அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பை (ஏஐஎஃப்எஃப்) கால்பந்து ஆட்டத்திற்கான சர்வதேச நிர்வாகக் குழுவான ஃபிபா இடைநீக்கம் செய்திருப்பது, இந்திய விளையாட்டு வரலாற்றில் சோர்வு தரும் ஒரு சரிவு. காமென்வெல்த் விளையாட்டுகளில் பெற்ற வெற்றி தந்த ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் அடங்கும் முன்பே திங்கள் கிழமையன்று ஃபிபா “மூன்றாம் தரப்பின் தேவையற்ற தலையீடு” இருக்கிறது என்கிற காரணத்தைச் சொல்லி அதிரடியாக இடைநீக்கத்தை அறிவித்திருக்கிறது. இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் குழுதான் அந்த மூன்றாம் தரப்பு. முன்பிருந்த செயற்குழு அவர்களுடைய பதவிக் காலத்தையும் தாண்டி பதவியில் இருந்த நிலையில் இந்த புதிய குழு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிகமாக பொறுப்பேற்று புதிய விதிமுறைகளை வகுக்க மே மாதம் அமைக்கப்பட்டது. அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழுவில் மாநில அமைப்புகளுக்கு ஈடாக வீரர்களுக்கும் வாக்குரிமையுடன் 50 சதவிகித பிரதிநிதித்துவமும் தர புதிய நிர்வாக குழு எடுத்த முடிவுதான் இப்போது பிரச்னைக்கு காரணம்.
ADVERTISEMENT
ஃபிபா 25 சதவிகித பிரதிநிதித்துவத்தை பரிந்துரைத்தது. பின்னர் உடனடியாக அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. இதனால் கடுமையாக ஏமாற்றமடைந்த நிர்வாகிகள் குழு செவ்வாய் அன்று இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சூழல் நெருங்கி வந்ததாகச் சொன்னது. அக்டோபரில் நடக்கவிருக்கும் 17 வயதுக்கும் குறைவான பெண்களுக்கான உலக கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இழந்து, இந்தியா அவமானப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஃபிபாவுடன் பேசி தடைகளை உடைக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது நீதிமன்றம். கூடவே, இந்தியாவின் சர்வதேச நட்பு போட்டிகள், சர்வதேச போட்டிகளில் அதன் குழுக்களின் பங்கேற்பு - ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்கள் சாம்பின்ஷிப் போட்டிகளில் கோகுலம் கேரளா கால்பந்துக் குழுவின் பங்கேற்பு மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பையில் ஏடிகே மோஹுன் பகன் கால்பந்து குழுவின் பங்கேற்பு போன்றவை – ஃபிபாவிலிருந்து வரக்கூடிய வளர்ச்சி நிதி, மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு எல்லாமே இப்போது பிரச்னைக்குள்ளாகியிருக்கிறது.
முதல் பார்வையில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பில் வீரர்களையும் சமமான வாய்ப்புள்ள பங்குதாரர்களாக்க வேண்டும் என்கிற நல்நோக்கில் நிர்வாகிகள் குழு கொஞ்சம் அதீத ஆர்வத்துடன் செயல்பட்டுவிட்டது என்று வாதிடலாம். ஆனால், 2011ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு வளர்ச்சி சட்ட விதிகள் வரையறுத்திருந்த 12 வருடங்களையும் தாண்டி கூடுதல் காலத்துக்கு கையில் அதிகாரத்தை வைத்திருந்த ஃபிரபுல் பட்டேல் தலைமையிலான அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் முந்தைய நிர்வாகத்துக்கு இதில் பங்கு இருப்பதை மறுக்க முடியாது. உறுப்பினர் சேர்க்கை, வயது வரம்பு, பதவிக்காலம் போன்றவற்றில் விளையாட்டு சட்டம் சொல்லும் விதிகளை மீறுவது இந்திய விளையாட்டுத்துறையில் மிக அதிகம். டேபிள் டென்னிஸ், ஹாக்கி, ஜூடோ போன்ற விளையாட்டுகள் எல்லாம் 2022இல் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையைப் பார்த்து, செவ்வாயன்று இந்திய ஒலிம்பிக் அமைப்பை நிர்வாகிகள் குழுவின் கீழ் கொண்டு வந்திருக்கிறது தில்லி உயர் நீதிமன்றம். விளையாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காகவும் பலனுக்காகவும் அரசு வகுத்திருக்கும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டிய நிலை என்பது துயரமான ஒரு இழிநிலை. தனது விளையாட்டு பண்பாட்டை பன்முகப்படுத்தி புதிய வீரர்களை இந்தியா உருவாக்கி வரும் இந்த காலகட்டத்தில், விளையாட்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்லும் நிர்வாகிகளே அதற்கு அவப்பெயரை கொண்டு வருவது தேசத்துக்கு இப்போது தேவையற்ற ஒரு பாதிப்பு.
This editorial in Tamil has been translated from English which can be read here.