ஐ.நா. தற்போது யுக்ரைன் போர் மீது அதிக கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக் கூட்டத்தை நடத்துவது என இந்தியா முடிவெடுத்திருப்பது பயங்கரவாத பிரச்னைகளை முன்னிலைப்படுத்துவதற்கான இந்திய அரசின் தொடர் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தகுந்த குறியீடு. மும்பையிலும் தில்லியிலும் நடத்தப்பட்ட இந்த கூட்டம், ஐ.நா அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிபுணர்கள் ஆகியோரை ஒன்றாக கொண்டு வந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்களை பற்றி விவாதித்தது. மும்பையில், 26/11 தாக்குதல்கள் மீது கவனம் இருந்தது. பயங்கரவாதத் தாக்குதல்களின் சர்வதேச தன்மையையும் மீறி, 2008ஆம் ஆண்டில் தொடங்கி இந்த வழக்கை தொடர்வதில் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதிலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தப்பித்த ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாபிடம் முழுமையாக விசாரணை நடத்தி தண்டனை அளிப்பது போன்றவற்றிலும் கடுமையான போராட்டத்தையே இந்தியா சந்திக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தானுடன் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இது தொடர்பாக தகவல் பரிமாற்றம் இருந்தது. இத்தனைக்கும் பிறகு, மும்பை தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி கருதிய லஷ்கர் இ தொய்பாவின் தளபதிகள் ஹபீஸ் சயீத், ஜாகி-யு-ரஹ்மான் லக்வி மற்றும் பிறரை விசாரணை வளையத்தில் கொண்டு வருவதில் அந்நாடு சுணக்கம் காட்டியது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் போது, தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டுமல்லாது, தாக்குதல்களின் போது பயங்கரவாதிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்த லஷ்கர் இ தொய்பாவுக்காக ஆள்சேர்ப்பு பணியில் ஈடுபடும் சஜித் மிர்ரின் குரல் மாதிரிகளையும் அங்கிருந்தவர்கள் கேட்டார்கள். அப்படியிருக்கும் போதும், நிதி நடவடிக்கைப் பணிக்குழு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்த பிறகு, பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தது தொடர்பாக பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மிர் இன்னும் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. பயங்கரவாதத்தைப்
பொருத்தவரையில் இந்தியாவுக்கு பல விதங்களில் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கினாலும், தாக்குதல்களுக்கான சதித் திட்டங்களை தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட டேவிட் ஹெட்லி மற்றும் தஹாவூர் ராணா ஆகியோரை நாடு கடத்த மறுத்துவிட்டது. இதற்கிடையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தீவிரவாத பட்டியலில் லஷ்கர் இ தொய்பா தலைவர்களை சேர்ப்பதை சீனா தொடர்ச்சியாக தடுத்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் குறிப்பிட்டு பேசினார்கள். தில்லியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் கவனம் முழுவதும், ஆன்லைன் மூலம் பயங்கரவாதத்தன்மையை உருவாக்குவது, ஆட்களைச் சேர்ப்பது, கிரிப்டோ-கரன்சி மற்றும் மெய்நிகர் சொத்துகள் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது, தீவிரவாத தாக்குதல்களுக்கு டிரோன் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி அமைப்புகளை பயன்படுத்துவது, மருந்துகள் மற்றும் ஆயுதங்களுக்கான போக்குவரத்து ஆகியவற்றில்தான் இருந்தது. இந்த விவாதங்களின் முடிவில் “பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை எதிர்கொள்வது குறித்த தில்லி பிரகடனம்” அறிவிக்கப்பட்டது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தற்போதைய பதவிக் காலத்தில் இந்தியாவுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை தக்கவைத்துக் கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுபோல தெரிகிறது. “பயங்கரவாதத்துக்கு நிதியில்லை” என்கிற தலைப்பில் அது ஒரு சர்வதேச மாநாட்டை (நவம்பர் 18-19) நடத்தவிருக்கிறது. தவிர சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கான சவால்கள் பற்றிய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு சிறப்பு விளக்கவுரை கூட்டத்தை (டிசம்பர்15-16) நடத்தவிருக்கிறது. 26/11ன் இந்திய அனுபவப்படி, சர்வதேச சமூகம் நீண்ட அறிக்கைகளை வெளியிடுவதில் தாராளமாக இருக்கிறது. ஆனால், குறுகிய அளவிலேயே ஒத்துழைப்புகளை அளிக்கிறது. திரு.ஜெய்சங்கர் சொல்வதைப்போல பயங்கரவாதம் “மனிதக்குலத்துக்கு எதிரான மிகப் பெரிய அச்சுறுத்தல்” என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.