைகளின் தொடர்ச்சியான மற்றும் ஆணவம் நிறைந்த தன்மை, ஒரு மட்டத்தில், நிர்வாகத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவுகளின் முறிவையே காட்டுகிறது. அதனால் அத்தகைய தாக்குதல்களை முன்னறிவிக்கவும் தடுக்கவும் நிர்வாகத்தின் இயலாமைக்கு இது வழிவகுக்கிறது. தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோதுகூட சிறுபான்மை சமூகத்திற்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்த பகுதிகள் இப்போது பாதுகாப்பற்றதாக மாறியிருக்கும் நிலையைப் பார்க்கும்போது, பள்ளத்தாக்கில் பாதுகாப்பை மையமாகக் கொண்ட கொள்கைகளை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்வது மற்றும் 2019ஆம் ஆண்டில் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது போன்ற கடுமையான நடவடிக்கைகள் பயங்கரவாதத்தைத் தடுக்க உதவியதாகவும், பள்ளத்தாக்கில் இயல்பு நிலையைக் கொண்டுவர தேவை என்றும் யூனியன் பிரதேச நிர்வாகமும் மத்திய அரசும் சொல்லியிருக்கின்றன.  ஆனால் சிறுபான்மை சமூகத்தின் மீது மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல்கள் சொல்லும் செய்தி வேறு — பள்ளத்தாக்கில் நிலவும் அதிருப்தியை பயன்படுத்தி பிளவுப்படுத்துதலை ஊக்குவிக்க தீவிரவாத அமைப்புகள் முயற்சி செய்கின்றன. பள்ளத்தாக்கில் வாழும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு திறன் வாய்ந்த அரசால் மட்டுமே குடிமக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப எதாவது செய்ய முடியும். இது தீவிரவாத அமைப்புகளை தனிமைப்படுத்தவும், காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் பணிச்சுமையை குறைக்கவும் உதவும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதும், சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு முயற்சி எடுப்பதும் இப்போது ஒரு கட்டாயமாகியிருக்கிறது.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT