ADVERTISEMENT

வெற்றியின் சூத்திரம்

December 09, 2022 12:04 pm | Updated 12:04 pm IST

பா.ஜ.கவின் வியூகம் பல பிராந்தியங்களைக் கடந்து வேலை செய்கிறது. ஆனால் காங்கிரசுக்கு மாநில அளவிலான குறிப்பிட்ட வியூகங்கள் தேவை.

குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி பெற்ற வெற்றி, இமாச்சல பிரதேசத்தில் அதன் தோல்வியை மறைத்திருக்கிறது: குஜராத் பெரிய மாநிலம் என்பது மட்டுமில்லை, மேற்கு மாநிலத்தில் கட்சியின் பெருவெற்றி, மலைப் பிரதேசத்தில் அதன் குறுகிய தோல்வியை காணாமல் ஆக்கிவிட்டது. 2017ல் குஜராத்தில் 77 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் இந்த முறை வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே வென்றிருப்பதன் பின்னணியில் பார்க்கும்போது, இமாச்சல பிரதேசத்தில் பெற்ற வெற்றி மிக சுமாரான ஆறுதல்தான். இப்போது இன்னொரு ஐந்தாண்டு கால ஆட்சி அமைக்கும் நிலையில், பா.ஜ.க 32 வருடங்களாக குஜராத்தை ஆண்டு வந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் 2011ல் முடிவுக்கு வந்த இடதுசாரிகளின் 34 ஆண்டு கால ஆட்சியுடன் இது கிட்டத்தட்டப் பொருந்திப் போகிறது. 2017ல் 49 சதவிகிதமாக இருந்த பா.ஜ.கவின் வாக்கு சதவிகிதம் தற்போது 53 சதவிகிதமாகியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி மிகத் தொலைவான மூன்றாவது இடத்தை பிடித்தது. ஆனால் அதிரடியாக குஜராத்தில் நுழைந்து அது 13 சதவிகித வாக்கைப் பெற்றதுடன் தேசிய கட்சியின் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மியின் வருகை காரணமாக குஜராத்தில் நிலவிய மும்முனை போட்டி, பா.ஜ.கவுக்கு சாதகமாகவே அமைந்தது. தாரளமாக நலத்திட்டங்களை வாக்குறுதியாக அளித்து மாநிலத்தில் ஒரு புதிய வர்க்க அரசியலை ஆம் ஆத்மி விதைத்த பிறகு, காங்கிரஸ் வலுவாக இருந்த சில பழங்குடி பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் பா.ஜ.க நுழைந்தது. குஜராத்தைப் பொறுத்த வரையில் பரப்புரைக்கு தலைமை வகித்தது பிரதமர் நரேந்திர மோதிதான். மாநில அரசின் செயல்பாட்டுக்கு எந்த தொடர்புமில்லாத அவரது செல்வாக்குதான் பா.ஜ.கவுக்கு ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுத் தந்தது. இமாச்சல பிரதேசத்தின் முடிவுகள், பா.ஜ.க எதிர்கொள்ளும் ஆட்சிக்கு எதிரான மனநிலையையும், எப்போதாவது அதை பயன்படுத்திக் கொள்ளும் எதிர்கட்சியின் திறனையும் வெளிப்படுத்தியது. இரண்டு மாநிலங்களிலுமே மந்தமான பரப்புரையைத்தான் காங்கிரஸ் மேற்கொண்டது. குஜராத்தில் அது கட்சிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஆனால் இமாச்சல பிரதேசத்தில் அது ஆட்சிக்கு எதிரான மனநிலை காரணமாக உதவியது. குஜராத்தில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியின் மொத்த வாக்கு சதவிகிதம்

சற்றேறக்குறைய 40 சதவிகிதம் என்கிற அளவில் இருந்தது. 2017ல் காங்கிரசுக்கு இருந்த வாக்கு சதவிகிதத்தை விட குறைவு இது. இமாச்சல பிரதேசத்தில் திரு.மோதியின் விரிவான பரப்புரை போதுமானதாக இல்லை. குஜராத்தில் 2017ல் சில பின்னடைவுகளை சந்தித்த நிலையில் பா.ஜ.க வெற்றிக்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் காங்கிரசில் அப்போதிலிருந்து உற்சாகம் குறைந்துவிட்டது. ஆம் ஆத்மி ஒரு புதிய உத்வேகத்துடன் புதிய களங்களுக்கு தனது எல்லையை விரிவுப்படுத்த முனைகிறது. ஆனால், இதன் மூலம் எதிர்கட்சிக்கு நிலைமையை மோசமாக்கி, பா.ஜ.கவின் இந்துத்துவ சித்தாந்தத்துடன் இணங்குவதும் சாத்தியம்தான். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள், இந்திய அரசியலில் பா.ஜ.கவின் மேலாதிக்க நிலை சவாலுக்கு உட்படுத்தபடாமலேயே இருப்பதை காட்டுகிறது. தனது கட்சியைவிட திரு.மோதி செல்வாக்கானவர் என்பதையும் பா.ஜ.கவுக்கு சவால்விடக்கூடிய அரசியலையோ செயல்திட்டங்களையோ எதிர்கட்சியால் உருவாக்க முடியவில்லை என்பதையும்கூட இது காட்டுகிறது. பிராந்தியங்களைத் தாண்டி வெல்லக்கூடிய எல்லா இடங்களுக்கும் பொருந்தும் ஒரு சூத்திரத்தை பா.ஜ.க கைக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் எதிர்கட்சிகள் ஒவ்வொரு மாநிலங்களுக்குமான, தனித்தனியான குறிப்பிட்ட வியூகங்களை கொண்டு மட்டுமே நீடிக்க முடியும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT