ADVERTISEMENT

ஒரு சின்ன ஓய்வு

January 07, 2023 11:13 am | Updated 11:13 am IST

ரஷ்யாவின் தற்காலிக போர்நிறுத்தம் ஒரு நீடித்த தீர்வுக்கான அடிப்படையாக இருக்க வேண்டும்

யுக்ரெயினின் போர்முனையில் 36-மணி நேர தற்காலிக போர்நிறுத்தத்தை கடைபிடிக்கும் ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதினின் முடிவு, தொடர்ச்சியான போர்க்கள பின்னடைவுகளையும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளையும் சமாளிக்கத் திணறி வரும் ஒரு நேரத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள பழமைவாத கிறிஸ்துவர்கள் ஜனவரி 7 ஆம் தேதியை கிறிஸ்துமஸாக கொண்டாடுவதால் வெள்ளி மதியம் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரையில் போர்நிறுத்தத்துக்கு உத்தரவிட்டிருப்பதாக ரஷ்யா சொல்கிறது. ஆனால் ரஷ்யா தனது படைகளை புதுப்பிப்பதற்கும் நிரப்புவதற்கும் எல்லைக்கோட்டிற்கு அதிக வீரர்களை நகர்த்துவதற்கும் இந்த இடைநிறுத்தத்தை பயன்படுத்திக் கொள்ளும் என்று ரஷ்யா மீது குற்றம் சாட்டி அதன் நேர்மையை யுக்ரெயின் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. ஆனால் இருதரப்பினராலும் கடைபிடிக்கப்பட்டால், கடந்த வருடம் பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து முழு போர்முனையிலும் அமல்படுத்தப்படும் முதல் போர்நிறுத்தமாக இது இருக்கும். திரு. புதினின் இந்த நடவடிக்கை, சமாதானத்துக்கான ஒரு தீவிரமான முயற்சியாக இல்லாமல் பலவீனத்தின் அறிகுறியாகதான் தெரிகிறது. நூற்றுக்கணக்கான துருப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்கு நகரமான மகிவ்காவை யுக்ரெயின் குறி வைத்ததில் புத்தாண்டு அன்று ரஷ்யா தனது 89 படைவீரர்களை இழந்தது. ஆறு மாதங்களாக தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கிழக்கு நகரமான பக்மூட்டில் ரஷ்யாவின் படைகளை பின்னுக்கு தள்ளிவிட்டதாக யுக்ரெயின் சொல்லியிருக்கிறது.

ADVERTISEMENT

போரின் ஆரம்ப கட்டத்தில் சில பிராந்திய வெற்றிகளை ரஷ்யா பெற்றிருந்ததுதான். ஆனால் ஆகஸ்ட் இறுதியிலிருந்து, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் ராணுவரீதியான, நிதிரீதியான உதவியுடன் யுக்ரெயின் எதிர்தாக்குதலை தொடங்கியதிலிருந்து ரஷ்யா போர்க்களத்தில் ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகிறது. வடகிழக்கில் கார்கிவ் ஒப்லாஸ்டின் பெரும் பகுதி மற்றும் தெற்கில் கெர்சன் நகரம் உட்பட யுக்ரெயின் ரஷ்யாவிலிருந்து பல பகுதிகளை மீண்டும் கைப்பற்றியது. பல போர்க்கள பின்னடைவுகளை

எதிர்கொண்ட நிலையில், போரின் புதிய தளபதி ஜெனரல் செர்ஜி சுரோவிகின் போரின் வியூகத்தை மாற்றினார். அவர் தாக்குதலின் மையத்தை டோனெட்ஸ்க்கை நோக்கி திருப்பிவிட்டார், பரந்த போர்முனையில் வலுவான பாதுகாப்பு கோடுகளை உருவாக்கத் தொடங்கினார், யுக்ரெயினின் முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து கடுமையான குண்டுவீச்சைத் தொடங்கினார். வான்வழித் தாக்குதல்கள் காரணமாக யுக்ரெயினின் எரிசக்தி கட்டமைப்பு ஓரளவு சேதப்பட்டிருக்கிறதென்றாலும் மில்லியன் கணக்கான மக்களின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறதென்றாலும் கள யதார்த்தம் மாறவில்லை. குளிர்காலத்திலிருந்து யுக்ரெயின் தப்பித்துவிட்டால், போர் இன்னும் வேகமெடுக்கும். யுக்ரெயினுக்கு பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை அனுப்பப் போவதாக ஏற்கனவே அமெரிக்காவும் ஜெர்மனியும் அறிவித்திருக்கின்றன. தரைவழிப் போருக்கு யுக்ரெயினை தயார் செய்வதற்கு அமெர்க்காவும், ஜெர்மனியும், பிரான்சும் கவச வாகனங்களை அனுப்பவிருக்கின்றன. போர் அரங்கில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில், திரு. புதின், மோதலை தீவிரப்படுத்துவதற்கான கூடுதல் அழுத்தங்களுக்கு உள்ளாகக்கூடும். ஆனால் போரை தொடர்வது எல்லா தரப்புகளுக்கும் செலவு மிகுந்ததாக இருக்கும். 36 மணி நேரம் போர்நிறுத்தம் நீடித்தால், திரு. புதின் அதை மேலும் நீடித்து எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல் யுக்ரெயினுடனும் அதன் ஆதரவாளர்களான மேற்குடனும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். தற்காலிக போர்நிறுத்தம் நிலைத்த ஒன்றுக்கான தொடக்கமாக இருக்க வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT