பஞ்சாபில் வன்முறையில் ஈடுபட்ட பிரிவினைவாதிகளுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கை என்பது, தாமதமானதென்றாலும் இப்போதாவது நடந்ததே என்ற உணர்வைத் தருகிறது. மாநிலத்தில் மதவெறி சமீப வருடங்களில் மிக மோசமாகி வருகிறது. கடந்த சில மாதங்களில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பகிரங்கமாக வன்முறை தூண்டப்பட்டுவருகிறது. மாநில நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி அன்று ஒரு கும்பல் காவல்நிலையம் ஒன்றை ஆக்ரமித்து சந்தேகத்தின் பேரில் அங்கு வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்தது. இது சட்டம் - ஒழுங்கு நிலையின் மிக மோசமான சீர்குலைவு. அனுபவமில்லாத ஆம் ஆத்மியின் அரசுக்கு இந்த சவால் கடினமான ஒன்றாக இருப்பதுபோல தோன்றுகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இன்னும் வெளிப்படையான ஒருங்கிணைப்பும் நடவடிக்கையும் தேவைப்படுகிறது. 1980களில் பாகிஸ்தானின் ஆதரவுடன் தனி காலிஸ்தான் கோரிய வன்முறை இயக்கம் மாநிலத்தை பலவீனமாக்கியது. அதோடு சீக்கிய சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலை, பதவியில் இருந்த ஒரு பிரதமரின் உயிரையும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரையும்கூட பறித்தது. அந்த துயரம் மீண்டும் திரும்புவதற்கோ, அது அந்த சமூகத்தையோ இந்தியாவையோ துன்புறுத்துவதற்கோ அனுமதிக்கக்கூடாது. சீக்கியர்கள் ஒரு சமூகமாகவே மிகவும் பரவலான இருப்பைக் கொண்டவர்களாகவும் தொழில்முனைவோர்களாகவும் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இன்று அவர்கள் பரவலாக வசிக்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டிருக்கும் தேக்கநிலை கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேளாண்மை கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. போதைப் பொருள் பயன்பாடு பரவலாக இருக்கிறது. இதில் வன்முறையை தூண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதை கலவரம் செய்பவர்கள் கவனிக்கிறார்கள்.
ஆறாமல் விடப்படும் ஒரு வடு, முழு உடலையும் பாதிக்கும். மதவெறி, வெளிநாட்டு உதவி பெறும் சந்தர்ப்பவாதம் மற்றும் சமூக சிக்கல் எல்லாம் சேர்ந்து இன்று பஞ்சாபில் நிலவும் நெருக்கடிக்கு தூபம் போட்டுக்கொண்டிருக்கின்றன. ஐக்கிய ராஜ்ஜியம், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் புலம்பெயர் சீக்கியர்கள் பிரிவினைவாத கோரிக்கையின் பொருட்டு அணி திரட்டப்படுவதும் இந்தியாவுக்கு கவலைக்குரிய ஒரு அறிகுறி. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு, பஞ்சாபுடனும் வெளிநாட்டு அரசுகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். வன்முறைப் போக்குகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். வெறுப்பை ஆதரிப்பவர்களும் பரப்புபவர்களும் அதற்குரிய விலையைத் தர வேண்டும். கூடவே, சீக்கிய சமூகத்துடன் தொடர்பு கொண்டு நச்சு சக்திகளை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உலகுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஒரு செய்தி தெளிவாக சொல்லப்பட வேண்டும்: இந்தியா இப்போதும் பல மதங்களும் பன்முக பண்பாடுகளும் கொண்ட ஒரு தேசமாகதான் இருக்கிறது எனவும் பிரிவினைவாதம் தேவையும் இல்லை அதை பொறுத்துக்கொள்ளவும் முடியாது என்கிற செய்தி சென்று சேர வேண்டும். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நம்பிக்கையின்மை காரணமாக 2021ல் வேளாண் துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர முற்பட்ட வேளாண் சட்டங்கள் நிறுத்தப்பட்டன. வன்முறை சக்திகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையும், பொதுமக்களிடத்தில் நம்பிக்கையை வளர்க்கும் முயற்சியுமே அரசின் சொல் மற்றும் கொள்கையின் மையமாக இருக்க வேண்டும். இன்னும் அதிக அன்னியப்படுத்துதலை ஏற்படுத்தும் எந்தவொரு கோஷமும் எந்த தரப்பிலிருந்தும் ஊக்குவிக்கப்படவே கூடாது.
This editorial has been translated from English, which can be read here.