ஒரு பாலீர்ப்பு திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பது, சட்டமியற்றும் மன்றத்தின் அதிகார எல்லையை ஆக்ரமிக்கும் நடவடிக்கை என்ற அச்சம் இருந்தபோதிலும் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஒரு பாலீர்ப்பு குற்றமற்றது என்று 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் இயல்பான விளைவாகவே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கும் யோசனையை மனுதாரர்கள் கருதுகிறார்கள். ஆனால் எதிர்பாலீர்ப்புதான் இயல்பான ஒன்று என்கிற புரிதல் வழியாக திருமணங்களை பார்க்கும் பார்வையிலிருந்து விலகவேண்டிய தேவையில்லை என்று அரசு கருதுகிறது. அப்படி ஒரு மாற்றம் வரவேண்டுமானால்கூட, அது சட்டமியற்றும் மன்றங்களிலிருந்துதான் வர வேண்டும் என்றும் கருதுகிறது. இந்தியாவில் திருமணச் சட்டங்களின் விதிகளை, குறிப்பாக 1954ஆம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டம் ஒரு பாலீர்ப்பாளர்களிடையே திருமண உறவுகளை அனுமதிப்பதாக புரிந்து கொள்ளா வேண்டுமா என்பதுதான் இப்போது நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்வி. இந்த சட்டம் எந்த இரண்டு தனி நபர்களுக்கும் இடையில் திருமணத்தை நடத்த அனுமதிக்கிறது என்பதோடு தமது தனிப்பட்ட சட்டங்களின் கீழ் தங்கள் திருமணங்களை பதிவுசெய்ய முடியாதவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த 18 வயதுக்கும் மேற்பட்டவர்களிடையே ஒருமித்த உறவை குற்றமற்றதாக்குவதன் மூலம் ஒரு பாலீர்ப்பு பற்றி சமூகத்தில் நிலவும் களங்கத்தை நீக்கியிருப்பதாக அரசு வாதிட்டாலும் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை அது வழங்கவில்லை. தவிர, எதிர்பாலீர்ப்பு தம்பதிகளின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளவும் அரசுக்கு உரிமை இருப்பதாகச் சொல்கிறது. ஒரு பாலீர்ப்பாளர்களை திருமணம் என்கிற வரையறையிலிருந்து விலக்கி வைப்பதில் எந்த பாகுபாடும் இல்லை என்றும் அரசு கூறுகிறது.
சமத்துவ நெறிமுறையைப் பொறுத்தவரை, மையப் பிரச்சினை சிக்கலானது ஒன்றும் அல்ல. திருமணமான எதிர்பாலீர்ப்பு தம்பதிகளுக்கு இருக்கும் எந்தவொரு சிவில் உரிமையும் ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மறுக்கவியலாது என்பதை அங்கீகரிக்கலாம். சொத்து மற்றும் வாரிசு பிரச்சினைகளில் எழக் கூடிய இயல்பான விளைவுகள், தீர்க்க முடியாத பிரச்னைகளாக இருக்காது. ஒரு பாலீர்ப்பு திருமணங்களை அங்கீகரிப்பதற்கு எதிராக, மத நெறிமுறைகளையும் கலாச்சார விழுமியங்களையும் முன்னிறுத்தும் மத்திய அரசின் மற்றொரு வாதம் பலவீனமானதாக இருப்பதோடு, போதுமானதாகவும் இல்லை. அது நம்பிக்கையை அல்லது சமூக விழுமியங்களை குலைத்துவிடும் என்கிற வாதம் பயனற்றது. திருமணத்தை நிறைய பேர் ஒரு சடங்காக அல்லது புனித ஒன்றிணைதலாக கருதுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதுவே சமூக, பொருளாதார ஒப்பந்தம் என்ற அதன் அடிப்படைத் தன்மையை குறைத்து மதிப்பிடவும் ஒரு பாலீர்ப்பாளர்களுக்கு சம அந்தஸ்தை மறுக்கவும் போதுமானதாக இல்லை. ஒரு பாலீர்ப்பு திருமணங்களை அங்கீகரிப்பது என்ற வடிவத்தில் இதற்கான தீர்வு இருக்க வேண்டுமா என்பதும் அப்படி இருந்தால் அது நீதிமன்ற தலையீடு மூலம் செய்வதா அல்லது சட்டமியற்றும் மன்றம் மூலம் செய்வதா என்பதும்தான் கேள்வி. அனைத்து மதங்களின் தனிப்பட்ட சட்டங்களையும் பாதிக்கக்கூடிய தொலைநோக்கு மாற்றங்களைக் கொண்டு வருவதில் சட்டமியற்றும் மன்றம் ஈடுபட வேண்டும் என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதான். இதை ஒரு கொள்கைப் பிரச்சினையாகக் கருதி, நீதிமன்றங்களுக்கு இடமளிக்காத ஒரு பொறுப்புள்ள அரசு, பாலின வேறுபாடின்றி, எந்த இரண்டு நபர்களுக்கும் திருமணம் செய்துகொள்ளும் அல்லது ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்குமான உரிமையை பரிசீலிக்க தன்னிச்சையாக செயல்படும். பற்றியெரியும் சமூகப் பிரச்னையில் சட்டமியற்றும் மன்றத்தின் செயலற்ற தன்மை நீதிமன்ற தலையீடுக்கு வழி செய்வதோடு அதை நியாயப்படுத்தவும் செய்யும்.
This editorial has been translated from English, which can be read here.