அ.இ.அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அ.இ.அ.தி.மு.கவின் உட்கட்சிப் பூசல் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதுபோலத் தெரிகிறது. திரு. பழனிசாமியின் போட்டியாளர் ஓ. பன்னீர்செல்வமும் அவரது சொற்ப ஆதரவாளர்களும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கீழ் இரட்டை தலைமை முறையை ரத்து செய்வது, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் வழங்குவது, திரு. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட ஜூலை 11ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டியதில் இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு எந்தவொரு சட்டவிரோத தன்மையையும் பார்க்கவில்லை. இந்தத் தீர்மானங்களின் செல்லுபடியாகும் தன்மையையும் நீதிமன்றம் ஆராயவில்லை. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, சூழ்நிலையின் யதார்த்தங்களைப் புறக்கணித்து, தொழில்நுட்ப காரணிகளின் அடிப்படையில் பிரிந்து இருக்கும் தலைவர்களை ஒன்றிணைந்து பணியாற்ற நிர்பந்திக்க எந்த காரணமும் இல்லை என்று திட்டவட்டமாக தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு, அதில் சரியாகவே குறுக்கீடு செய்தது என்றும் சொன்னது. நீதித்துறை உத்தரவின் மூலம் இரட்டை தலைமையை தக்கவைக்கவும் கட்சி விவகாரங்களில் சமமான கட்டுப்பாட்டை செலுத்தவும் பன்னீர்செல்வம் அணியினர் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சிவில் வழக்குகளில் இந்த முடிவுகளின் சட்டபூர்வத்தன்மை ஆராயப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், நீதித்துறையின் முடிவு வருவதற்கு மிக நீண்டகாலமாகலாம். அதுவரையில், திரு.பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உறுதியாக அ.இ.அ.தி.மு.க. இருக்கும். கட்சியின் பல்வேறு மட்டங்களில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவின் உதவியுடன் அவர் போட்டி அணியை முறியடித்திருக்கிறார்.
‘சர்வாதிகாரியிடம் இருந்து கட்சியை மீட்டெடுப்பது’ பற்றி சமீபத்தில்தான் திரு. பன்னீர்செல்வம் பேசியிருந்தார். ஆனால், தன் அரசியல் அடித்தளத்தை வலுவாக்காமல் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்தை தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பது, அவரை அரசியல்ரீதியாக காணாமல்போகச் செய்துவிடும் என்பது தெளிவாகியிருக்கிறது. சட்ட நடைமுறைகள் தனது தரப்புக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.கவுடன் நல்லுறவில் இருக்கும் வியூகம் அவருக்கு உண்மையில் எந்த உதவியையும் செய்யவில்லை. சமீபத்தில்தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்று அணியினர் விரும்புவதாகக் கூறி தனது அணியின் வேட்பாளரை வாபஸ் பெற்றபோது திரு. பன்னீர்செல்வம் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடையே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட எண்ணிக்கையின்படி பெரும்பான்மையான உறுப்பினர்கள் திரு. பழனிசாமியின் நியமனத்தை ஆதரிப்பது தெரிய வந்தது. பா.ஜ.கவை தன் பக்கம் வைத்துக்கொள்வதில் அவரும் சளைத்தவரில்லைதான். ஆனால், தி.மு.க. தலைமையிலான வலுவான கூட்டணியுடனான மோதலில் தேர்தல் களம் சவாலாக இருந்தாலும், கட்சியின் மீது திரு. பழனிச்சாமிக்கு இருக்கும் உறுதியான பிடி, அவரை அரசியல் அரங்கில் நல்ல நிலையில் வைத்திருக்கிறது.
This editorial has been translated from English, which can be read h