அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் சமீபத்திய மிக அதிகமான 75 அடிப்படை புள்ளி விகித ஏற்றத்தின் பின்னணியிலும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில்தான் முழுக் கவனமும் இருக்கிறது என்கிற அமெரிக்க மத்திய வங்கியின் தெளிவான செய்தியின் பின்னணியிலும் டாலரின் மதிப்புக் கூடி வரும் நிலையில், பிற நாணயங்களோடு ரூபாய் மீண்டும் புதியவொரு அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. வெள்ளி கிழமையன்று இன்ட்ராடே வர்த்தகத்தில் (ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்பனை செய்தல்) முதன் முறையாக இந்திய நாணயம் டாலருக்கு எதிராக 81-புள்ளியை கடந்து மதிப்புக் குறைந்தது. அந்த வாரம், மிகப்பெரிய வீழ்ச்சியுடனேயே முடிந்தது. நிலையற்ற தன்மையை இலகுவாக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு காரணமாக அவ்வப்போது ரூபாயின் வீழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு வந்தது. செப்டம்பர் 16 வரையில் 12 மாதங்களுக்கும் மேலாக இந்தத் தலையீடுகள் காரணமாக ஏற்பட்ட ஒட்டுமொத்த தாக்கத்தைப் பார்த்தால், ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணியின் குறிப்பிட்ட காரணிக்களுக்கான நிதி கையிருப்பு 94 பில்லியன் டாலர் வரை குறைந்து தற்போது 545.65 பில்லியன் டாலரில் இருக்கிறது. டாலருக்கு நிகராக மதிப்பு இழந்து வருவது இந்திய ரூபாய் மட்டுமல்ல என்பது, தங்களது வணிகத்தின் தடைபடாத செயல்பாடுகளுக்காக மூலப் பொருட்களையோ சேவைகளையோ இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்குப் பெரிய ஆசுவாசத்தைத் தராது. தொற்றுக்காலத்துக்குப் பின் மீண்டும் வலுவான ஒரு அடித்தளத்தை அமைக்கும் அளவுக்கு உள்ளூர் தேவைகள் இல்லாத நிலையில், அதிகரித்து வரும் விலைகளோடு அந்த நிறுவனங்கள் போராடிக்கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக ஏறிய நிலையில் இருக்கும் பண வீக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்துக்கு, அதிக இறக்குமதி செலவுகள் கூடுதல் பண வீக்க அழுத்தத்தைத் தரும். இதன் காரணமாக, விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முனையும் நிதிரீதியான கொள்கைகளை வகுப்பவர்களின் முயற்சிகள் சிக்கலாகும்.
கச்சா எண்ணையின் இந்திய தொகுப்புக்கான விலை பெருமளவில் குறைந்து, போருக்கு முந்தைய விலைக்குச் சென்றுவிட்டது. ஆனால், 2022ல் இதுவரை டாலருக்கு நிகராக ரூபாய் 8 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிப்ரவரி 24க்குப் பிறகுதான் இந்த வீழ்ச்சி பெரும்பாலும் நடந்தது. கச்சா எண்ணையின் விலை குறைவால் ஏற்பட்ட சாதகங்களை, ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி பெருமளவில் பின்னுக்குத் தள்ளிவிடும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் பெரும்பாலான நாட்களில் உள்ளூர் சொத்துகளை வாங்கத் தொடங்கிய வெளிநாடுகளில் உள்ள போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் கூட (பின்னர் எப்போதாவது லாபம் கிடைக்கும் என்கிற நோக்கத்தில் முதலீடு செய்பவர்கள்) கடந்த இரண்டு அமர்வுகளில் மீண்டும் இந்திய பங்குகள் மற்றும் கடன்களின் நிகர விற்பனையாளார்களாக
மாறியிருக்கிறார்கள். இதன் காரணமாக 2022ல் இதுவரை அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீடுகள், மொத்தமாக 20.6 பில்லியன் டாலர்களை இந்திய பங்கு முதல் மற்றும் கடன் சந்தைகளில் இருந்து வெளியே எடுத்திருக்கின்றன. மூன்று வருடங்கள் நடந்த தொடர்ச்சியான நிகர முதலீடுகளுக்குப் பின்னர் இது நடந்திருக்கிறது. குறைந்தபட்சம் கூடுதலாக 125 அடிப்படை புள்ளிகள் வரையில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற ஃபெடரல் ரிசர்வின் கணிப்பின் காரணமாக, இந்த வருடத்தின் இறுதிக் காலிறுதியில் இன்னும் அதிக அளவுக்கு நிதி வெளியேறும். ரூபாயின் அசலான, திறன்வாய்ந்த பணப் பரிமாற்ற விகிதம் அல்லது சராசரி வணிக மதிப்பு உணர்த்துவதுபோல இந்திய நாணயத்தின் மதிப்பு இப்போதும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற நிலையில், விகிதத்தை நிர்ணயிக்கும் ரிசர்வ் வங்கியின் குழு அடுத்த வாரம் மிகச் சிக்கலான ஒரு சூழலை கையாள வேண்டி வரும். வளர்ச்சி தடைபடாமல் விலைவாசியின் நிலைத்தன்மையை மீட்க போராடுவதோடு, ரூபாயின் மதிப்பு இன்னும் தீவிரமாகக் குறைவதை தடுக்கும் பொறுப்பில் அது இருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE