இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பணவீக்கம் “மிதமாதவதற்கான அறிகுறிகளைக் காட்டியிருப்பதாகவும் மோசமான காலகட்டத்தை கடந்து விட்டோம்” என்று சொல்லி ஐந்து நாட்களே ஆன நிலையில், திங்களன்று வெளியிடப்பட்ட ஜனவரி மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) மதிப்பீடுகள், விலைவாசிகளில் ஒரு கவலைக்குரிய பின்னடைவை சுட்டிக்காட்டியது. செப்டம்பர் மாதத்தில், ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.4 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டது. பிறகு, 2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் படிப்படியாகக் குறைந்த சில்லறை பணவீக்கம், கடந்த மாதம் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருட்களின் விலை 175 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததே இந்த வேகத்திற்கு காரணமாக இருந்தது. தவிர, நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டெண் மூலம் அளவிடப்பட்ட பணவீக்கம், டிசம்பரில் 4.19 சதவீதத்திலிருந்து 5.94 சதவீதமாக உயர்ந்தது. பணவீக்கம் ஏற்கனவே ஜனவரி 2022இல் 6 சதவீதமாக உயர்ந்திருந்தது மேலும் கவலையளிக்கிறது. இதன் பொருள், சாதகமான அடிப்படை விளைவு இல்லாத நிலையில் விலை உயர்வின் வேகம் அதிகரித்ததன் காரணமாக, இந்த வருடாந்திர அதிகரிப்பு இருந்தது என்பதுதான். உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தன. குளிர்காலத்தில் தேவையைவிட விநியோகம் அதிகமாக இருந்த நிலையில், நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணில் 12 பொருட்களைக் கொண்ட உணவு மற்றும் பானங்கள் துணைக்குழுவில் காய்கறிகள் மட்டுமே 11.7 சதவீத வருடாந்திர பணவாட்டத்தை பதிவு செய்தது. துணைக் குழுவில் 10 சதவீதம் அளவுக்கு இடத்தை பிடித்திருக்கும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் விலைகள் 16.1 சதவீத உயர்வை பதிவு செய்தன. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகள் 8.79 சதவீதம் வரை அதிகரித்தது. கொள்கையை வகுப்பவர்கள், குறிப்பாக தானிய விலைகளில் 2.6% மாத விரிவாக்கம் குறித்து கவலைப்பட வேண்டும். காரணம், தங்கள் வருமானங்களில் பெரிய பகுதியை உணவில் செலவு செய்யும் கிராமப்புற குடும்பங்களை இது முறையற்ற அளவில் பாதிக்கிறது. கிராமப்புற நுகர்வு 12.4 சதவீதமாக இருந்த நிலையில் தானியங்களின் விலைகள் ஜனவரியின் ஒட்டுமொத்த கிராமப்புற பணவீக்கத்தை இன்னும் வேகமாக 6.85 சதவீதம் என்ற அளவில் விரைவுப்படுத்தின.
விலைவாசிப் போக்குகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம், பொருளாதாரத்தில் பணவீக்க எதிர்பார்ப்புகள் எந்த இடத்திலும் நிலைபெறவில்லை என்பதையே குறிக்கிறது. தவிர, ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அதிகாரிகளிடமிருந்து மேலும் கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பதையும் அது காட்டுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், திரு. தாஸ் கடந்த வாரம் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித உயர்வை அறிவித்தது மட்டுமல்லாமல், நீடித்த பணவீக்க நீக்கத்தை உறுதிசெய்யும் கொள்கையை ரிசர்வ் வங்கி உருவாக்கும் என்றும் உறுதியளித்தார். மையப் பணவீக்கம், அல்லது உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் தாக்கத்தை அகற்றும் விலை ஆதாயங்கள், பிடிவாதமாக 6 சதவீதத்துக்கு மேல் இருப்பதையும் டிசம்பரில் 6.22 சதவீதத்திலிருந்து கடந்த மாதம் 6.23 சதவீதமாக ஏறியிருப்பதையும் வைத்துப் பார்க்கும்போது, பணவீக்கத்தின் போக்குகளில் உள்ள கூறுகளை இலக்கு வைத்து எதிர்கொள்ள வேண்டிய சவால், கொள்கையை வகுப்பவர்களுக்கு இருக்கிறது. கடன் செலவுகளை அதிகரிப்பதன் மூலம், தேவையை குறைப்பதன் இதை செய்யலாம். சுகாதாரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு உள்ளிட்ட பல முக்கிய சேவைப் பிரிவுகளில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பான 6 சதவீதத்தை விடவும் அதிகமாக இருப்பதுடன் விலைகளும் தொடர்ந்து கடுமையாகி வருகின்றன. இந்த நிலையில், பொருளாதாரத்தின் மீதான பணவீக்க சுமையைக் குறைக்க உதவும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். இந்த வருடம் வெளிநாட்டு தேவைகள் பலவீனமாகவே இருக்கும். இந்த நிலையில், பணவீக்கம் உள்நாட்டு நுகர்வை பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. அது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக் கூடும்.
This editorial has been translated from English, which can be read here.