ADVERTISEMENT

தேர்தல் ஆணையர்களைத் தேர்வுசெய்தல் 

March 04, 2023 11:43 am | Updated 11:43 am IST

தேர்தல் ஆணையர்களைத் தேர்வுசெய்யும் முறை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு அதன் சுயாதீனத் தன்மைக்கு ஊக்கமளிக்கும்.  

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஒட்டுமொத்தமாக அரசிடம் மட்டும் இருந்ததை நீக்கியிருக்கும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் சுயாதீனத் தன்மைக்கு மிகப் பெரிய ஊக்கமளிக்கும். இதற்கென ஒரு சட்டம் நிறைவேற்றப்படும் வரையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழுவே தலைமை தேர்தல் ஆணையரையும் ஆணையத்தின் பிற உறுப்பினர்களையும் தேர்வுசெய்யும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது ஒரு அரசியல் சாஸன அமைப்பு. தேர்தல்களை வழிநடத்துவது, கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது போன்ற மிகப் பெரிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியக் குடியரசின் மிக முக்கியமான ஒரு அங்கம். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சுயேச்சையாகவும் நியாயமாகவும் தேர்தல்களை நடத்த, அரசியல்சாஸன பாதுகாப்பும், சுதந்திரமும் அதற்குத் தேவை. பிரதமரின் ஆலோசனையின்பேரில் இந்திய குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையரையும் தேர்தல் ஆணையர்களையும் நியமிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நாடாளுமன்றங்களின் மூலம் சட்டம் இயற்றப்பட்டு அதன் மூலம் நியமனங்கள் நடக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசியல் சாஸனத்தை எழுதியவர்களின் உண்மையான நோக்கம் என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாஸன அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையரையும் தேர்தல் ஆணையர்களையும் நியமிக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 குறிப்பிடுகிறது. ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இதற்கான சட்டத்தை உருவாக்கத் தவறிவிட்டன. நாடாளுமன்றத்தின் இயங்கா நிலையால், சட்டம் இல்லாத நிலை ஏற்பட்டு அதனால், ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பதாக பிரதான தீர்ப்பை எழுதிய நீதிபதி கே.எம். ஜோசப் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையம் மிகச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்; அரசின் கைப்பாவையாக இருக்கக்கூடாது என்ற நீதிமன்றத்தின் அடிப்படை கருதுகோளுடன் யாரும் முரண்பட மாட்டார்கள். பிரதிபலனையோ, விசுவாசத்தையோ எதிர்பார்க்கக்கூடியவர்கள் நியமன அதிகாரத்தைப் பெற்றிருக்கக்கூடாது. நீதிமன்றம் சொல்வதைப்போல வெற்றிடம் ஏதும் இல்லை; தற்போதைய முறை சிறப்பாகவே செயல்படுகிறது என்ற அரசின் வாதம் மிக பலவீனமானது. தற்போது உள்ள முறையில், உயர் மட்டத்தில் உள்ள குடிமைப் பணி அதிகாரிகளில் இருந்து பிரதமர் ஒரு பெயரைத் தேர்வுசெய்து, அவரையே நியமிக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை சொல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், தேர்வுக் குழுவில் இந்தியத் தலைமை நீதிபதி இடம்பெற்றிருப்பதால் மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியுமா என்பதும் சரியான கேள்விதான். சி.பி.ஐயின் இயக்குநரை தேர்வுசெய்யும் குழுவில் இந்தியத் தலைமை நீதிபதியோ அவரது பிரதிநிதியோ இடம்பெறுகிறார்கள். இதனால், சி.பி.ஐ. இயக்குனரின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது அல்லது மேம்பட்டிருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், அந்தக் குழுவில் தலைமை நீதிபதி இடம்பெற்றிருப்பதாலேயே, அதற்கு இயல்பிலேயே ஒரு சரித்தன்மை கிடைத்துவிடும். தேர்வு நடந்ததில் தவறு இருந்தால்கூட, அதனை நீதிமன்றம் பாரபட்சமின்றி விசாரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். தலைமைத் தேர்தல் ஆணையரின் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்வு நடைமுறை அமையவேண்டும் என்ற தனது கருத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது நீதிமன்றம். ஆனால், தற்போது உள்ள முறையையே பாதுகாக்கும் வகையில் அந்தச் சட்டத்தை உருவாக்கி இந்தத் தீர்ப்பையே நீர்த்துப்போகச் செய்யக்கூடாது.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT