வரலாற்றில் அதன் இருண்ட அத்தியாயத்தை கவனத்தில் எடுக்கும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. தொல்குடி மற்றும் டோரஸ் ஸ்டிரெயிட் தீவு மக்களை அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிப்பதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துவதாக அதன் பிரதமர் அண்டனி அல்பனீஸ் வாக்காளர்களுக்கு உறுதியளித்திருக்கிறார். இதன் மூலம் அவர்களுக்கு, அரசில் ஒரு ஆலோசனை வழங்கும் இடத்தில் நிரந்தர பிரதிநிதித்துவம் கிடைக்கும். இந்த வருடத்தின் இறுதியில் இந்த பொது வாக்கெடுப்பு நடக்கும். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தொல்குடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ஸ் (Voice) என்ற அமைப்பு முதல் நாடுகள் என்று அழைக்கப்படும் பூர்வக்குடி சமூகங்களின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய கொள்கை விஷயங்களில் நாடாளுமன்றத்துக்கு ஆலோசனை வழங்கலாமா என்பது குறித்துத்தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஆலோசனைகளை நிறைவேற்ற வேண்டிய சட்டரீதியான கட்டுப்பாடு எதுவும் அரசின் மீது இருக்காது. ஒரு பிரதிநிதித்துவ ஏற்பாடாக, இது தொல்குடி மக்களின் நலன்களை இன்னும் அதிகமாக பிரதிபலிக்கும் என்பதுதான் நம்பிக்கை. ஒரு சமூகப் பிரிவாக அவர்கள் குறைந்த ஆயுட்காலம், அதிக குழந்தை இறப்பு விகிதங்கள், மோசமான உடல் மற்றும் மன ஆரோக்கியம், குறைந்த அளவிலான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, மற்றும் குழந்தைகள் பிரிக்கப்படுதல், தற்கொலைகள், சமூக மற்றும் குடும்ப வன்முறைகளின் அதிக விகிதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் இருப்பதை விட அதிக பிரதிநிதித்துவம் தரப்படுகிறார்கள். ஆனால் வாய்ஸ் வைத்த முன்மொழிவுக்கு 59 சதவீத மக்கள் ஆதரவு (சமீபத்திய கருத்துக்கணிப்பு) இருந்த நிலையிலும் கூட அரசியல் ரீதியான எதிர்ப்பு ஆங்காங்கே இருக்கிறது. அதிலும் கண்டிரி லிபரல் கட்சியின் செனட் உறுப்பினர் ஜெசிந்தா பிரைஸ் உள்ளிட்ட முக்கிய தொல்குடி தலைவர்களிடமிருந்தே இந்த எதிர்ப்பு வந்திருப்பது முரண்பாடு. தொல்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் வாய்ஸ் “பொதுநலவாயத்தின் நாடாளுமன்றம் மற்றும் நிறைவேற்று அரசிடம் மனுக்களை அளிக்கலாம்” என்று கூறும் வார்த்தைகள் குறித்து திருமிகு பிரைஸ் கவலை தெரிவித்துள்ளார். இது வாய்ஸ்
அமைப்பை கேபினட் அமைச்சரை விஞ்சும் அளவுக்கு உயர்த்துகிறது என்றும் சட்டமியற்றும் மன்றங்களின் முடிவுகளுக்கு நீதிமன்றங்களில் சவால் விடக்கூடும் என்றும் அவர் சொல்கிறார். பிற தொல்குடி தலைவர்கள் அணுகுமுறைகளில் வெவ்வேறான முன்னுரிமைகளை ஆதரிக்கிறார்கள். உதாரணத்துக்கு, முதலில் தொல்குடி மற்றும் தொல்குடி அல்லாத மக்களுக்கு இடையே ஒரு உடன்படிக்கைக்கு ஒத்துக் கொள்வது. இது முந்தையவர்களின் நிலங்கள் ஒருபோதும் “ஆக்கிரமிப்பாளர்களுக்கு” விட்டுக் கொடுக்கப்படவில்லை என்பதை அங்கீகரிக்கும். அரசியல்ரீதியாக எவ்வளவு சிக்கல் இருந்தாலும், இந்த பொதுவாக்கெடுப்பு முன்மொழிவின் மையத்தில் இருப்பது நல்லிணக்கத்துக்கான ஒரு எண்ணம்தான். 1778ல் “டெர்ரா நுல்லியஸ்” அல்லது “யாருக்கும் சொந்தமில்லாத நிலம்” என்ற ஐரோப்பிய குடியேற்றத்திற்குப் பிறகு, தொல்குடி சமூகத்தின் கட்டமைப்பை நொறுக்கிய “திருடப்பட்ட தலைமுறைகளுக்காக” அரசு வருத்தம் தெரிவிப்பதற்கு சுமார் 200 வருடங்கள் ஆயின. “இடைவெளியை மூடும் நோக்க அறிக்கையில்” (Close the Gap Statement of Intent) ஆஸ்திரேலிய அரசு 2000களின் பிற்பகுதியில்தான் கையெழுத்திட்டது. தொல்குடி மக்களுக்கான நல்ல சுகாதாரம் மற்றும் ஆயுட்கால விளைவுகளை அடைவதற்கான உறுதியை இந்த நோக்க அறிக்கை கொண்டிருக்கிறது. இந்த தேசிய வடுக்கள் எவ்வளவு காலம் கவனிக்கப்படாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதை குணப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் கடினம். இந்த பின்னணியில் வாய்ஸ் வாக்கெடுப்புக்கு அரசியல் ஆட்சேபனைகள் மற்றும் வழிமுறைகள் எப்படியிருந்தாலும், அல்பனீஸின் அரசு அதை தொடர்ந்து செயல்படுத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம், தங்களது தேசத்தில் சமூக நல்லிணக்கத்தை எப்படி அடைய முடியும் என்று நம்புகிறார்கள் என்பதை சொல்ல ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
This editorial has been translated from English, which can be read here.