தன்னுடைய தேசிய அளவிலான பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், பிற முன்னணி அமைப்புகளின் பொறுப்பாளர்கள், மாநில அமைப்புகளின் தலைவர்கள், பொது செயலாளர்கள் ஆகியோருக்கு பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) இரண்டு நாள் கூட்டத்தை தில்லியில் நடத்தியது. இது கட்சியின் வலிமையை கணக்கெடுக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்துக்கும் மேலாக இருந்தாலும், போருக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது பற்றி பா.ஜ.கவுக்கு அதிக கவலை இருக்கிறது. கொள்கை மற்றும் அமைப்பு ரீதியாக தன்னை பரபரப்பாக வைத்துக் கொள்வதுடன், மேல் மட்ட அளவிலும் கீழ் மட்ட அளவிலும் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டிருக்கிறது. உயர்மட்டத்திலிருந்து வரும் செய்திகளை இணக்கமாக கையாள்வது பற்றி நிர்வாகிகளை ஊக்குவிப்பதற்காகவே தில்லி கூட்டம் நடத்தப்பட்டது. நலத்திட்ட உதவி பெறுவோரின் தொகுதியில் அரசியல் கவனத்தை அப்படியே வைத்திருப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதோடு, புதிய விஷயங்களையும், குறிப்பாக ஜி-20யின் இந்திய தலைமை போன்ற விஷயங்களையும், பரப்புரைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அமைப்பு ரீதியான திறன் மீது அதிக கவனத்தை செலுத்திய உரையாடல்களில் கொள்கை பாதைக்கு பெரிய இடமில்லை. அதன் இந்துத்துவக் கொள்கையை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வது பற்றி இப்போதுபோல வேறெப்போதும் பா.ஜ.க பாதுகாப்பாக உணர்ந்திருக்க முடியாது. டிசம்பர் 2023ல் திறக்கப்படும் அயோத்தியாவின் ராமர் கோவில் விஷயம், 2024 தேர்தல் பிரச்சாரத்துக்கான முன்னோடியாக எப்படியும் இருக்கும்.
வலிமையான ஒரு இடத்தில் இருந்தாலும், பா.ஜ.க தொடர்ந்து அமைப்பு ரீதியான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் தேர்தல் வெற்றிகள் பிரதமர் நரேந்திர மோதியின் தனிப்பட்ட செல்வாக்கால் செலுத்தப்படுகின்றன என்றாலும் வாக்கு சேகரிப்பை நுட்பமான அளவில் மேலாண்மை செய்வதும் முக்கியமானது. இந்த வார கூட்டத்தில் வாக்காளர்களுடனான உணர்வுப்பூர்வமான தொடர்பை குடும்ப அளவில் அதிகரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. வாக்காளர்களுடனான அவர்களது தொடர்புகளை ஆழப்படுத்த அதன் தொண்டர்களை ஊக்குவிக்கிறது பா.ஜ.க. இந்த அணுகுமுறை, கட்சியின் பல அடுக்கு வாக்குச் சாவடி நிர்வாகத் திறனின் மேம்பட்ட தீர்வாகத் தெரிகிறது. 2023ல் சில முக்கியமான சட்டமன்ற தேர்தல்களை பா.ஜ.க எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆட்சியிலிருக்கும் கர்நாடகா, மத்திய பிரதேசம் தவிர, அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க விரும்பும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவின் தலைமைப் பொறுப்பு ஜனவரியில் முடிவுக்கு வரும் நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு வரைக்கும் அவர் பொறுப்பில் இருப்பார். வலுவான நிறுவன வலிமையுடன் முன்னோக்கித் திட்டமிடுவதிலும் அதன் சித்தாந்த செயல்திட்டத்தை வலுப்படுத்துவதிலும் பா.ஜ.கவுக்கு இருக்கும் திறமை காரணமாகத்தான் பிற போட்டியாளர்களிடமிருந்து அது வேறுபட்டு நிற்கிறது. திரு. மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எப்போதும் கட்சி விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பா.ஜ.க. தனது செயல்பாடுகளை அரசு மற்றும் கட்சி மட்டத்தில் திறம்பட ஒருங்கிணைத்ததன் காரணமாக, அதற்கு ஒரு உந்துதல் கிடைத்திருக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகம் என்கிற நியாயமான புகார்களுக்கு வழி வகுத்தாலும், எதிரிகள் பா.ஜ.கவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது. அது கொள்கை தெளிவை, அமைப்பு வலிமை கொண்டு வலுப்படுத்துவதுதான்.
This editorial has been translated from English, which can be read here.