ADVERTISEMENT

குறைந்து வரும் கூட்டணிகள்

March 28, 2023 12:19 pm | Updated 12:19 pm IST

சீனாவுடனான அமெரிக்க உறவு மோசமாகி வரும் நிலையில், தைவான் அழுத்தத்தை எதிர்கொள்கிறது

2023ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதியன்று சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை முறையாக நிறுவியதன் மூலம், தைவானை விடுத்து சீனாவை அங்கீகரிக்கும் நாடுகளின் வளர்ந்து வரும் பட்டியலில் ஹோண்டுராஸ் இணைந்திருக்கிறது. வாட்டிகனைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தைவானுடன் ராஜதந்திர உறவுகளை கொண்ட நாடுகள் இப்போது 12 மட்டுமே இருக்கின்றன. நான்கு சிறிய பசிபிக் தீவு நாடுகள், தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள எஸ்வதினி, பராகுவே மற்றும் ஆறு மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் ஆகியவைதான் இவை. ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர் எட்வர்டோ ரெய்னாவுடன் இதற்கான தொடர்பு அறிக்கையில் கையெழுத்திட்ட சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங், ஹோண்டுராஸ் “வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்கும் முடிவை தேர்ந்தெடுத்திருப்பதாகச்” சொன்னார். உறவுகளைத் தொடர்வதற்கான முன்நிபந்தனையாக ஹோண்டுராஸ் நிதி உதவியை கோரியதாக தைவான் குற்றம் சாட்டியது. தைவான் “சீனாவுடன் டாலர் ராஜதந்திரத்தின் அர்த்தமற்ற போட்டியில் ஈடுபடாது” என்று இந்த மாற்றத்துக்கு பிறகு சொன்னார் அதிபர் சாய் இங்-வென். தைவானின் சர்வதேச பங்களிப்பை நசுக்குவதற்கும், அதன் ராணுவ அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துவதற்கும் சீனா தொடர்ந்து  அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது என்றும் “பிராந்தியத்தில் நிலவும் அமைதியை அது குலைக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  

ஹோண்டுராஸின் மாற்றத்துடன் சேர்ந்து, தனது சுருங்கி வரும் சர்வதேச இடம் குறித்த தைவானின் கவலைகள், தைவான் நீரிணை முழுவதும் தற்போதைய நிலை தொடர்பாக அதிகரித்து வரும் அழுத்தத்தை சுட்டிக்காட்டுகின்றன. இந்த தற்போதைய நிலை இரு தரப்பினருக்குமே பொதுவாக நன்மையே செய்திருக்கிறது. பல பிரச்னைகள் நிலவும் நிலையில், அமைதியை காப்பதற்கு உதவியிருக்கிறது. மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட செழிப்பான ஜனநாயக நாடான தைவானில், தற்போதைய நிலை பெரும்பாலான மக்களின் பிரபலமான தேர்வாக இருப்பதை பல பொது கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தைவான் சுதந்திரத்தை அறிவிப்பதை அல்லது சீனாவுடன் இணைவதை மிகச் சிலர் ஆதரிக்கிறார்கள். ஆனால், தற்போதைய இந்த நிலையை மாற்றிவிட்டதாக சீனாவும் தைவானும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். தைவானை தனிமைப்படுத்த சீனா தொடர்ச்சியாக ராஜதந்திர அழுத்தத்தை பிரயோகித்ததாக தைவான் கருதுகிறது. தவிர, தனது ராணுவ வலிமையையும் சீனா அதிகமாகக் காட்ட முனைந்தது என்பதை கடந்த வருடம் அப்போதைய அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையைத் தொடர்ந்து தீவைச் சுற்றி நடந்த ராணுவ பயிற்சிகள் காட்டின. சீனாவின் பார்வையில், தைவானில் ஆளுங்கட்சியான டிபிபி, அமெரிக்காவின் ஆதரவுடன், தன்னிச்சையாக சுதந்திரம் பெற்றிருப்பது போல நடந்து கொள்வதன் மூலம் பதற்றங்களை ஏற்படுத்துகிறது. கடந்த கேஎம்டி ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கு தைவானுடன் நல்ல உறவே இருந்தது. சொல்லப்போனால், 2015ம் வருடத்தில் தலைவர்கள் ஷி ஜின்பிங் மற்றும் மா யிங்-ஜியோ இடையே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பும் நிகழ்ந்தது. சீனாவைப் பொருத்தவரையில் தைவான் இன்னமும் ஒரு  பிரச்னைகுரிய காப்புக் கோடுதான் என்று ஷி அரசு அமெரிக்காவை எச்சரித்திருந்தது. ஆனால் இரு நாடுகளுக்குமிடையிலான மோசமாகி வரும் உறவுகளின் காரணமாக தைவான் மீண்டும் உரசலுக்கான ஒரு புள்ளியாக உருவாகி வருகிறது. கடந்த வருடம் பெலோசி பயணத்தின் மூலம் இது தெளிவானது. காப்புக் கோடு என்று சீனா கருதும் ஒரு விஷயத்தை அமெரிக்காவோ தைவானோ தாண்டிவிட்டால், “ஒன்றிணைவு” என்று தான் சொல்லும் விஷயத்துக்காக ராணுவ பலத்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம் என்று உத்திரவாதம் தர சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. உலகின் இரண்டு பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான மோதலில் ஒரு துடிப்பான மற்றும் வளமான தீவின் 23 மில்லியன் மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT