Main Text: இந்திய ரிசர்வ் வங்கியின் மிகச் சமீபத்திய கொள்கை அறிக்கையின்படி, நாணயக் கொள்கையின் முக்கிய கவனத்துக்குரிய விஷயமாக விலை நிலைத்தன்மை இருக்க வேண்டும். குறிப்பாக “நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் விலை உத்வேகம் அதிகமாக” இருக்கும் என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புக் கொண்ட இந்த காலகட்டத்தில் இது மிக முக்கியம். ரெபோ வட்டி விகிதத்தின் அளவுகோலை 35 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தி, வட்டியை 6.25 சதவீதத்திற்கு உயர்த்திய நிதிக் கொள்கை குழுவின் முடிவுக்கான காரணத்தை பற்றி விளக்கியவர், பண வீக்கத்தின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் “அதற்கெதிரான போர் இன்னும் முடியவில்லை” என்று அழுத்தம்திருத்தமாகச் சொன்னார். சில்லறை பணவீக்கம், ஏற்கத்தக்க உச்சகட்ட அளவைவிட 6 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறது. இந்த நிதியாண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் அதிகமாகி, பின்னர் குறைய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. நிதிக் கொள்கைக் குழுவைப் பொறுத்தவரையில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் பண வீக்க கணிப்பை 6.7 சதவீதம் என்ற அளவில் தக்கவைத்துக் கொண்டது. ஆனால் 3 மற்றும் 4ஆம் காலாண்டிற்கான கணிப்புகளை 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி முறையே 6.6 சதவிகிதம் மற்றும் 5.9 சதவிகிதம் என்கிற அளவில் வைத்தது. இதன்படி பார்த்தால், பணவீக்கம் பற்றிய எதிர்பார்ப்புகள் நிதிக் கொள்கை குழுவின் கட்டாய 4 சதவிகித இலக்கிலிருந்து தற்போது வெகுவாக விலகியிருப்பதையே உணர்த்துகிறது. இதைவிட மோசமானது என்னவென்றால், பெரும்பாலான துணைக் குழுக்களின் விலை அழுத்தங்கள் இருந்த நிலையில், மைய பணவீக்கமும் அல்லது நிலையற்ற உணவு - எரிபொருள் செலவுகளை அகற்றும் விலை ஆதாயங்களும் 6 சதவிகிதம் என்கிற அளவில் விடாப்படியாக நீடிக்கிறது. விலை நிலைத்தன்மை பற்றி நம்பிக்கையளிக்கக்கூடிய கண்ணோட்டமாக இது இல்லை. குறிப்பாக, நிறுவனங்கள் அதிக உள்ளீட்டு செலவுகளை செய்யத் தொடங்கும் போது, சேவைகளில் மீண்டும் எழுந்துள்ள தேவை விலை உயர்வைத் தூண்டும் என்று கருதும் நிலையில், இது நம்பிக்கையளிப்பதாக இல்லை. ரிசர்வ் வங்கியின் கொள்கைக் குழு அதன் முடிவுகளை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கவில்லை. ஆறு உறுப்பினர்களில் ஒருவர் வட்டி விகிதத்தை ஏற்றுவதற்கு எதிராக வாக்களித்திருந்தார். பொருளாதாரம் தடுமாற்றத்துடன் மீண்டு வரும் போது அதை
மட்டுப்படுத்த அவர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. “தாராள பணப் புழக்கத்தை திரும்ப பெறுவதன் மீது கவனம் செலுத்துவது” பற்றிய கொள்கை முடிவில் இரு உறுப்பினர்கள் உடன்படவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் “பணவீக்க எதிர்பார்ப்புகளை நிலைநிறுத்தவும், மைய பணவீக்க நிலைத்தன்மையை உடைக்கவும், இரண்டாவது சுற்றின் விளைவுகளை கட்டுப்படுத்தவும் மேலும் அளவிடப்பட்ட நிதிக் கொள்கை நடவடிக்கை தேவை” என்பதில் உறுதியாக இருந்தார்கள். விலை நிலைத்தன்மையை நிலைநிறுத்துவது இறுதியில் “நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்த” உதவும் என்று அவர்கள் சொன்னார்கள். எப்படியும் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கொள்கை அறிக்கை, “இரண்டாம் கட்ட விளைவுகள் எட்டு காலாண்டுகள் தாண்டியும் பண வீக்கத்தை அதிகமாக வைத்திருக்கும்” என்றும் அதனால் “பணவீக்கத்தை நிலைநிறுத்த கொள்கை ரீதியான இடையீடுகள் செய்வது முக்கியம்” என்றும் சொன்னது. சமீபத்திய உயர்வுக்கு பின்னும் கூட, பணவீக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அளவுகோல் வட்டி விகிதம் இப்போதும் இணக்கமாக இருப்பதாக ஆளுநர் தாஸ் சுட்டிக்காட்டினார். ரிசர்வ் வங்கியின் நவம்பர் மாத நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பின் படி, பதிலளித்தவர்களில் கணிசமானவர்கள் ஒரு வருடத்துக்கு முன்பே விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. நுகர்வோர் மனநிலையில் இது மட்டுமே மிகப்பெரிய இழுபறியாக இருக்கிறது. இறுதியில், சேமிப்பாளர்களும் நுகர்வோரும் ஒரு நடுத்தர காலம் வரையில் விலை நிலையாக இருக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் மீண்டும் சேமிப்பை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் செய்தால் அது நீடித்த பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்தும்.
This editorial has been translated from English, which can be read here.