பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது, குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அப்படிச் செய்வது குறித்த வழக்கின் தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் எல்லையை விரிவுபடுத்த எந்தவொரு அதீத முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பது, அரசியல் சாசன அமர்வின் சிறப்பான செயல்பாடு. உத்தரப்பிரதேச அமைச்சரவையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு அமைச்சரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு அமைச்சரும் வெளியிட்ட சில மோசமான கருத்துகளின் பின்னணியில், அரசுப் பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதல் கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அவர்களின் கருத்துகளுக்கு மாநில அரசை பொறுப்பாக்குவதன் மூலமாகவோ அல்லது சட்டத்தால் செயல்படுத்தக்கூடிய நடத்தை விதிகளை உருவாக்குவதன் மூலமாகவோ நீதிமன்றம் அதை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரதான கருத்தின் பேரில் கையெழுத்திட்ட நான்கு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை எழுதிய ஐந்தாவது நீதிபதியும்கூட அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (2)ல் உள்ள நியாயமான கட்டுபாடுகளுக்கான குறிப்பிட்ட காரணங்கள் “முழுமையானவை” என்றும் அதற்கு மேல் நீதித்துறை சேர்ப்பதற்கு எதுவும் இல்லை என்றும் சரியாகவே ஒரு முடிவுக்கு வந்தார்கள். அத்தகைய கருத்துகளுக்கு அரசின் மீது பொறுப்பை நிர்ணயிக்கும் வகையில் “கூட்டுப் பொறுப்புணர்வு” என்கிற கருத்தாக்கத்தை விரிவுப்படுத்தவும் பெரும்பான்மையான நீதிபதிகள் மறுத்துவிட்டார்கள். மாறுபட்ட கருத்தை பதிவு செய்த நீதிபதி பி.வி. நாகரத்னா, இந்த புள்ளியில் வேறுபட்டார். அமைச்சரின் கருத்துகள் அரசை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அரசு விவகாரங்கள் தொடர்பானதாகவும் இருந்தால் அரசை பொறுப்பாக்க முடியும் என்று அவர் சொன்னார். இந்த விவகாரம் பெரும்பாலும் அறிவுத்தளத்தில் இயங்குவதென்றாலும், அமைச்சர்களின் பொது கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு முக்கியமான விசாரணைகளை வேறு முகமைகளுக்கு நீதிமன்றங்கள் மாற்றிய நிகழ்வுகளும் உண்டு. சம்பந்தப்பட்ட மாநிலத்தின் காவல்துறை விசாரணை தொடர்ந்தால், அநீதி நிகழலாம் என்கிற அச்சத்தின் அடிப்படையிலேயே இவை செய்யப்பட்டிருக்கின்றன. அரசியல் தலைவர்களின் கருத்துகள் மிக அதிக அளவில் பரவுவதுடன் அவர்களது தொண்டர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் தீவிர கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்த தேவையிருக்கிறது.
இந்த விவாதங்களின் ஊடாக, நீதிமன்றம், அரசியல் சாசன மீறல்கள் அல்லது நடவடிக்கை எடுக்கக் கூடிய சிவில் தவறுகள் உள்ளிட்ட பல கொள்கைகளைப் பற்றியும் தெளிவுப்படுத்தியதோடு, விளக்கமளித்தும் உள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக ஒரு அமைச்சர் பேசினார் என்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்பதும் ஆனால் அது ஒரு தீங்கையோ, இழப்பையோ விளைவித்தால் நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒன்று என்பதுமே பெரும்பான்மை கருத்தின் முடிவாக இருந்தது. ஆனால் “அரசியல் சாசன மீறல்” என்பதை வரையறுக்கக் கூடிய செயல்கள் மற்றும் விடுபடல்களுக்கான முறையான சட்டக்கட்டமைப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தை நீதிபதி நாகரத்னா கொண்டிருந்தார். இந்த அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் தனியாருக்கு எதிராகவும் செயல்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த பார்வை வரவேற்கத்தக்க ஒன்றே. இந்த உரிமைகள் ‘செங்குத்தானது மட்டுமா - அதாவது அரசுக்கு எதிராக மட்டுமே செயல்படுத்தப்படக்கூடியவையா - அல்லது ஒரு நபரால் மற்றொருவருக்கு எதிராக செயல்படுத்தக்கூடிய ‘கிடைமட்ட அளவிலானதுமா என்ற கேள்வியை இது தீர்த்து வைக்கிறது.
This editorial was translated from English which can be read here.