டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வங்கிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் 2600 கோடி ரூபாயை ஒதுக்க முடிவெடுத்திருக்கிறது. உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பணம் செலுத்தும் முறையான ரொக்கத்துக்கு மாற்று வழிகளை விரிவுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் இந்தியாவின் வரவேற்கத்தகுந்த முயற்சிகள் மீது இது கவனத்தை குவித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ‘பேமெண்ட்ஸ் விஷன் 2025’ என்கிற ஆவணம், நிதிரீதியான உள்ளடக்கிய அணுகுமுறையை ஆதரிக்கும் அதே நேரம் ‘பணம் செலுத்தும் முறைகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மையை ஊக்குவிக்கின்றன‘ என்று குறிப்பிடுகிறது. டிஜிட்டல் கட்டண முறைகளை விரைவாகவும் பரவலாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவதும், அதிக மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும், குறிப்பாக பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு ரொக்கத்தை சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்க உதவியுள்ளன என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இந்த கட்டணப் புரட்சியின் மையத்தில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் அதன் யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகியவை உள்ளன. இந்த மாற்றத்தை ஒருங்கிணைப்பத்தில், பரிவர்த்தனையை செயல்படுத்தும் முக்கியமான ஒரு கருவியாக யுபிஐயின் பங்கு இருந்திருக்கிறது. 2022 டிசம்பரில், யுபிஐ வசதி செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த மாதாந்திர அளவு கிட்டத்தட்ட 783 கோடியாக இருந்தது. இதன் மதிப்பு ரூ .12.8 லட்சம் கோடியை தாண்டியது. இது முந்தைய வருடத்தை விட 71 சதவிகித அளவு அதிகரிப்பு மற்றும் மதிப்பில் 55 சதவிகித அதிகரிப்பு என்கிற நிலையில் கடந்த மாதம் யுபிஐ அளவு, டிசம்பர் 2017ல் நடந்த பரிவர்த்தனைகளை விட 54 மடங்கு அதிகமாக இருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட அதன் மதிப்பு 98.6 மடங்கு அதிகமாக இருந்தது.
கோவிட் -19 தொற்றுநோயால் விரைவுபடுத்தப்பட்டாலும், டிஜிட்டல் கட்டண முறை பயன்பாடு, யுபிஐ முறையை ஆதரித்த வங்கிகளின் எண்ணிக்கை மற்றும் உள்நாட்டு ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் ஆகியவற்றாலும் சாத்தியமாகியிருக்கிறது. டிஜிட்டல் பயன்பாடுகளை வழங்கும் தனியார் நிதி தொழில்நுட்பம் அல்லது ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் முக்கிய சலுகைகளுடன் சந்தாதாரர்களுடனான பிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த வகை கட்டணங்களை சேர்த்திருக்கின்றன. அதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெரிய அளவில் நடப்பதற்கு உதவியாக இருந்திருக்கின்றன. ஆனால், வங்கித் துறை அதன் முக்கிய வணிக வளர்ச்சிக்கு பணம் செலுத்தும் சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையில் உள்ளது. காரணம், அது மாதிரியான பரிவர்த்தனைகளை ஆதரிப்பதற்கும் பெறுவதற்குமான கட்டமைப்பு செலவுகள், ஃபின்டெக் மற்றும் பெரிய தொழில்நுட்ப போட்டியாளர்களை விட முறையற்ற அளவில் அதிகமாக இருக்கிறது. அரசின் இந்த புதிய ஊக்குவிக்கும் முயற்சி, கடன் வழங்குநர்கள் அவர்கள் விதிக்கும் வணிக தள்ளுபடி விகிதத்தை தள்ளுபடி செய்வதில் முன்கூட்டி செலுத்தப்பட்ட கமிஷன்களுக்கு பதிலாக கட்டணங்கள் வழங்குவதன் மூலம் களத்தை சமப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சவால்கள் நிறைய இருக்கின்றன. தனிநபர் செலவின் தரவுகள் உருவாக்கப்படுவதை கொள்கையை வகுப்பவர்கள் உடனடியாக வரையறுத்துக் கட்டுப்படுத்த வேண்டும். கூடவே, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து கட்டண வழிமுறையை பாதுகாக்கும் பொருட்டு தொடர்ந்து பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
This editorial was translated from English, which can be read here.