2013ல் ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசிக்கு, மறுதேர்தலில் வெற்றி பெறுவது என்பது எளிதான ஒரு விஷயம். எகிப்து அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில், தற்போதைய அதிபர்கள் எப்போதும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். டிசம்பர் 10-12 தேர்தல்களில், முன்னாள் தளபதியான திரு. சிசி, அதிகம் அறியப்படாத மூன்று வேட்பாளர்களை எதிர்கொண்டார். அவரது மிகவும் கடுமையான போட்டியாளரான அகமது டான்டாவி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அரச ஊடகங்கள் அதிபரின் சாதனைகளைப் புகழ்ந்து பரப்புரை போன்ற செய்திகளை வெளியிட்டன. 89.6 சதவீத வாக்குகளைப் பெற்று திரு. சிசி தனது ஆட்சியை 2030 வரை நீட்டித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இப்போது பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளுடன் போராடிக் கொண்டிருக்கும், மிக அதிக மக்கள்தொகை கொண்ட அரபு நாட்டை ஆட்சி செய்வதுதான் கடினமான பகுதி. எகிப்தில் முதன்முதலாக சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான இஸ்லாமிய சகோதரத்துவத் தலைவர் முகமது மோர்சியை திரு சிசி கவிழ்த்தபோது, சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியைக் கவிழ்த்த 2011 “புரட்சியின்” உணர்வை சகோதரர்கள் மீறியதாக ராணுவம் ஒரு வாதத்தை முன்வைத்தது. ஆனால் திரு. சிசியின் ஆட்சியின் கீழ் எகிப்து முபாரக் காலத்திற்குத் திரும்பியது. ஆகஸ்ட் 14, 2013 அன்று “ஒழுங்கை” மீட்டெடுப்பதற்காக நூற்றுக்கணக்கான சகோதரத்துவ ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்ற ஆட்சி, அப்போதிலிருந்தே சின்ன விமர்சனங்களையும் எதிர்ப்பையும் கூட சகித்துக் கொண்டதில்லை. ஆனால் திரு சிசி தன்னை நிலைத்தன்மையின் ஆதாரமாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான அரணாகவும் காட்டிக் கொண்டார். கெய்ரோவுக்கு வெளியே ஒரு புதிய பாலைவன தலைநகரம் உள்ளிட்ட கடன் நிதியளிக்கப்பட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கினார்.
தனது புதிய ஆட்சியைத் தொடங்கும்போது, பொருளாதாரம்தான் திரு.சிசியின் கவனத்தைக் கோரும் ஒரு விஷயமாக இருக்கும். 35 சதவீதம் என்கிற அளவில் மிகை பணவீக்கம் ஏற்கனவே பல எகிப்தியர்களை வறுமைக்கு தள்ளியிருக்கிறது. 2022 டிசம்பரில் வெளிநாட்டுக் கடன் 162.9 பில்லியன் டாலராக இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் என்று மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. 2024ல் பெரிய கடன்களை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் எகிப்து, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் மேலதிக உதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எகிப்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் காஸா மீதான இஸ்ரேலின் போர், நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. 1979ல் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எகிப்தில் பாலஸ்தீன ஆதரவு அனுதாபங்கள் வரலாற்று ரீதியாகவே அதிகமாக இருந்திருக்கின்றன. இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சு ஆயிரக்கணக்கானவர்களை எல்லைக்குத் தள்ளியபோது, திரு. சிசி ஒரு சமநிலையை பேண முயற்சி செய்தார்: பகிரங்கமாக குண்டுவீச்சைக் கண்டித்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தாலும், இஸ்ரேலுடனான அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. காஸாவில் இருந்து பாலஸ்தீனர்களை பெருமளவில் வெளியேற்றும் இஸ்ரேலின் எந்தவொரு திட்டத்திற்கும் தான் உடந்தையாக இருக்கப்போவதில்லை என்றும் திரு. சிசி கூறியிருக்கிறார். ஆனால் போர் நீடித்தால், பாலஸ்தீனிய அகதிகளை உள்ளே அனுமதிக்க அவர் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவார். அதற்கு பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் இருக்கலாம். அருகில் ஒரு பேரழிவுகரமான போருக்கும் உள்நாட்டில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகளுக்கும் இடையில், சமீபத்திய காலங்களில் ஆட்சியை மாற்றும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்ட ஒரு நாட்டில் நிலையான ஆட்சியை வழங்குவதே அவர் இப்போது எதிர்கொள்ளும் சவால்.