ஒரு நாட்டின் சட்டங்கள், நீதி மற்றும் நியாயம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்றிருப்பதைப் போலவே, அவை காலத்திற்கேற்றவையாகவும் இருக்க வேண்டும். இதை மேற்கோள் காட்டித்தான் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தார்வாட் அமர்வு, ஒப்புதல் அளிப்பதற்கான வயது விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கு இந்திய சட்ட ஆணையத்தை வலியுறுத்தியது. ‘கள யதார்த்தங்களை பரிசீலிக்க வேண்டும்’ என்றும் சொன்னது. 16 வயதுக்கு மேற்பட்ட (ஆனால் 18 வயதுக்குட்பட்ட) பெண்கள் காதலில் விழுந்து, காதலர்களுடன் வீட்டைவிட்டு வெளியேறது தொடர்பான பல வழக்குகளை எதிர்கொண்ட நிலையில், இந்த பரிந்துரையை செய்ய உந்தப்பட்டதாக நீதிபதிகள் சொன்னார்கள். போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதியப்படும்போது பாலியல் உறவில் பெண்ணின் ஒப்புதல் ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இயற்றப்பட்ட இந்த சட்டம், பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை 16லிருந்து 18லிருந்து உயர்த்தியது. ஆனால் நடைமுறையில் இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் இளம்பருவ வயதினருக்கிடையில் (16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) பரஸ்பர ஒப்புதலுடன் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது உள்ளிட்ட காதல் ஈடுபாடு இருந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா வழக்குகளிலும் 18 வயதுக்கு குறைவான பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் வழக்கு பதிவு செய்கிறார்கள். பாலியல் உறவு இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஆணின் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சில நேரங்களில் அந்த சிறுவனுக்கும் 18 வயதுக்கும் குறைவாக இருக்கலாம். அல்லது திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயதை அப்போதுதான் அடைந்தவராக இருக்கலாம். பாலியல் தாக்குதல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டதன் விளைவு வாழ்க்கையையே மாற்றி அமைப்பதாக இருக்கும். அப்படி இருக்க வேண்டுமென்றுதான் அந்த சட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்கள் குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் நிலையில், பெற்றோர்களின் ஆட்சேபணையை எதிர்க்கும்போது சிறுமிகள் அரசு காப்பகங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இது சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கையை சிதைக்கும் தன்மை கொண்டது. சட்டத்துடனான இந்த மோதலுக்கு பிறகு குடும்பங்களும் சிதைந்து போகின்றன.
குழந்தைகள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் மீது பாலியல் வன்முறையை செலுத்தும் எந்தவொரு கட்டாய முயற்சிகளிலிருந்தும், சுரண்டலை நோக்கமாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்படுவதிலிருந்தும் அவர்கள் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இளம்பருவ ஈர்ப்பின் யதார்த்தங்கள் மற்றும் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் ஒப்புதலை உறுதிப்படுத்துதல் ஆகியவை விசாரணைக்கும் வழக்கு தொடருவதற்கும் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டும். தங்களுக்குப் பொருந்தக் கூடிய சட்டம் பற்றிய அறிவு சிறுவர்களுக்கு இருக்குமா என்கிற கேள்வியையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருக்கிறார்கள். குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜே.எஸ் வர்மா கமிஷன், ஒப்புதலுக்கான வயதை 16ஆகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. போக்சோவிலும் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றது. இப்போது சட்டத்தை உண்மையாக அமல்படுத்துவதில் இந்திய சட்ட ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு என்கிற அதன் அசலான நோக்கத்திற்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.